தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 15 March 2014

நதியோடும் பாதையில்...(36)

ஜனநாயகம் - மதவாத எதிர்ப்பு - சமூகநீதி



தமிழகம் இதுவரை கண்டிரா அளவில், வரும் நாடாளு மன்றத் தேர்தலில், பல அணிகள் களத்தில் நிற்கின்றன. எப்போதும் தமிழ்நாட்டில் இரண்டு அணிகள் மட்டுமே நேருக்கு நேராக மோதிக்கொள்ளும். 1952ஆம் ஆண்டுத் தேர்தலில், காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் அணிகள். 1957 தொடங்கி 1977 வரை காங்கிரஸ் - தி.மு.க. அணிகள். 1977 முதல் சென்ற தேர்தல் வரை தி.மு.க. - அ.தி.மு.க. அணிகள். இதுதான் தமிழகத் தேர்தல் வரலாறு. இடையிடையே, ராஜாஜி தலைமையிலான சுதந்திராக் கட்சி (1957 தேர்தல்), ஜானகி அம்மையார், சிவாஜிகணேசன் ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க.(ஜா), தமிழக முன்னேற்ற முன்னணி ஆகிய கட்சிகள் (1989 தேர்தல்), வைகோவின் ம.தி.மு.க. (1996 தேர்தல்)  ஆகியவை மூன்றாவது அணிபோலத் தலையெடுத்தாலும் நின்று நிலைக்கவில்லை.

சுதந்திராக் கட்சி 1967 தேர்தலிலேயே, தி.மு.க. கூட்டணிக்குள் வந்தது. பிறகு, 1972இல் ராஜாஜியின் மரணத்திற்குப் பின்பு, கட்சியே இல்லாமல் போய்விட்டது. அ.தி.-மு.க. (ஜா), த.மு.மு ஆகியன ஒரே ஒரு தேர்தலில் மட்டுமே உயிர் வாழ்ந்தன. அதற்குப் பின் ஜா, ஜெ.விற்குள் கரைந்தது. சிவாஜி கணேசன் கட்சி மறைந்தது. 1993ஆம் ஆண்டு தனிப் பெரும் கட்சி போல எழுந்து, 1996 தேர்தலில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ம.தி.மு.க., அத்தேர்தலுக்குப் பின் தனக்குரிய செல்வாக்கை இழந்துவிட்டது-. பிறகு, தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் மாறி மாறிக் கூட்டணி சேர்ந்து, ஒரு துணைக் கட்சிஎன்னும் நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம்என்று பல்வேறு அரசியல் கட்சிகள் அவ்வப்போது முழங்கினாலும், அந்த முழக்கத்தின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை. நடிகர் கார்த்திக்கின் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி வரை அந்த முழக்கத்தை முன்வைத்து, அதனை பலே பலே, நல்ல தமாஷ்என்னும் நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். இப்போது கூட, புதிதாய்த் தோன்றியுள்ள ஒரு கட்சி, 2016இல் பாய்வோம், 2021இல் ஆள்வோம் என்று கூறி, அந்த தமாஷ்காட்சியைத் தொடர்கின்றது-.
எனினும், 2007இல் விஜயகாந்த் தலைமையில் உருவான தே.மு.தி.க., தனக்குத் தனியாக ஒரு வலிமை இருப்பது போன்றத் தோற்றத்தைக் கொடுத்தது. 2009இல் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணித் தலைமையை ஏற்றது. அதன் விளைவாக, அடுத்த மூன்றாண்டுகளில் சிக்கிச் சீரழிந்தது. தான் பெற்ற 29 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேரையும் இழந்து நிற்கின்றது.
இன்றைக்கு முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, அ.தி.மு.க. தனியாக ஓர் அணி, பா.ஜ.க. தலைமையில் நான்கைந்து கட்சிகள் ஒருங்கிணைந்து -ஓர் அணி, இரண்டு பொதுவுடைமைக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அணி, காங்கிரஸ் தனி - இவ்வாறாக ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்நிலையும் கூட ஒரு தோற்றம்தான். பொதுவுடைமைக் கட்சிகள், காங்கிரஸ் அணி என்பன பெயரளவில்தான் அணிகள். பல தொகுதிகளில் அந்த அணிகளால், கட்டுத் தொகையைக் கூட மீட்க முடியாது என்னும் உண்மை அவர்களுக்கே தெரியும்.
1952ஆம் ஆண்டுத் தேர்தலில், ஏறத்தாழ 60 இடங்களில் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாய் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, 1957இல், தி.மு.க. தேர்தல் களத்திற்கு வந்தபின், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. மண்ணுக்கேற்ற மார்க்சியக் கொள்கையை அவர்கள் ஏனோ முன் வைக்கவில்லை. அவர்கள் முன்னெடுத் திருக்க வேண்டிய, தேசிய இனச்சிக்கல், வருண - சாதி எதிர்ப்பு ஆகியனவற்றைத் தி.மு-.க. சரியாகக் கையில் எடுத்ததால், தி.மு.க.வே இங்கு இடதுசாரி இயக்கமாகக் கருதப்பட்டது. அதனால், கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி அடையவில்லை.
1967ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்துவிட்டாலும், சென்ற 2011 தேர்தல் வரை, காங்கிரஸ் ஒரு சக்தியாகவே பார்க்கப்பட்டது.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் சென்று விடுமோ என்று அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்துவிடுமோ என்று தி.மு.க.வும், அக்கட்சிக்கு மாறி மாறிக் கூடுதலான இடங்களைத் தேர்தலில் கொடுத்து வந்தன. 2011 சட்டமன்றத் தேர்தலில் கூட, 63 இடங்கள் அதற்கு அள்ளி இறைக்கப் பட்டன. ஆனால் இன்று அக்கட்சி, தன் செல்வாக்கை முழுமையாக இழந்து தனித்து விடப்பட்டுள்ளது. 1960களின் தொடக்கத்தில் தளரத் தொடங்கிய காங்கிரஸ், அரை நூற்றாண்டிற்குப் பிறகு இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
அதனால் இப்போது அந்த இடத்தைப் பா.ஜ.க. கைப்பற்ற முனைகிறது. காங்கிரசுக்கு மாற்றாகப் பா.ஜ.க.வை ஏற்பதென்பது, சட்டிக்குப் பயந்து அடுப்புக்குள் பாய்கிற செயலாக ஆகிவிடும்.
பா.ஜ.க. இரண்டு தந்திர உத்திகளைப் பின்பற்றுகிறது. தன்னுடைய மதவாதம் என்னும் உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு, வளர்ச்சி நாயகன் மோடி என்னும் முகமூடியை அணிந்து வருகிறது. அடுத்ததாகத் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்க முயல்கிறது. அதன் மூலம் தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டு விட்டதைப் போன்ற ஒரு மாயையைக் கட்டமைக்கின்றது.
அந்த அடிப்படையில் இப்போது தி.மு.க.விற்கு எதிராக இரண்டு அணிகள் உள்ளன என்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் அவை இரண்டு அணிகள் இல்லை. இரண்டாகப் பிரிந்து நிற்கும் ஒரே அணிதான். அந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் கோட்பாடு களின் அடிப்படையில் பெரிய வேறுபாடு எதனையும் நம்மால் பார்க்க முடிய வில்லை. ஓர் அணி பாபர் மசூதியை இடித்தது. இன்னொரு அணி அந்தக் கரசேவைக்கு ஆள்அனுப்பியது. ஓர் அணி ஒரு மணல் திட்டை ராமர் பாலம் என்றது. இன்னொரு அணியோ அதனை இந்துக்களின் புனித சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது-. ஓர் அணிக்குப் பார்ப்பனியச் சித்தாந்தம் தலைமை தாங்குகிறது. இன்னொரு அணிக்கு ஒரு பார்ப்பனப் பெண்மணியே தலைமை தாங்குகிறார். ஆக மொத்தம் இரண்டும் ஒன்றுதான்.
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, மூன்று கோட் பாடுகளை முன்வைக்கிறது. ஜனநாயகம், மதவாத எதிர்ப்பு, சமூக நீதி ஆகிய அம்மூன்று கொள்கைகளுக்கும் ஏற்பவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. அதனால்தான் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்னும் அளவிற்குத்  தன் கோரிக்கையை அவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது-. ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையோ, பொருளாதார அடிப் படையில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீடு கேட்கிறது-. இது சமூகநீதிக் கோட்பாட்டிற்கே எதிரானது. காலகாலமாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் சாதியின் பெயரால்தான் இங்கு மறுக்கப் பட்டன. பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர் என்பதற்காக யாருக்கும் எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. மேலும் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் இல்லை. இதுபோன்ற சிறிய புரிதல் கூட இல்லாமல் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மதவாதத்தை மட்டுமே கையில் ஏந்தி இருக்கிற அவ்விரு அணிகளும், ஜனநாய கத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராகவே தங்கள் பயணங்களைத் தொடர்கின்றன. இரண்டு அணிகளுக்கும் தில்லிப் பிரதமர்கனவு என்பதைத் தாண்டி, சமூகநீதி, சமத்துவம் போன்றனவற்றில் எவ்வித ஈடுபாடும் இல்லை. எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது, நம் நாட்டின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியன வற்றில் நாம் காலூன்றி நிற்கப்போகிறோமா அல்லது மதவாதம், ஆதிக்கப் போக்கு ஆகியனவற்றுக்கு இரையாகப் போகிறோமா என்பதை நம் வாக்குகள் தீர்மானிக்க இருக்கின்றன.
இந்த நிலையை உணர்ந்து, இடது சாரிக் கட்சிகள் தங்களின் நிலைப் பாட்டை முடிவு செய்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் வழக்கம்போல் மீண்டும் ஒருமுறை வரலாற்றுப் பிழையை நிகழ்த்தியிருக்கிறார்கள். 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை ஆதரித்துவிட்டு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் தவற்றை உணர்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இப்போது செய்கிற பிழையை உணர அவர்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளும்வரை, காலமும் மக்களும் காத்திருக்க முடியாது.

ஆதலால் நம் கடமை உணர்ந்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து நாட்டைக் காப்பாற்றுவோம், நம்மையும் காப்பாற்றிக் கொள்வோம்!.
(அவ்வப்போது சந்திப்போம்)

6 comments:

  1. நம் கடமை உணர்ந்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து நாட்டைக் காப்பாற்றுவோம், நம்மையும் காப்பாற்றிக் கொள்வோம்!.

    ReplyDelete
  2. அய்யா மாற்றுத்திறனாளிகள் குறித்து ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் (1/3/2010) தாங்கள் பேசிய காணொளிக் காட்சியை பதிவிடுங்கள் அய்யா.

    ReplyDelete
  3. அய்யா தங்களின் அரசியல் கணக்கு நிகழ்ச்சி ஒரு அருமையான, புதிய,முயற்சி. பல செய்திகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. டான் அசோக், ப்ருனோ போன்ற தோழர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். தங்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் இயக்க பற்றாளர்களுக்கு ஒரு பயிற்சி களமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அது மேலும் மெருகேற வாழ்த்துக்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. நான் உங்கள் பதிவுகளில் மறுவின செய்ய ஆசைப்படுகிறேன்,ஆனால் என்னால் உங்கள் பக்கத்தில் இணையவே முடியவில்லை,என்ன பிரச்சனை என்று தெரியவில்லை,நீங்கள்தான் என்னை உங்கள் பக்கத்தில் இணைக்க வேண்டும் .

    ReplyDelete
  5. அரசியல் கணக்கு நிகழ்ச்சியை நேற்று மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.
    இது ஒரு அரிய, புதிய யுக்தி.பாராட்டபட வேண்டிய ஒன்று தான்.
    இது மேலும் சிறக்க, தலைப்புகள் முன்னரே தெரிவித்து, அது சமந்தப்பட்ட செய்திகளை வரலாற்று பிழை இன்றி , தன் நம்பிக்கையோடு கருத்துகள் வைக்கப்படுமானால் பார்க்கும் தோழர்களுக்கு அது உதவியாகவும், ஏன் நம் இயக்க சாதனைகளையும், கொள்கைகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளவும் அன்நிகழ்ச்சி பயன்படும் என்று எண்ணுகிறேன். பங்கு பெரும் தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்

    ReplyDelete