தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 3 December 2014

'எல்லோரையும் சந்தேகி' -தருண் விஜய் உள்பட!


பாரதிய ஜனதாவிற்குப் பல முகங்கள் உண்டு! அமைதியாகப் பேசும் இல. கணேசன் ஒரு முகம். அடாவடியாய்ப் பேசும் ஹெச்.ராஜா இன்னொரு முகம்! தமிழர்களைப் பொறுக்கிகள் என்று சொல்லும் சு.சாமி ஒரு முகம், தமிழ் மொழியை, திருக்குறளைப் போற்றும் தருண் விஜய் இன்னொரு முகம். எப்போதும் தமிழர்களுக்கு மட்டும் ஒரே முகம் - ஏமாளி முகம்!


பா.ஜ.கட்சி, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எத்தனையோ உறுதிமொழிகளைக் கொடுத்தது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் இந்தியாவிற்குக் கொண்டுவந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்போம் என்றது. (பாவம், அதை நம்பிப் பலபேர் கடன் வேறு வாங்கி விட்டார்கள்!) இப்படிப் பல்வேறு உறுதிமொழிகள். ஆனால் இன்றோ, சமஸ்க்ருதத் திணிப்புக்கு மட்டும்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது.

முதலில் சமஸ்க்ருத வாரம். பிறகு, கேந்திரிய வித்யாலயங்களில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சம்ஸ்க்ருதப் பாடம். கடந்த வாரம், தில்லியில் நடைபெற்ற 'ஜல் தன்மன்' என்னும் நதிநீர் இணைப்புக் கருத்தரங்கில், நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒரு புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே பேசியவர்களில் சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது, எதிர்த்துச் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். உடனே, உமா பாரதி எழுந்து, சிலருக்கு இந்தி தெரியவில்லை, சிலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. இந்தச் சிக்கலைப் போக்குவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்க்ருதத்தை இணைப்பு மொழியாக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார். உண்மைதான்...இந்தி சிலருக்குத் தெரியும், ஆங்கிலம் சிலருக்குத் தெரியும். சமஸ்க்ருதாமோ யாருக்குமே தெரியாது.எனவே அதனைப் பொது மொழியாக்கிவிட வேண்டியதுதான்!

இவ்வாறு சமஸ்க்ருதத் திணிப்பு ஒருபுறத்தில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான், தருண் விஜய் என்னும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், தமிழின் பெருமை குறித்தும், திருக்குறளின் உயர்வு குறித்தும் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளார். அவர் உண்மையிலேயே, தமிழ்ப் பற்று உடையவர்தானா, திருக்குறளின் மீது தீராக் காதல் கொண்டவர்தானா என்று எண்ணிப் பார்த்திட வேண்டியுள்ளது.

தருண் விஜயின் தமிழ்ப் பற்று உண்மையாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதனை விட, அவர் மிகப் பெரிய சம்ஸ்க்ருதப் பற்றாளர் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான 'பாஞ்சசன்யா'வின் ஆசிரியராக இருந்தவர் அவர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் வலைப் பூத் தளங்களில் அவர் சமஸ்க்ருதம் குறித்து என்ன எழுதியுள்ளார் தெரியுமா? "சமஸ்க்ருதம் என்றால் இந்தியா. இந்தியா என்றால் சமஸ்க்ருதம். தெற்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்காகவும் இந்தியாவை இணைக்கும் மாபெரும் சக்தி சமஸ்க்ருதம்" என்று அவர் குறிப்பிடுகின்றார்.



ஒருவருக்கு இரு மொழிகளின் மீதும் பற்று இருப்பதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் இந்தியாவை சமஸ்க்ருதத்தால்தான் இணைக்க முடியும் என்னும் பார்வை, தமிழ் உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும், ஏன், ஜனநாயகத்திற்குமே எதிரானது. ஆனால் அதே தருண் விஜய் சீனாவிற்குச் சென்று திருக்குறளைப் படிக்கச் சொல்கிறாரே என்று கேட்கலாம். ஆம்..சீனாவில் உள்ளாவார்கள் திருக்குறள் படிக்கட்டும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சமஸ்க்ருதம் படிக்கட்டும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்!

தமிழர்களுக்கு வீசப்பட்டிருக்கும் அடுத்த வலை, வடநாட்டுப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப் போவதான அறிவிப்பு! திருக்குறளை அவர்கள் எப்படி எடுத்துச் செல்லப் போகிறார்கள், திருவள்ளுவரின் முகமாக எதனைக் காட்டப் போகிறாரர்கள் என்பதை எல்லாம் பொறுத்திருந்து நாம் பார்க்க வேண்டும். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் வள்ளுவ முழக்கத்தையா அவர்கள் முன்னெடுப்பார்கள்? வருணாசிரமத்திற்கு எதிரான வள்ளுவரை யாராக அவர்கள் படம் பிடிக்கப் போகின்றனர் என்பதில் நமக்குக் கவனம் வேண்டும்.

தமிழ் மன்னன் ராசேந்திரனுக்கு விழா எடுப்பதைக் கூடவா சந்தேகிக்க வேண்டும் என்று வினவலாம். ஆம்..கண்டிப்பாக! ராசேந்திரன் ஒரு தமிழ் மன்னன் என்பதால் அவர்கள் விழா எடுக்க நினைக்கவில்லை. பழைய தென் ஆர்க்காடு மாவட்டத்திலிருந்த 'எண்ணாயிரம்' என்னும் ஊரில் வேதப் பள்ளிகளைத் தொடக்கி வைத்தவன் ராசேந்திரன் என்று வரலாற்றாசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரியும், கே.கே. பிள்ளையும் நிறுவி உள்ளனர். தமிழ் நாட்டில் வேதப் பள்ளியை, சமஸ்க்ருத மொழியைப் பரப்பிய மன்னரை அவர்கள் பாராட்டத்தானே செய்வார்கள்!

அதிகாரத்திற்கு வந்துவிட்ட அவர்கள் அடக்கு முறையாலும், அரவணைப்பு வழியாலும் தமிழ் நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் செய்கின்றனர். அடக்கு முறை, அதிகாரத் திமிர் ஆகியனவும் அவர்களிடமிருந்து அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது என்பதற்கு, ஹெச். ராஜாவின் அண்மைப் பேச்சு ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் தலைவர்களைத் தாக்கிப் பேசிவிட்டு வைகோ பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்துவிட முடியாது என்கிறார் ஹெச். ராஜா. இது ஒரு கொலை மிரட்டல்.

வைகோ வேறு கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனாலும் ஒரு திராவிடக் கட்சித் தலைவரை, பார்ப்பனர் ஒருவர் மிரட்டுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! தானாடா விட்டாலும் எங்கள் சதை ஆடும்!


தமிழர்களே, விழிப்பாயிருங்கள்! தருண் விஜயைப் பாராட்டுவதில் அப்படி ஒன்றும் அவசரம் தேவையில்லை. பா.ஜ.க.வின் 'பிள்ளை பிடிக்கும்' விளையாட்டில் ஒரு புதிய வேடம்தான் தருண் விஜய்!

11 comments:

  1. விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்தான் ஐயா

    ReplyDelete
  2. தமிழன் தமிழர்களிடையே மட்டும்தான் ஏமாறுவான் வட நாட்டவரிடம் ஏமாற மாட்டான் ஆனால் தமிழ் தலைவர்கள் மட்டும் வட நாட்டவர்களிடம் ஏமாறுவார்கள். மோடியிடம் ஏமாந்தவர்கள் தமிழ் தலைவர்களே தமிழ் மக்கள் அல்ல மோடியின் போலி அலையை கண்டு பயந்தவர்கள் தமிழ் தலைவர்கள் தமிழ் மக்கள் அல்ல

    ReplyDelete
  3. உறக்கத்தில் இருக்கும் தமிழா்களை எழுப்பும் உன்னத கருத்துக்கள் அய்யா .

    இது மிகப் பாெிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே தாெிகிறது. இன்றைய 'டைம்ஸ் ஆப் இந்தியா' வில் வந்த கட்டுரையை (தமிழகத்தில் மூன்றாவது மாெழிக்கான நேரம் வந்து விட்டது என்ற தலைப்பில்) பாா்க்கும் பாேது , கணக்கு எங்காே செல்வது புலப்படும்.

    http://m.timesofindia.com/city/chennai/Time-has-come-for-a-third-language-in-Tamil-Nadu/articleshow/45355633.cms

    ReplyDelete
  4. மதிற்பிற்குரிய அய்யா, ஒரு சந்தேகம், கோவில் வேண்டாம் என்ற தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்று ஏன் போராடினார்? நிச்சயமாக அவரே இதற்கும் பதில் அளித்திருப்பார்... நீங்களோ அல்லது திரு வீரமணி அவர்களோ இதற்கு பதில் அளித்திருபீர்கள் தயவு செய்து அந்த link தர முடியுமா??? சிரமத்திற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  5. எப்போதும் தமிழர்களுக்கு மட்டும் ஒரே முகம் - ஏமாளி முகம்! உண்மைதான் அதனால் தான் உங்களைப் போன்ற வாய்ப்பந்தல் வீரர்களிடமும் ஏமாளியாக மட்டுமில்லாமல் தமிழர்கள் கோமாளியாகவுமாக்கப்படுகின்றார்கள்.
    தமிழர்களைப் பொறுக்கிகள் என்று என்றுமே சு.சாமி சொல்லவில்லை,சுதந்திர தினத்தை துக்க நாளாக அனுசரிக்கும் காலிகளைத்தான் சு.சாமி பொறுக்கிகள்,எலிகள் ... என்று கூறுகிறார்.அவரால் தமிழ் மீனவரை மீட்க, தமிழ் மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்ய முடிகிறது.ஆனால் உங்களைப் போன்றோரால் வாய்ப்பந்தல் போடுவதைத்தவிர பெரிதாக வேறென்ன செய்ய முடியும்?

    ReplyDelete
    Replies
    1. நடராஜன் நீங்களே எழுதி நீங்களே நடிக்கும் நாடகத்தை நீங்கள் மட்டுமே பார்த்து மகிழுங்கள். சு. சாமியின் நாடகத்தை நம்ப வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை

      Delete
  6. Nataraj,we never ever accept papan as tamilan,so su samy and you no need to teach us,first remove thread from your shoulder then we will discuss.
    Bala fro south africa

    ReplyDelete
    Replies
    1. ஒரு இனத்தையோ,மதத்தையோ சேர்த்தவர்கள் thread in the shoulder அணிவதா,நாமம் போடுவதா,குல்லா போடுவதா,சிலுவை அணிவதா என்பது அவரவர் விருப்பம் அதை விமர்சிப்பதும்,விவாதப் பொருளாக்குவதென்பதும் சரியா?.South Africaக்காவிலிருந்தும் நீங்களும் காலியாகத்தான் இருக்கிறீர்கள்.ஆகவே நீங்களும் சு.சாமி குறிப்பிடும் பொறுக்கிகள்,எலிகள் ... என்ற வகையறாதான்.நீங்களும் இங்கு வந்து தமிழ் மீனவரை மீட்க,தமிழ் மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்ய இங்குள்ள காலிகளுடன் சேர்ந்து அவர்களைப்போல வெற்று கோஷம் போடுங்கள்,வைக்கோலால் செய்த கொடும்பாவியை எரியுங்கள்,இலங்கை கோர்ட் தீர்ப்பைக் கொளுத்தி அதன் சாம்பலைப் பூசிக்கொள்ளுங்கள்,அரைமணி நேர உண்ணவிரதமிருங்கள்,ரயில் வராத தடத்தில் தலையை வைத்து பூச்சாண்டி காட்டுங்கள். அத்தகைய செயல்களின் மூலம் இங்குள்ள காலிகளைப் போல நீங்களும் நவீன நாகரிக காலத்தின் அநாகரிக கோமாளியாக கட்சியளியுங்கள் .......... Best of Luck Bala.

      Delete
    2. Nataraj,your point is wearing thread is based on believe but here you guys are trying to show you are different from others,let me ask one question you are living in a,street one neighborhood place board out his house ,which says ,'this is verging house',then what is your house,I believe you understand my question,since you guys are so called intelligence.does not matter where I am,since I am in southaAfrica because of 'Periyar',Thanks for your whise.

      Delete
  7. வணக்கம் ஐயா,
    உங்கள் கருத்துக்களில் பெரும்பாலும் ஏற்புடைய எனக்கு இந்த மொழி எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் மட்டும் மாற்று கருத்து உண்டு. ஆதிக்கம் செலுத்திய பார்ப்பணர்களை வெறுத்ததில் நியாயம் இருக்கலாம். அவர்கள் உபயோகப்படுத்தியதாலேயே ஒரு மொழியை வெறுக்கும் போக்கை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை. இதுநாள் வரை ஜெர்மன் மொழி பயின்ற பிள்ளைகள் இனி சமஸ்கிருதம் படிப்பதால் என்ன இழப்பு நேரிட வாய்ப்புள்ளது என்றும் விளங்கவில்லை. நடப்பு ஆண்டில் இந்த மொழி திணிப்பு நிகழாமல் அடுத்த ஆண்டு முதல் தொடங்கி இருந்தாலும் அதை திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் ஏற்று கொள்ள போவதில்லை. பெரும்பான்மையான இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருப்பதால் வேற்று இந்திய மொழிகளை கற்பதற்கு இது ஏதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. சமஸ்கிருதம் குறைவான மக்கள் தொகையினரால் பின்பற்ற படுவதால் எதிர்ப்பதாக கூறும் நீங்கள் பெரும்பான்மை மக்கள் பேசும் ஹிந்தியையும் எதிர்ப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் இலாபத்தை தாண்டிய உண்மையை விளக்கினால் என்போன்றோர் பயன்பெற எதுவாக இருக்கும்.

    நன்றி,
    அபிலாஷ்.

    ReplyDelete
  8. இன்றய கல்வி முறையால் தமிழன் தமிழே அறியாத நிலைக்கு போய்கொண்டிறுக்கிறானே –சமஸ்க்ருதம் பற்றி கூப்பாடு போடும் நீங்கள் ஆங்கில வழி கல்விக்கு எதிறாக எந்தவித எதிற்பும் காட்டவில்லயே ஏன் எங்கிற காரணம் உங்கள் கூட்டத்தில் உங்களுக்காவது தெரியுமா? அடுத்து வரும் 20ப்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே உள்ளவனுக்கு தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும். என் கூற்று பிழையென்றாள் உங்களுக்கு தெறிந்த வீட்டு பிள்ளைகளிடம் தமிழ் எழுதச்சொல்லி கேளுங்கள் அது உங்களுக்கே தெறியும்.

    ReplyDelete