தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 5 October 2013

நதியோடும் பாதையில்...(15)

எழுந்து வாருங்கள் - இணைந்து போராடுவோம்!
கொண்ட கொள்கைக்காகவேதான் என்றாலும் கூட, ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதும், அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் சரிதானா என்னும் வினா, நம்மைத் துளைத்து எடுக்கிறது. அது குறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்கு உரிய நேரமாக, இன்றைய காலச் சூழல் உள்ளது.

ஆதித்தமிழர் பேரவையின் மாநில நிதிச் செயலாளர் நீலவேந்தன், சில நாள்களுக்கு முன்பு (செப்.26 - திலீபன் நினைவு நாள்) அதிகாலையில் தீக்குளித்து மாண்டுள்ளார். மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களான அருந்ததியர்களுக்கு, இட ஒதுக்கீட்டு முறையில், உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைக்காகத் தான் தீக்குளிப்பதாக ஒரு குறிப்பையும் அவர் எழுதி வைத்துள்ளார் என்று கூறுகின்றனர்.
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, காமன்வெல்த் நாடுகளின் அணியிலிருந்து இலங்கை அரசு நீக்கப்பட வேண்டுமென்றும், ஒரு வேளை, வரவிருக்கும் நவம்பரில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுமானால், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும், அக்டோபர் 1ஆம் நாள் முதல், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், தன் காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், மறைந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் விருப்பப்படி, பாரத மாதாவிற்குச் சிலை வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதற்காகப் பட்டினிப் போர் ஒன்றையும் அறிவித்தார். ஆனால் அப்போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே உடல்நலக் குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தபடியே இப்போது பட்டினிப் போர் நடத்தி வருகின்றார்-.
மூவரின் போராட்டங்களும் தனித்தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றை நாம் சமப்படுத்திவிட முடியாது. எனினும், தங்கள் கோரிக்கைகளுக்காகத் தங்களை இழப்பதும், இழக்கத் தயாராவதும் என்ற கருத்தொற்றுமையில் மூன்றையும் இணைத்துப் பார்க்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இப்படிப்பட்ட தற்கொடைப் போராட்டங்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. தமிழக, தமிழீழ வரலாற்றிலேயே இதற்கான முன் எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. சங்ககால வடக்கிருத்தல்’, தேவாரம் தந்த அப்பர் பெருமானின் பட்டினிப் போராட்டம் எனப் பல உண்டு. தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, 1956இல் தியாகி சங்கரலிங்கனார், விருதுநகரில், பட்டினிப்போர் நடத்தி உயிர் துறந்தார். 1960களின் மத்தியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போரில், ஏராளமான தற்கொடைகளைப் பார்க்க முடிகிறது. தீக்குளித்தோர், நஞ்சுண்டு மாய்ந்தோர் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது-. 1964 சனவரியில் தன்னை எரித்துக் கொண்ட, கீழப்பழுவூர் சின்னச்சாமி தொடங்கி, 1965 மார்ச்சில் உடல் எரிந்தபடி ஓடிவந்த மயிலாடுதுறை மாணவர் சாரங்கபாணி வரையில் இறந்து போனவர்கள் ஏராளம்.
பிறகு ஈழத்தமிழர்களுக்கான ஈகம் தொடங்கியது. 1987 நவம்பரில், திருமுட்டத்தை (ஸ்ரீமுஷ்ணம்)ச் சேர்ந்த உதயசூரியன் என்னும் தி.மு.க., தொண்டன், ஈழத்தமிழர்களின் இன்னல் தீர வேண்டும், இந்திய அமைதிப்படை திரும்பப் பெறப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளுக்காகத் தீக்குளித்தான். அதன்பின் அப்துல் ரவூப், முத்துக்குமார் எனத் தொடர்ந்து தமிழ் மறவர்கள் பலர், தமிழீழத்திற்காகத் தங்களை ஈகம் செய்து கொண்டனர்.
தமிழீழத்திலும், மாவீரர்கள் திலீபனும், அன்னை பூபதியும், காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டுத் தங்களை மாய்த்துக் கொண்டனர்.
பொது நன்மைக்காகத் தங்களையே அழித்துக்கொண்ட இத் தியாக வேங்கைகள் அனைவரையும், அவர்களுடைய உணர்வுகளையும் நாம் போற்றுகின்றோம். ஆனால் இப்போராட்ட முறை தொடர்ந்திடக் கூடாது என்பதே நம் விருப்பம்.

தோழர் தியாகுவைப் பட்டினிப் போராட்டப் பந்தலில் சந்தித்து, அவருடைய நியாயமான போராட்டத்திற்கு என்னுடைய மற்றும் நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையினுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தேன். எனினும், பத்து நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டு, போராட்டம் குறித்து மறு ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீடும், காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்பதும் மிக நியாயமான கோரிக்கைகளே. ஒரு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், பாரத மாதா கோயிலை ஒருவர் வலியுறுத்துவதும், அவருடைய கோட்பாட்டிற்கு ஏற்றதே. இருப்பினும், மூன்று கோரிக்கைகளும், வாழ்ந்து போராடிப் பெற வேண்டியவைகளே அல்லாமல், தங்களை அழித்துக் கொண்டால் மட்டுமே பெறக்கூடியவைகள் அல்ல.
தோழர் நீலவேந்தனை நான் பல கூட்டங்களில் பார்த்துள்ளேன். துடிப்பான இளைஞர். நல்ல தமிழில் தன் கருத்துகளை எடுத்துரைக்கும் நாவன்மை பெற்றவர். சமூகநீதிக் கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். அவருடைய கோரிக்கைக்கு, அவருடைய மரணத்தைவிட, அவர் வாழ்வும், செயல்பாடுகளுமே கூடுதலாகப் பயன்பட்டிருக்கும் என்பது என் கருத்து.

இலக்கியச் செல்வரோ வயது முதிர்ந்தவர். காலவரையற்ற பட்டினிப்போர் என்னும் அளவிற்கு பாரத மாதா கோயில் கோரிக்கை ஏற்றதுதானா என்று அய்யா குமரி அனந்தன் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பவர் தியாகு. 1994 முதல் 2000 வரை இருவரும் இணைபிரியாமல், இணைந்து பணியாற்றிய நாள்களை என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது. அரசியல் கருத்து வேறுபாடுகள் சிலவற்றால், 2000ஆம் ஆண்டில் நாங்கள் பிரிந்து செயல்படத் தொடங்கினோம் என்றாலும், அவரிடம் இருந்து நான் கற்றவைகளையும், பெற்றவைகளையும் ஒருநாளும் மறந்ததில்லை. அந்த அடிப்படையில்தான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிமையோடு உரையாடினேன்.
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடப்பது என்பது, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மட்டுமின்றி, ஜனநாயகத்திலும், மனித உரிமையிலும் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகும். அதனைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்பதில் நம்மில் எவருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அதற்கான கூட்டுப்போராட்டங்கள் பலவற்றை, ஒத்த கருத்துடையவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கலாம்.
அப்படியல்லாமல், தோழர் தியாகு ஒருவரே தன் உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்க வேண்டாம் என்பதைச் சொல்லுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தியாகு, ஒரு மிகச் சிறந்த படிப்பாளி, நாட்டுக்குத் தேவையான அறிவாளி. அவர் தன்னை அழித்துக் கொள்ளும் அளவுக்கு, காமன்வெல்த் மாநாடு அப்படி ஒன்றும் நமக்குக் கடைசிப் போராட்டம் இல்லை.
இவ்வாறு நான் எழுதுவதைச் சிலர் திரித்துச் சொல்லக்கூடும். ஈழத்திற்கு எதிரானவன் என்றோ, தியாகுவின் போராட்டத்தை முனைமழுங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என்றோ சிலர் கூறலாம். என்னை நன்றாக அறிந்த தியாகு உள்ளிட்ட நண்பர்கள் அப்படி ஒருநாளும் கருதமாட்டார்கள். ஒருவேளை கருதினாலும், அது குறித்துக் கவலை கொள்ளாமல் என் கருத்தை வெளியிடுவதுதான் சரி என்ற முடிவில் இதனை எழுதுகிறேன்.
தொடங்கிய பட்டினிப் போரைப் பாதியில் நிறுத்துவதா என்று தயங்க வேண்டாம். உங்கள் நோக்கம் உயர்வானது. போராட்ட வழிமுறைகளை மாற்றுவதில் பிழையில்லை.
அருமைத் தோழர் தியாகு அவர்களே, எழுந்து வாருங்கள் - இணைந்து போராடுவோம்!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)


4 comments:

  1. தொடங்கிய பட்டினிப் போரைப் பாதியில் நிறுத்துவதா என்று தயங்க வேண்டாம். உங்கள் நோக்கம் உயர்வானது. போராட்ட வழிமுறைகளை மாற்றுவதில் பிழையில்லை.இதே காரணத்தை தான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாபகரன் சென்னையில் வுண்ணாவிரதம் இருந்த போது அந்த வுண்ணாவிரதத்தை முடித்துவைத்தார்.மகாத்மா காந்தி அவர்கள் வுண்ணாவிரதம் இருந்தபோது அப்படி வுண்ணாவிரத மிருப்பது சண்டித்தனமான போராட்டம் என்றுகூட பெரியார் கூறியிருக்கிறார் காந்தியின் உண்ணாவிரதம் குறித்து பெரியார் கூறுகிறார்:

    "பல சமூகங்களின் அடிப்படையான தத்துவத்தைக் கொண்ட அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகியவற்றைக் கொண்ட அரசியல் விஷயத்தை ஒரு மனிதரின் பட்டினி விரதத்தைக் கொண்டு முடிவு செய்வது அறிவுடைமை ஆகுமா? அன்றியும் பட்டினியால் காரியம் சாதிப்பதும் பட்டினிக்குப் பயப்படுவதும் காட்டுமிராண்டிக் காலத்துச் செய்கையில்லையா? இதற்கு இணங்கினால் இனி எங்குப் போய் முடியும்?

    - [பெரியார், 21.02.1943]

    ReplyDelete
  2. பாரத மாதாவிற்கு கோவில் கட்ட போராடுவதும் ,இட ஒதுக்கிடு கோருவதும் ,ஈழ தமிழர் போராட்டமும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது தவறான பார்வையே ,அவர்கள் எடுத்த போராட்ட வழிமுறையும் தவறானது

    ReplyDelete
  3. மிகச் சரியான கருத்து.

    உயிரை மாய்த்து சாதிப்பதை விட உயிரோடு இருந்து சாதிப்பது என்பது நன்று.

    இன்று மக்கள் "விரைவாக மறக்கும்" ஆற்றலைப் பெற்றுள்ளார்கள். அதனால் ஒருவரின் தியாகத்தையும் விரைவாக மறந்து விடுவார்கள். எனவே ஒருவர் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றல் - உயிருடன் இருந்து சாதிக்க வேண்டும்.


    வாழ்க நல்ல மனிதர்கள் !
    வாழ்க மனித நேயம் !!
    வாழ்க தமிழ் !!!

    ReplyDelete
  4. தியாகு, ஒரு மிகச் சிறந்த படிப்பாளி, நாட்டுக்குத் தேவையான அறிவாளி. அவர் தன்னை அழித்துக் கொள்ளும் அளவுக்கு, காமன்வெல்த் மாநாடு அப்படி ஒன்றும் நமக்குக் கடைசிப் போராட்டம் இல்லை.
    ஐயா சுபவீ அவர்களே,உங்களுடைய மேற்கண்ட இந்த கருத்தில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு . தோழர் தியாகுவின் எழுத்துக்களும் பேச்சுக்களும் செயல்பாடுகளும் இந்த தமிழினத்திற்கு தேவைப்படுகிறது. எனவே தோழர் தியாகு உண்ணாநிலையைக் கைவிட்டு வேறுவகையான போராட்ட நிலையைக் கையிலெடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete