தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 26 March 2016

அரசியல் மேடை - 18

'கிங்' நலக் கூட்டணி!
         

"தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது" (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.

"மக்கள் நலக் கூட்டணியைத் தி.மு.க. உடைக்கப் பார்க்கிறது " என்று அக்கூட்டணியின் தலைவர்கள் குற்றம் சாற்றிக் கொண்டே இருந்தனர். 


மேலே உள்ள இரண்டு கருத்துகளுக்கும் மாறாக இப்போது அவர்களே சில செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

80 இடங்களும், 500 கோடி ரூபாயும் தருவதாகத் தி.மு.க., விஜயகாந்த் கட்சியிடம் பேரம் பேசியது உண்மை என்று கூறியுள்ளார் திரு வைகோ!  பேரம் நடக்கும்போது அவரே அருகில் இருந்திருப்பார் போலிருக்கிறது. . பேரம், பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இருவர் தொடர்புடையதுதானே! விஜயகாந்துக்குத் தொடர்பே இல்லை என்றால், தி.மு.க. யாருடன் பேரம் பேசியது? யாருமே இல்லாத அறையில் ஒருவர் தனியாக  எப்படிப் பேரம் பேச முடியும்?  எனவே தி.மு.க.வை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு, வைகோ தன் 'புதிய தலைவரை'க்  கொச்சைப் படுத்தி உள்ளார்.

அடுத்ததாக, 25.03.2016 காலை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் உரையாடிய, விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிப் பொதுச்செயலாளர் திரு ரவிகுமார் இன்னொரு உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். யாருடனுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று விஜயகாந்த் கூறியிருக்க, அவரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி ரவிகுமார் கூறியுள்ளார். 

பா.ஜ.க.வையும் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டணியை அமைக்கலாம் என்றுதான் விஜயகாந்த் எங்களிடம் கூறினார். அதற்கு இடதுசாரிகள் இசைந்து வர மாட்டார்கள் என்றால், அவர்களை விட்டுவிட்டு நீங்களும், ம.தி.மு.க.வும் வாருங்கள் என்று கூறினார். ஆனால் நாங்களும் பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வர இயலாது என்று கூறிவிட்டோம். பிறகு அவரை வென்றெடுத்து எங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றார் ரவிகுமார்.

ஆக மொத்தம் இடதுசாரிகளைக் கழற்றிவிடச் சொன்னதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயன்றவர் விஜயகாந்த்தான் என்பது தெளிவாகிறது. அவரோடுதான் அவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தும், நம் பொதுவுடமைக் கட்சித் "தோழர்கள்" சுயமரியாதையைக் கைவிடாமல் 'கேப்டன்' தலைமையை ஏற்றுக் கொண்டு புன்னகை புரிகின்றனர்.

இன்னொன்றும் நமக்குப் புரிகிறது. இடதுசாரிகளைக் கைவிட வேண்டும் என்பது விஜயகாந்த் கருத்தாக இருந்திருக்கும் என்று நினைப்பதை விட, பின்னால் இருந்து இயக்க முயன்ற பா.ஜ.க.வின் கருத்தாகத்தான் இருந்திருக்க முடியும். 'கேப்டனை' வரும் தேர்தலில் 'கிங்' ஆக்குவதற்கு பா.ஜ.க  ஒப்புக் கொண்டிருந்தால், அவர் அந்தப் பக்கம் சாய்ந்திருப்பார். அவர்கள் அதற்கு இசையாத காரணத்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துள்ளார் என்பதும் புரிகிறது.

எப்படியோ, "கிங் நலக் கூட்டணி" உருவாகி விட்டது!


4 comments:

  1. எப்படி இழிவு படுத்தினாலும் ' சுயமரியாதை' யோடு கூட்டணியில் தொடர்வது என்பதை சென்ற முறை அதிமுக அணியில் இருந்த போது பெற்ற அனுபவம் இடதுசாரிகளுக்கு இப்போது கைகொடுக்கிறது

    ReplyDelete
  2. இம்சை அரசன் கூட்டணி

    ReplyDelete
  3. அப்படி ஒரு பேரம் வைகோவின் கட்டுக்கதை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
    வைகோ கூறியக் குற்றச்சாட்டு உண்மையாகில் உலக உத்தமர்களாகிய இவரோ விஜயகாந்தோ தேர்தல் ஆணையத்திடமல்லவா புகார் செய்திருக்க வேண்டும்? குறைந்தபட்சம் செய்தியாளர்களிடம் திமுகவுடன் கூட்டணி சேராததற்கு காரணம் அவர்கள் என் நேர்மைக்கு விலை பேசுகின்றனர் என்றல்லவா அறிவித்திருக்க வேண்டும்? ஆனால் அவரும் அவரது மனைவியும் மாய்ந்து மாய்ந்து அழைப்புவிடுத்த கலைஞருக்கு நன்றிதானே தெரிவுத்துக்கொண்டு இருக்கிறார்கள்?
    வைகோ சொல்வதுபோல் பேரமே நடந்திருந்தாலும்,அதில் தேமுதிகவுக்கு உடன்பாடு இல்லை என்பதற்கு சமிஞ்கையே இல்லையே. திமுகவிடம் எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லை,ஆதலால் கே.ந.கூ(கேப்டன் நலக் கூட்டணிங்கோ) அமைந்து. 80சீட்டுக்கு மேல் 124சீட்டுகள் கொடுத்ததைப்போலவே,500கோடிக்கு மேல் ஒரு தொகை ஏன் கைமாறி இருக்கக் கூடாது! இந்த பிரம்மாண்டக் கூட்டணியை சாதித்த அண்ணன் வைகோவைப் பாராட்டலாம் (இயக்குனர் சங்கரையும் மிஞ்சிய பட்ஜட். பிரம்மாண்டம்!)

    ReplyDelete
  4. இனிப் பிறகு அரசியலில், கேப்டன் அகராதியில் மற்றுமோர் பிடிக்காத வார்த்தை சேர்ந்து உள்ளது. அது: “பேரம்”

    ReplyDelete