தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 5 August 2014

சமற்கிருத வார எதிர்ப்பு ஏன்?




(2014 ஆகஸ்ட் 7 முதல் 13 வரை, இந்தியாவிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் சமற்கிருத வாரத்தைக் கொண்டாடுமாறு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது)
இந்தியாவிற்குத் தேசிய கீதம், தேசியப் பறவை, தேசிய விலங்கு என்று இருப்பதைப் போலத் தேசிய மொழி (National Language) என்று எதுவும் இல்லை. அலுவல் மொழி (Official Language) மட்டுமே உண்டு. அலுவல் மொழியாக இந்தியும், இணை அலுவல் மொழியாக ஆங்கிலமும் உள்ளன.

இதனைத் தாண்டி, இந்திய அரசமைப்புச் சட்டம், 1951ஆம் ஆண்டு, தன் எட்டாவது அட்டவணையில் தமிழ்  உள்ளிட்ட 14 மொழிகளுக்குப் பிராந்திய மொழிகள் என்று ஏற்பிசைவு அளித்தது. அம் மொழிகளின் எண்ணிக்கை இப்போது 22 ஆக உயர்ந்துள்ளது.
சமற்கிருதம் என்பது பிராந்திய மொழிகள்’ (Regional Languages) என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 மொழிகளில் ஒன்று என்பதைத் தவிர, அம் மொழிக்குச் சட்டத்தில் வேறு எந்தத் தனிச் சிறப்பும் வழங்கப்படவில்லை. மேலும், சமற்கிருதம் எந்த ஒரு பகுதியிலும் (பிராந்தியத்திலும்) பேசப்படவில்லை என்னும் உண்மையும் இங்கு எண்ணத்தக்கது.
1961ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொலைக் கணக்கெடுப்பின்படி, சமற்கிருதம் பேசுகின்றவர்களின் எண்ணிக்கை 2,544 மட்டுமே! 1991இல் அது 49,000 ஆக உயர்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இப்போது 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 15,000க்கும் குறைவானதாக ஆகி உள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 22 மொழிகளில், 15க்கும் மேற்பட்ட மொழிகள், பல கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகின்றன. காஷ்மீரி, சந்தாலி போன்ற மொழிகள் லட்சக்கணக்கானோரால் பேசப்படுகின்றன. ஆயிரக்கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமற்கிருதம் மட்டுமே!
அவ்வளவு குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு, 110 கோடி மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது என்ன நியாயம்?
அனைத்து மொழிகளையும் (14 மொழிகள்) அலுவல் மொழிகளாக ஆக்குங்கள் என்றார் அறிஞர் அண்ணா. அன்றைய தினம் அதற்கேற்ற தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை என்று கூறி அக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
இன்று அறிவியல், தொழில்நுட்பம் விரைந்து வளர்ந்துள்ளது. மொழிபெயர்ப்புக் கருவிகள் இன்று எளிமையாகிவிட்டன. எனவே 22 மொழிகளையும் இந்திய அரசின் அலுவல் மொழிகளாக ஆக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
தமிழுக்காக மட்டுமில்லை, இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சேர்த்தே நாம் குரல் கொடுக்கின்றோம். சமற்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழ் வாரம் எப்போது? வங்க மொழி வாரம் எப்போது? பஞ்சாபி வாரம் எப்போது? 22 மொழிகளுக்குமான வாரங்கள் எப்போது?
மற்ற மொழிகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, இந்தி, சமற்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கு மட்டும் கோடிக் கணக்கில் நம் வரிப்பணத்தைக் கொட்டி வாரம்கொண்டாடும் மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
இந்தித் திணிப்பை -
சமற்கிருத ஆதிக்கத்தை -
என்றும் எதிர்ப்போம்!
- திராவிட இயக்கத் தமிழர் பேரவை.

2 comments:

  1. மற்ற மொழிகளைப் புறக்கணித்து விட்டு வடமொழியை மட்டும் கொண்டாடுவது கண்டிக்கத் தக்கது ஐயா

    ReplyDelete
  2. சாமிநாதன்9 August 2014 at 14:26

    >2500 வருடங்களுக்கும் முந்தய சமஸ்கிருதப் பெயர்களான சரஸ்வதி,கங்கா,யமுனா,சீதா etc etc போன்ற பெயர்களெல்லாம் தமிழர்களிடம் இன்றும் மிகப்பிரபலமாக இருக்கிறது.மேலும் தமிழர்கள் பெரும்பாலும் அந்தப் பெயர்களைத்தானே விரும்பி வைத்துக் கொள்கிறார்கள,அதைத்தானே கௌரவமாகக் கருதுகிறார்கள்! பின்வரும்(↓) பெயர்களெல்லாம் சாதாரணத் தமிழர்களின் பெயரல்ல,தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் அந்தப் பெயர்களை உங்கள் வீட்டுப் பெண்களுக்கு வைத்திர்களா?,அல்லது வைப்பிர்களா? கூச்சமாக உள்ளதா? இதய சுத்தியோடு பதில் சொல்லுங்கள்!.ஒருவருக்கு பெயர்தான் முதலும்,முகவரியும்,identityயும் அதுவே தமிழர்களுக்குத் தமிழிலில்லாதபோது,அதை பெரும்பாலான தமிழர்கள் தமிழில் விரும்பாத போது,சமஸ்கிருதத்தில் விரும்பும் போது,CBSE பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் <0.001% தான்,அதற்கு இங்கு ஏன் சமஸ்கிருத வார எதிர்ப்புப் போராட்டம்?.சமஸ்கிருதப்பெயர்கள் எதிர்ப்புப் போராட்டமில்லையே?. ஏன் நிழலோடு யுத்தம் நடத்துகிறிர்கள்?.

    தமிழ்ப் புலவர்களின் பெயர்கள்
    ----------------------------------------------------
    அள்ளூர் நன்முல்லையார்,
    வெறிபாடிய காமக் கண்ணியார்,
    பேய்மகள் இளவெயினியார்,
    மாற்பித்தியார்,
    காமக்கணி பசலையார்,
    பேயனார்,
    வெண்ணிக் குயத்தியார்,
    குறமகள் இளவெயினி,
    ஆதிமந்தியார்,
    வருமுலையாரித்தி,
    ஒக்கூர் மாசாத்தியார்,
    ஓரம்போகியார்,
    ஔவையார்,
    கழார்க் கீரன் எயிற்றியார்,
    காக்கை பாடினியார்,
    நச்செள்ளையார்,
    காவற்பெண்டு குமுழி ஞாழலார்,
    நப்பசலையார்,
    நக்கண்ணையார்,
    கச்சிப்பேட்டு நாகையார்,
    நெடும்பல்லியத்தை,
    பக்குடுக்கை நன்கணியார்,
    பூங்கணுத்திரையார்,
    பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு,
    பேரெயின் முறுவலார்,
    பொதும்பில் புல்லாளங் கண்ணியார்,
    பொன்முடியார்,
    மதுரை ஓலைக்கடையத்தார்,
    நல்வெள்ளையார்,
    மாறோக்கத்து நப்பசலையார்,
    முள்ளியூர்ப் பூதியார்,
    வெண்மணிப் பூதியார்,
    வெள்ளிவீதியார்.
    .

    ReplyDelete