தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 26 July 2014

அறிந்தும் அறியாமலும்…(13)

ஒன்றே இன்னொன்று

மார்க்சும், எங்கெல்சும்

கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்பதெல்லாம், கடவுள் உண்டு, இல்லை என்னும் வாதத்தின் வேறு பெயர்களே ஆகும். காலந்தோறும், நாடுகள் தோறும் இவ்வாதம் முடிவற்றதாகத் தொடர்ந்துகொண்டே உள்ளது.
உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை என்னும் சமரசப் போக்கும், “நாங்கள் கடவுள் என்கிறோம், நீங்கள் இயற்கை என்கிறீர்கள். விடுங்கள் இயற்கைதான் கடவுள் என்று ஒத்துப்போகும் போக்கும், ‘நழுவல் போக்குகளாகச் சிலநேரம் எழுவதுண்டு. திருமூலரின் ‘அன்பே சிவம்’ என்னும் பாடல் வரியை ஏற்றுக் கொள்வர் சிலர். “கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை விடுவோம், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குதானே?” என்று கேட்டு மறிப்பார் சிலர்.

இயற்கை, அன்பு, சக்தி முதலான எந்த ஒரு சொல்லும், ‘கடவுள் என்னும் கோட்பாட்டிற்குப் பொருந்திவரக் கூடிய, அதற்கு இணையான சொல் ஆக முடியாது. வாதத்தைத் தொடர விரும்பாதவர்களும், இயலாதவர்களும் ஏற்றுக்கொள்கின்ற ஓர் இடைநிலை ஏற்பாடுதான் அது!
நாம் ஆயிரக்கணக்கான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்புடையவர்கள். அவற்றுள் ஒன்றாகவே ‘அன்பு என்னும் உணர்ச்சி உள்ளது. அந்த ஒன்று மட்டுமே எப்படிக் கடவுளாக மாறும்? அப்படியானால் மற்ற உணர்ச்சிகளுக்கெல்லாம் என்ன பெயர்? மேலும், அன்பே கடவுள் என்றால், அறிவுக்கு என்ன பெயர்?
அவ்வாறுதான் ‘சக்தி என்பதும்! சக்தி என்றால் தமிழில் ஆற்றல். உலகில் உள்ள பொருள்(matter)களிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது. பொருளுக்கும், ஆற்றலுக்கும் (energy) உள்ள தொடர்பையும், அவை எந்த விகிதத்தில் எப்படி ஒன்று இன்னொன்றாக மாறுகின்றது என்பதையும் (E=mc2) தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து 1905ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் (Einstin)வெளியிட்டார். அதனைத்தான் பொதுச் சார்பியல் தத்துவம் (General Theory of Relativity) என நாம் அழைக்கின்றோம். பிறகு எப்படிப் பொருள் இல்லாமல் ஆற்றல் (சக்தி) மட்டும் கடவுளாகிவிடும்?
இயற்கைதான் கடவுள் என்பது, ஏற்றுக்கொள்ளக் கூடிய கூற்று போலத் தோன்றும். ஆனால் அதுவும் பிழையானதே! இறை நம்பிக்கையாளர்கள், மழையை, நெருப்பை, காற்றைக் கடவுள் என்று சிலவேளைகளில் கூறினாலும் (வருண பகவான், வாயு பகவான்), இவற்றையெல்லாம் கடவுள்தான் நமக்குத் தருகின்றார் என்றும் நம்புகின்றனர். பூமி, வானம், பேரண்டம் எல்லாவற்றையும் கடவுள்தான் படைத்தார் என்கின்றனர். அதாவது இயற்கையையே இயக்குகின்ற, இயற்கையை விஞ்சிய ஆற்றல் (Super natural power) ஒன்று இருப்பதாக எண்ணுகின்றனர். பிறகு எப்படி அவர்கள் இயற்கையைக் கடவுள் என ஏற்க முடியும்?
பேரண்டம் (Universe), உலகம், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்தும், அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறும் படைப்புக் கொள்கையை (Theory of Creation) நம்புவோரும், எதுவும், யாராலும் படைக்கப்படவில்லை, இயற்கையாக ஒன்று, இன்னொன்றாக மாறி வளர்ந்த வளர்ச்சியே உண்மையானது என்று கூறும் பரிணாமக் கொள்கையை (Theory of  Evolution) ஏற்போரும், ஒரு நாளும் ஒன்றுபட முடியாது. இவ்விரு கருத்துகளும், இரு துருவங்களாகவே நிற்கும்!
கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை. மாறாக, மனிதர்களே கடவுளைப்படைத்தார்கள். அதாவது, மனித மூளை என்னும் ‘பொருளில் இருந்து உருவான ‘கருத்துதான் கடவுள். ஆதலால், பொருள்தான் முதலில் தோன்றியது. கடவுள் என்னும் கருத்து பின்னால் தோன்றியது என்பதே பொருள் முதல் வாதம் (Materialism).
குயவர் இல்லாமல் பானை வர முடியுமா? தச்சர் இல்லாமல் நாற்காலி வர முடியுமா? எந்த ஒன்றும், ஆக்குவோன், படைப்போன் இல்லாமல் தானே உருவாக முடியாது. உலகமும் அப்படித்தான். படைத்தவன் இல்லாமல் தானே வந்திருக்க முடியாது. அந்தக் கடவுள் சிந்தனை(கருத்து)தான் முதலில்! பொருள்கள் எல்லாம், அந்தக் கருத்திலிருந்து பிறந்து வளர்ந்தவையே என்று கூறுவது கருத்து முதல் வாதம் (Idealism).
கடவுள் என்று கூறாமல், பிரம்மம், ஆன்மா(பரமாத்மா, ஜீவாத்மா) என இரண்டு சொற்களைக் கூறி, அவை இரண்டுமே ஒன்றுதான்(‘அஹம் பிரம்மாஸ்மி) என்கிறது ஓர் உபநிடதம். “உலகம் ஒரு மாயை. எல்லாம் வெறும் தோற்றம். ஆத்மா ஒன்றே உண்மை. பிரம்மமும், ஆத்மாவும் இரண்டில்லை, ஒன்றேதான் என்றார் ஆதிசங்கரர். இதனைத்தான் அத்துவைதம் (துவைதம் = இரண்டு, அ+துவைதம் = இரண்டில்லை) அல்லது மாயாவாதம் என்று கூறுகின்றனர். இந்த அத்வைதக் கொள்கையைத்தான், தன் வாழ்நாள் முழுவதும், வெவ்வேறு வடிவங்களில் உயர்த்திப் பிடித்தார் விவேகானந்தர். “தெய்வம் நீ என்று உணர் என்றார் பாரதியார். ஆக மொத்தம், யாக்ஞவல்லீயரின் உபநிடதக் கொள்கைதான், இந்து மதத்தின் கருத்து முதல் வாதமாகக் காட்சியளிக்கிறது.
உலகே மாயம் என்னும் கோட்பாட்டை உலகத்திற்கு அறிவித்த யாக்ஞவல்லீயர், ஜனக மன்னருக்கும் அதனை எடுத்துரைத்தாராம். அவரின் அறிவுத்திறன் கண்டு வியந்த மன்னர், 10 ஆயிரம் பசுமாடுகளையும், ஓர் இலக்கம் (ஒரு லட்சம்) பொற்காசுகளையும் பரிசாக அவருக்கு அளித்தாராம். “பசு மாடுகள், பொற்காசுகள் எல்லாம் மாயை. எனக்கு எதற்கு இந்த மாயத்தோற்றங்கள்?” என்று கேட்டு யாக்ஞவல்லீயர் அவை அனைத்தையும் புறக்கணித்துவிடவில்லை. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, இரண்டு பெண்களை மணந்து கொண்டு இன்பமாக வாழ்ந்தாராம்.
உலகே மாயம், வாழ்வே மாயம், பொருள்கள் எல்லாம் மாயம் என்று எழுதலாம். பேசலாம். ஆனால் பொருள்கள் இன்றி இவ்வுலகில் எவர் ஒருவராலும் வாழ முடியாது.
அது சரி...ஆனால், பொருள்கள் எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவைதானே  என்கின்றனர், கருத்து முதல்வாதிகள். பொருள்கள் படைக்கப்பட்டவைகளாக இருந்தால், அவை அழியக்கூடியனவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் தர்க்கம் (logic).
எந்தப் பொருளையும், யாராலும், கடவுள் உள்பட அழிக்க முடியவில்லை என்பதுதானே உண்மை. சிவபெருமான் ‘நெற்றிக் கண்ணைத் திறந்து எதிரில் உள்ளவரைச் சாம்பலாக்கி விட்டதாகப் புராணம் சொல்கிறது. சாம்பலும் இந்தப் பிரபஞ்சத்தில்தானே உள்ளது. முற்றுமாக அழிந்துவிடவில்லையே!
திடப்பொருளைத் திரவமாக்கலாம், திரவத்தைக் காற்றாக(வாயு) ஆக்கலாம். வடிவ மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியுமே அல்லாமல், ஒன்றுமே இல்லாத சூனியமாக்கிவிட முடியுமா? அப்படியானால் எந்த ஒன்றையும் முற்றாக அழிக்க முடியவில்லை என்றுதானே பொருள். அழிக்க முடியாத ஒன்று எப்படி ஆக்கப்பட்டிருக்கும்? சூனியம்(வெறுமை) ஆக்கமுடியாத ஒன்று, எப்படிச் சூனியத்திலிருந்து வந்திருக்க முடியும்?
நாம் காணும் பொருள் அனைத்தும், ஏற்கனவே உலகில் இருந்தவைதான். புதிதென்று ஏதும் இல்லை. ஒரு வீட்டில் புதிய கதவொன்று வந்துள்ளதென்றால், எங்கோ ஒரு பழைய மரம் வெட்டப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம். ஒன்றே இன்னொன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று, ஒன்றுக்காக இன்னொன்று இப்படித்தான் உலகம் இயங்குகின்றது.
உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வடிவத்திலிருந்து, இன்னொரு வடிவத்திற்கு மாறுகின்றன. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுகின்றன. மற்றபடி உருவாக்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை. நிகழ்வதெல்லாம் உருமாற்றமும், இடமாற்றமுமே! இவ்விரு மாற்றங்களுக்கும் மனித உழைப்பே அடிப்படையாக உள்ளது.
இந்த அடிப்படையில், உலகில் உள்ள அனைத்தும் கடவுளால் ஆக்கப்படவில்லை, மனித உழைப்பினால் ஆக்கப்படுகிறது என்னும் கோட்பாட்டை, 1848இல், சமூக விஞ்ஞானிகளான கார்ல் மார்க்சும், ஃபிரெடரிக் எங்கெல்சும் முன்வைத்தனர். ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம் (Dialectical Materialism) என்று அத் தத்துவத்திற்குப் பெயர் சூட்டினர்.

ஃபாயர்பாக்

ஃபிரடெரிக் ஹெகல்

அவர்களுக்கு முன்பே, அதற்கு வித்திட்ட ஜெர்மானியத் தத்துவாசிரியர்கள் இருவரை நாம் மறக்காமல் குறிக்க வேண்டும். ஒருவர், ஃபிரடெரிக் ஹெகல் (Fredrich Hegal - 1770 -1831). இன்னொருவர், ஃபாயர்பாக் (Feuerbach - 1804 - 1872) தத்துவத் துறையில், இவ்விருவரின் கொடையும் மிகப் பெரியது.
அறிஞர் ஹெகல்தான், இயக்கவியல் சிந்தனையை மிகத் தெளிவாக வெளியிட்டவர். “உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதனால் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கும். இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் அரிய செய்தியை அவரே வெளியிட்டார். ஆனால் இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் கடவுளே என்று நம்பிய கருத்து முதல்வாதியாக அவர் இருந்தார்.
கடவுளை மறுத்துப் பகுத்தறிவுக் கருத்தைச் சொன்னவர் ஃபாயர் பாக். அவர் இறுதியாக ஆற்றிய உரையின் சில பகுதிகளை, எழுத்தாளர் ஜவஹரின் நூல் (கம்யூனிசம் நேற்று - இன்று - நாளை) நமக்குத் தமிழில் தருகிறது.
இதோ அவ்வரிகள்:-
மனிதர்களைக்
கடவுளின் நண்பர்களாக இருப்பதிலிருந்து மனிதர்களின் நண்பர்களாக -
நம்பிக்கைவாதிகளாய் இருப்பதிலிருந்து சிந்தனையாளர்களாக -
பிரார்த்தனை செய்பவர்களிலிருந்து, உழைப்பவர்களாக -
சொர்க்கத்துக்கு மனுப் போடுபவர்களிலிருந்து, இந்த உலகத்தின் மாணவர்களாக -
பாதி மிருகம், பாதி தேவதை என்று ஒப்புக்கொள்ளும் கிறித்துவர்களிடமிருந்து, மனிதர்களாக - முழுமையான மனிதர்களாக -
ஆக்குவதையே என் கடமையாக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு இயங்கியலை ஹெகலும், பொருள்முதல் வாதத்தைப் ஃபாயர்பாக்கும் முன்வைக்க, இரண்டையும் செழுமைப்படுத்தி, ஒருங்கிணைத்து (synthesis) ‘இயங்கியல் பொருள்முதல் வாதத்தை இவ்வுலகிற்கு அளித்தனர், மார்க்சும், எங்கெல்சும்!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com

நன்றி: tamil.oneindia.in

10 comments:

  1. “//கடவுளின் நண்பர்களாக இருப்பதிலிருந்து மனிதர்களின் நண்பர்களாக -///
    இதைத்தானே ஐயா தந்தை பெரியாரும் கூறினார்
    கடவுளை மற , மனிதனை நினை
    அருமையான மிகவும் பயன்தரும் கட்டுரை ஐயா
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. நீயாநானா விவாதத்தில் சாதி என்பது 2000 ஆண்டு பழமையானது அதை நூற்றாண்டுகால சாதி எதிர்ப்பு போராட்டத்தால் அழித்துவிடமுடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய முடியும்.என்று குறிப்பிட்டார் சுப.வீ.. இது தொடர்ச்சியாக திராவிட மற்றும் போலி சாதி எதிர்ப்பு ஆட்களினால் தங்களது இயலாமையை மறைக்க தொடர்ந்து சொல்லிக்கொண்டு வரும் பொய்.
    #2000ம் ஆண்டுகால தமிழர்களின் சித்தமருத்துவத்தை நூறாண்டில் அலோபதிக்கு மாற்ற‌ முடிந்தது
    #2000ம் ஆண்டுகால தமிழர்களின் உணவை இட்லி தோசையாக நூறாண்டில் மாற்ற முடிந்தது
    #2000ம் ஆண்டுகால தமிழர்களின் மதிய உணவான புளிக்காய்ச்சலை சாம்பாராக மாற்ற முடிந்தது
    #2000ம் ஆண்டுகால தமிழர்களின் குடுமியை நூறாண்டுகளில் கிராப்பாக மாற்ற முடிந்தது
    #2000ம் ஆண்டுகால தேவதாசிகள் ஆடிய சதிர் ஆட்டமென்ற நடனத்தை பரதநாட்டியமாக மாற்றி உச்சியில் தூக்கி வைக்க முடிந்தது
    #2000ம் ஆண்டுகால தமிழ்பெயர்கள் சுரேஷ், ரமேஷாகி இப்போ ராகுலில் வந்து நிற்க முடிகிறது
    உண்மையில் சாதியொழியாமல் இருக்க காரணம் சாதி ஆதரவாளர்களால் அல்ல... போலி சாதியொழிப்பாளர்கள் தான் சாதியை காப்பாற்றுகிறார்கள். சுபவீ ஜிங் சாங் கொட்டிக்கொண்டிருக்கும் திமுக தலைவர் அரசியலில் சாதிபார்த்து சீட்டு தருகிறார், கழகத்தின் பொதுச்செயலாளரான அன்பழகனுக்கே முதலியார் கோட்டாவில் சீட்டு கொடுத்திருந்தார்கள். தர்மபுரியின் தலித்களின் மீதான தாக்குதலில் கைதானவர்களில் 10 பேர் பாமக ஆனால் 16 பேர் திமுக, உண்மை அறியும் குழு எல்லாம் அனுப்பிய திமுக அந்த தாக்குதலில் கைதான 16 பேர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? நியாயமாக சாதியொழிப்பை பற்றி பேசும் சுப.வீ இதை கருணாநிதியிடம் கண்டிக்க வேண்டாமா? எதிர்த்து பேச வேண்டாமா? சாதிக்கு ஆதரவளிக்கும் திமுக தலைமைக்கு எதிராக போராட வேண்டாமா? ஏன் திமுகவிடம் மட்டும் ஜால்ரா?.சாதியொழிப்பிற்காக நேர்மையாக போராடாமல் பதவிக்காக சாதி, பணத்துக்காக சாதி, அதிகாரத்துக்காக சாதி, விசுவாசத்துக்காக என அவர்களின் சாதி நடவடிக்கைகளை ஆதரித்து விட்டு வாயால் சாதியொழிக என வடை சுட்டால் நூறாண்டுகள் அல்ல சுப.வீ அய்யா ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களை போன்ற போலிகளால் சாதியை ஒழிக்க முடியாது.சாதியொழிப்பை நேர்மையாக முன்னெடுத்திருந்தால் சாதியொழிப்பு பேசும் கட்சிகள் குறிப்பாக சமீபமாக ரொம்ப சீன் போடும் திமுக காரர்கள் அனைவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும், இல்லையெனில் கட்சியிலிருந்து வெளியே போ என்று நேர்மையான சாதியொழிப்புக்கு போராடலாமே ஆனால் செய்ய மாட்டார்கள், ஏன் தெரியுமா? இவர்களுக்கு எல்லாம் தெரியும், வெளியே சாதியொழிப்பை பேசிக்கொண்டு வீட்டினுள், கட்சியினுள் எல்லாம் சாதியை காப்பாற்றுபவர்கள்.
    உதாரணமாக சுப.வீ யையும் ஜால்ராமணி ஐ ஆம் ஸாரி வீரமணி அவர்களையும் எடுத்துக்கொள்வோம். சாதியொழிப்பை எப்படியாகினும் செய்வேன் என்ற உறுதியிருந்திருந்தால் சாதியின் அடிப்படை, பார்ப்பனியத்தின் அடிப்படை பிறப்பால் வேறுபாடு பார்ப்பது, இன்று திமுகவின் தலைமை பதவிச்சண்டையில் இருப்பவர்கள் கருணாநிதிக்கு பிறந்த மகன்கள் ஸ்டாலின்&அழகிரி,. திமுகவின் தலைமை பதவியின் அடிப்படை ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பிறப்பால் கிடைக்கிறது.[also கனிமொழி&தயாநிதி].பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக சொல்லும் ஜால்ராமணியின் திகவின் தலைமை பொறுப்புக்கு தயாராக இருப்பவர் ஜால்ராமணியின் மகன் அன்புராஜ், இது பார்ப்பனியம் இல்லையா?.சாதியொழிப்பிற்காக நேர்மையாக போராடாமல் பதவிக்காக சாதி, பணத்துக்காக சாதி, அதிகாரத்துக்காக சாதி, விசுவாசத்துக்காக என அவர்களின் சாதி நடவடிக்கைகளை ஆதரித்து விட்டு வாயால் சாதியொழிக என வடை சுட்டால் நூறாண்டுகள் அல்ல சுப.வீ அய்யா ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களை போன்ற போலிகளால் சாதியை ஒழிக்க முடியாது.இதே நேரத்தில் கொளத்தூர் மணி, கோவை ராமக்கிருஷ்ணன், புதுவை லோகு அய்யப்பன் போன்ற நேர்மையான சாதி எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. நமது வட்டத்திலேயே குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சுகுணா திவாகர் சாதி மறுப்பு திருமணம் தான் செய்வேன் என்று பெண் பார்த்து வேறு சாதியில் தான் திருமணம் செய்தார்(அவருடையது காதல் திருமணம் அல்ல) இவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும், போற்ற வேண்டும் சுப வீ, வீரமணி போன்ற போலிகளை அல்ல...

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள குழலி அவர்களுக்கு,

      வணக்கம். என்னை மதித்து நீண்ட மின் அஞ்சல் அனுப்பியுள்ள உங்களுக்கு முதலில் என் நன்றி. அய்யா வீரமணி அவர்களும், நானும் போலிகள் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். இருக்கட்டும். நான் மதிக்கும் அண்ணன் கொளத்தூர் மணி, நண்பர் ராமகிருஷ்ணன் ஆகியோரையாவது உண்மைச் சாதி ஒழிப்புப் போராளிகள் என்று ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஒரே ஒரு வினா.....பிறகு ஏன் அவர்களாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை?

      இவ்வளவு எழுதும் சாதி ஒழிப்பு வீரரான நீங்கள் யார், உங்கள் பின்புலம் என்ன, சாதியை ஒழிக்க நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டுள்ளீர்கள் என்பன போன்ற விவரங்களைத் தர நீங்கள் முன்வருவீர்கள் என நம்புகின்றேன். தந்தால் உங்கள் நேர்மையை நான் மதிப்பேன். மின் அஞ்சலுக்குள் புகுந்து கொண்டு நிழல் யுத்தம் செய்வதை விட்டுவிட்டு வெளியில் வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

      அன்புடன்
      சுபவீ

      Delete
    2. வாா்த்தைகளில் விளையாட இது நேரமல்ல சுப.வீ அய்யா அவர்களே உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்பதை மட்டும் பேசுங்கள் அதைவிடுத்து தாங்கள் மற்றவர்மீது திரும்பவும் குற்றம் சுமத்தக்சுடாது அது பெரியவர்களுக்கு அழகுமல்ல நோ்மையாக ஒப்புக்கொள்ளுங்கள் நான் தி.மு.கவிடம் இருப்பது என்னுடைய தன் இலாபத்திற்கு என்று ஆனால் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் தங்களுடைய அறிவு தமிழருகளுக்கு பயன்படாமல் வீணாக போகிறதே என்று தான்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. அன்புள்ள சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு
    நிலவன் எழுதிக் கொள்வது தங்களுடைய இந்தக் கட்டுரை மிகவும் அருமை உங்களுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களின் தனித்தன்மையை பதிக்கிறீர்கள். கருத்து முதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் பற்றி தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது. இந்தக் கட்டுரையையும் தங்களைப்பற்றியும் நான் புகழ்பாடிக் கொண்டிருந்தால் எனக்கு இந்த வாழ்நாள் போதாது. நான் மறு பிறவி எடுத்துத்தான் வரவேண்டும். நல்லது இருக்கட்டும். இப்போது நான் கட்டுரையை புகழ்பாடுகிறேன்.
    //* ஒன்றே இன்னொன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று, ஒன்றுக்காக இன்னொன்று இப்படித்தான் உலகம் இயங்குகின்றது.*//
    நுணுக்கமாக படிக்கவேண்டியது கருத்தாழம் மிக்க பொருள் , பொருள் பொதிந்த கருத்து
    தங்களை புகழ்பாடுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை பொறுத்துக்கொள்ளவும்
    சனிக்கிழமை தோறும் சந்திப்போம் என்பதை காரிக்கிழமை என்று மாற்றுவதாக என்னிடம் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். மறந்துவிட்டீர்களா?

    ReplyDelete
  4. திரு. சுப. வீ. அவர்களுக்கு வணக்கம்,
    நான் ஓர் அறிவியல் ஆராய்ச்சி மாணவன்.
    நான் படித்த சமீபத்திய கட்டுரைகளில் இது மிகச்சிறந்ததாக கருதுகிறேன். பொதுவாகவே இத்தகைய பகுத்தறிவு கருத்துக்களை ஒருவர் புரிந்துகொள்வதென்றால் உள்ளார்ந்து சுய சிந்தனையோடு உணரும்போது மட்டுமே அவர் மனத்தில் பகுத்தறிவு கோட்பாடுகள் நிலைத்து நிற்க கூடியதாக நான் கருதுகிறேன்.
    ஆங்கிலத்தில் GOD என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை எதுவுமெய் இல்லை என்று நான் எண்ணுவதுண்டு. காரணம், GOD என்பது ஒருவகையான super natural power-ஆக மேலை நாட்டவர்களால் சொல்லக்கொடியது. ஆனால் பண்டைய ஆதி தமிழில் அத்தகைய அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவோ அவற்றிற்கு இதுதான் பெயர் என்றோ சொல்வதற்கு இல்லை என்பது என் எண்ணம். பொதுவாகவெ நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளான கடவுள், ஆண்டவன், இறைவன், தெய்வம் இவை யாவுமே GOD என்பத்ர்கான பொருள் பதிந்தவை அல்ல. தங்கள் தங்கள் கட்டுரை முழுக்க பயன்படுத்தியிருக்கும் கடவுள் என்ற வார்த்தையில் எனக்கு முரண்பாடு இருக்கிறது. கடவுள் என்பதன் உள்ளர்த்தம் கடமை + உள் அதாவது ஒருவர் தான் மற்றவருக்கு இன்னின்ன நன்மைகளோ கட்டளைகளோ செய்வதற்குரிய எண்ணம் கொண்ட உள்ளம் கொண்ட, மற்ற உயிரினத்திற்கோ மனித இனத்திற்கோ தீங்கு இழைக்காத நன்மை பயக்கக்கூடிய உள்ளம் கொண்ட ஒருவனே கடவுள் என்பவன். ஆக கடவுள் என்றால் ஏதோ ஒரு மாயை அமானுஷ்ய சக்தி அல்ல, அது நாமே நாம் எண்ணமே. இதை திரு. சுப. வீ. அவர்களுக்கு தெரிந்ததே என்றாலும் நானும் அதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இனிவரும் கட்டுரைகளில் இதில், நான் சொல்வதில் உண்மையில் அர்த்தம் உண்டாயின் என் பணிவான விண்ணப்பத்தை திரு. சுப. வீ. அவர்கள் ஏற்க வேண்டும்.
    மேலும் தாங்கள் முன்வைத்த தர்க்கங்களில் வலுவானதாக இருப்பது "அழிக்க முடியாத ஒன்று எப்படி ஆக்கப்பட்டிருக்கும்?" என்பது. என்னால் மற்றும் யாராலும் இந்த கருத்த்துமிக்க கட்டுரையின் ஒவ்வோர் வரியும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
    இங்கே என்னுடைய சில கருத்துக்களையும் எடுத்து கூற நான் விரும்புகிறேன்.
    நான் முன்பு குறிப்பிட்டது போல் 'கடவுள்' என்பது எப்படியோ 'இறைவன்' என்ற வார்த்தயும் பொருள் மறந்து பிறரால் பயன்படுத்தப்படுகிறது. 'இறை' என்றால் 'அரசு' இறைவன் என்றால் 'அரசன்' என பொருள்படும். ஏதோ ஒரு காலத்தில் ராமன், தசரதன் போன்ற அரசர்கள் இவ்வுலகில், இந்நாட்டில் வாழ்ந்து நிலங்களை, மக்களை ஆண்டவர்கள். என்வே தான் இந்த இறைவன் என்ற வார்த்தை இங்கே பழக்கத்தில் இருத்தது. அவர்கள் ஆளுகை செய்தமையால் அவர்கள் 'ஆண்டவ்ர்கள்' ஆகிப்போனார்கள். நான் குறிப்பிட்ட இந்த ஆண்டவன் என்பது எப்போதோ அரசனாக (இறைவனாக) மக்களுக்கு நன்மை செய்த கடவுளாக இருந்து மாண்டு போனவர்களே. அவர்கள் இருந்த வாழ்ந்த ஆட்சி செய்த வீடுகள் 'கோவில்'கள் எனப்பட்டன. கோவில் என்பதன் பொருள் கோ + இல் = அரசனுடைய வீடு என்று பொருள்.
    இன்றைக்கு மக்கள் யாவரும் கோவிலுக்கு சென்று வழிபடுகிறகள் என்றால், 'வழிபாடு' என்பதே தவராக உணர்ந்தமையால். வழிபாடு என்றால் ஒருவர் கடந்து சென்ற வாழ்க்கையை வழியை பின்பற்றுதல் என்பது பொருள். ஏதோ ஒரு கற்சிலைக்கு மலை அணிவித்து பலநிற பூச்சுக்களை பூசிக்கொண்டு வருவது 'வழிபாடு' அல்ல.
    நாம் பல்வேறு கால கட்டங்களில் இத்தகைய பகுத்தறிவு சிதந்தங்களை கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம். ஆனாலும் பெரும்பாலானவர்களால் இன்றும் ஏற்றுக்கொள்ள இயலாததாக இருக்க காரணம் எதுஎன்றால், பெரும்பாலான பெண்கள் இடத்தில் பகுத்தறிவை வளர்க்க தவறியதே. ஒரு மாபெரும் பகுத்தறிவு இயக்கத்தை, சொற்பொழிவை பெண்களை மையப்படுத்தி அவர்கள் மனத்தில் பதியாவைப்போமேயாயின் இன்னமும் அதிதீவிரமானதாக அது இருக்கும்.
    நன்றி
    மு. வேடி குயில் அழகன்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள குயில் அழகன் அவர்களுக்கு,

      வணக்கம். என் கட்டுரை பற்றிய தங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி. கடவுள் என்னும் சொல்லை கடமை+உள் என்று பிரிப்பதற்கு இலக்கணம் இடம் தராது என்றே கருதுகின்றேன். கட+உள் என்பதே சரியானது. உள்ளார்ந்த அனைத்தையும் கடந்தவன் என்ற பொருளிலேயே அச்சொல் கையாளப்பட்டு வருகிறது. இறை என்ற சொல் அரசனைக் குறித்தும், கோயில் என்ற சொல் அரண்மனையைக் குறித்தும் நிற்கும் இடங்கள் உண்டு என்று நீங்கள் சொல்வது சரிதான்.

      Delete