தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 26 September 2016

சுயமரியாதை - 23


தங்கும் அறையில் எச்சில் இலைகள்



சுயமரியாதை இயக்கத்திற்கு மக்களிடம், குறிப்பாக, இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. கல்லூரிப் படிப்பை முடித்த  அண்ணா போன்ற இளைஞர்கள் இயக்கத்தையும், பெரியாரையும்  நாடி வந்தனர். வைதீக, சனாதன மரபில் ஊறியவர்களுக்கு அந்த நிலை  அச்சத்தை ஏற்படுத்தியது.


பெரியாரின் புகழைக் கெடுக்க வேறு வழிகள் குறித்து அவர்கள்  எண்ணத் தொடங்கினர். அப்போது இந்திய விடுதலைப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்  எதிர்ப்பும்,காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவும் பெருகிக் கொண்டிருந்தன. பெரியாரோ காங்கிரசை விட்டு வெளியேறியிருந்தார். எனவே அவர்  விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்  என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர்.

அப்போது காங்கிரஸ் கட்சி எப்படியிருந்தது  என்பதையும் நாம் பார்க்க வேண்டும். திலகர்  காலம் தொடங்கி, அரசியல் விடுதலைக் களத்தில் முற்போக்குப் பாத்திரத்தையும், சமூக விடுதலைக் களத்தில் பிற்போக்குப் பாத்திரத்தையும் காங்கிரஸ் வகித்தது. காந்தியார் காலத்திலும் அது தொடரவே செய்தது.

1885இல், காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்ட நாள் முதலே, கட்சித் தலைமையில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கூடுதலாக இருந்தது. அது படிப்படியாக வளர்ந்ததே அல்லாமல் குறைந்திடவில்லை. அது குறித்து, எஸ்.வி.ஆர்., வ.கீதா, எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆகியோர் தங்களின் நூல்களில் விரிவாகக் குறித்துள்ளனர். வேறு சில ஆங்கில நூல்களிலிருந்தும் மேற்கோள்களாகப் பல செய்திகளை எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் நோக்கும்போதுதான், காங்கிரசின் அன்றைய நிலையையும், பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் நிலைப்பாட்டினையும்  நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கே. சுப்பாராவ் என்னும் ஆந்திரப் பார்ப்பனர் எழுதியுள்ள புதுப்பிக்கப்பட்ட நினைவுகள் (Revived Memories) என்னும் நூல் கல்கத்தாவில் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள தென்னிந்திய பாப்பனப் பிரதிநிதிகள் சென்னையிலிருந்து மேற்கொண்ட ஐந்து நாள் கப்பல் பயணம் பற்றிய சுவையான தகவல்களைத் தருகிறது.

அந்த ஐந்து நாள் பயணத்தின்போது, அந்தப் பார்ப்பனர்களுக்கான உணவை நடுப்பகலில், மாலையிலும் குறிப்பிட்ட மங்கல நேரத்தில் சமைத்துக் கொடுப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அந்தக் கப்பல் நிறுவனத்துடமிருந்து பெற்றுக் கொண்டனர். அந்த உணவைச் சமைப்பதற்கு ஒரு பார்ப்பன சமையல்காரனே அமர்த்தப்பட்டான். அதே கப்பலில் பயணம் செய்த பார்ப்பனர் அல்லாதோரின் பார்வை பட்டு அந்தப் பார்ப்பனர்களுக்கும், அவர்கள் உட்கொள்ளும் உணவுக்கும் தோஷம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பார்ப்பனர்கள் தங்கியிருந்த அறைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது.

எஸ்.வி.ஆர்-கீதா ஆகியோர் தங்கள் நூலில் தந்துள்ள மேற்காணும் மேற்கோளை விடமிகக் கொடுமையான இன்னொரு நிகழ்வு, ரிவோல்ட் இதழில் வந்துள்ளது. ஆர்.எஸ். என்னும் பார்ப்பனர் அல்லாதோர் ஒருவர் 'சண்டே டைம்ஸ்' என்னும் ஆங்கில ஏட்டில் எழுதியத்தைப் பெரியாரின் ரிவோல்ட் ஏடு மறு  வெளியீடு செய்திருந்தது. அதனையும்  பார்க்கலாம்.

"காங்கிரஸ் பிரதிநிதியாக நான் லக்னோவுக்குச் சென்றேன். அங்கு உணவு பறிமாரப்  படுவதற்காக ஒரே மண்டபம் இரண்டு தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது.முதலில் எனது பார்ப்பன நண்பர்கள் சாப்பிட்டுவிட்டு வந்தனர். அதன்பின்னர்தான் எங்கள் முறை வந்தது. அதாவது மிச்சம் மீதி இருந்ததைத்தான் நாங்கள் சாப்பிட வேண்டி இருந்தது. இரண்டாவது நாள் இன்னும் மோசமான அனுபவம் ஏற்பட்டது. பார்ப்பனர்கள் உணவு சாப்பிட்ட இலைகள் எங்கள் அறையில் குவிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து நாற்றம் எழுந்து கொண்டிருந்ததுடன், அவற்றிலிருந்த திரவம் தரை முழுவதிலும் பரவி இருந்தது. சகிக்க முடியாத அந்த அசுத்தமான சூழலில்தான் நாங்கள் சாப்பிட வேண்டியதாயிற்று.."

இதுதான் அன்றைய காங்கிரசின் நிலை!


 (தொடரும்)
                                                                                  


நன்றி: நக்கீரன்     

1 comment:

  1. காந்தியடிகள் தமிழகம் வரும்போது திண்ணையில் உட்காரவைத்துதான் தி இந்து பத்திரிக்கை நிறுவனர் கஸ்தூரி ரங்கன் ஐயங்கார் (மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு) சாப்பாடு பரிமாறுவார்கள் என்றும் சுயமரியாதை இயக்கம் தீவிரம் ஆன பின்புதான் காந்தியையும் வீட்டிற்குள்அனுமதித்தார்கள் என்று படித்த ஞாபகம்.

    ReplyDelete