தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 4 August 2012

காலப் பெருவெளியில்

சீனப் பெருஞ்சுவரின் 
சின்னத் தூசுகள்நாம்
வானப் பரப்பினிலோர்
வண்ணப் பூஞ்சிறகு 

நீலக் கடலோரம் 
நீளும் அலைநுரைகள்
காலப் பெருவெளியில் 
கரையும் சிறுதுளிகள் !


ஆண்ட மணிமுடியும் 
அகன்ற பேரரசும் 
நீண்ட வரலாறும்
நிறைந்த பொன்பொருளும் 

வில்வேள் வெற்றிகளும் 
வீரப் பெருமிதமும் 
இல்லாப் பெரும்புனைவு 
எல்லாம் வெறுங்கனவு !
எனினும் மனிதர்களே 
எண்ணம் தளர்வதுவோ 
தனியே ஒருமனிதன் 
சாதனை இல்லெனினும் 

சின்னப் பொறியெல்லாம்
சேர்ந்தால் பெருந்தீயாம்
மண்ணை மாற்றுமொரு 
மக்கள் பெருவெள்ளம் 

அண்டம் பூவுலகம்
அனைத்தும் நம்வண்ணம் 
மண்டும் அழகெல்லாம் 
மனிதர் பேர்சொல்லும் 

கனிகள் அழிந்தாலும் 
விதைகள் முளைத்துவரும் 
மனிதன் நிலைப்பதில்லை 
மனிதம் நிலைத்துவிடும் !

2 comments:

  1. மனிதம் நிலைக்கும்,தமிழ் மானுடம் வெல்லும்

    ReplyDelete
  2. மனிதன் நிலைப்பதில்லை மனிதம் நிலைத்துவிடும் ! மிகவும் அருமையான வரிகள் ஐயா...!

    ReplyDelete