தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 6 February 2016

இரண்டும் ஒன்றா?


தமிழக அரசியல் அரங்கில், தி.மு.க.வை எதிர்ப்பதற்கு, இப்போது ஒரு புதிய உத்தி புறப்பட்டிருக்கிறது. தி.மு.க.வையோ, கலைஞரையோ எதிர்க்கும்போது நேரடியாக எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.வையோ , ஜெயலலிதாவையோ எதிர்க்கும்போது, இரண்டு திராவிடக் கட்சிகளுமே இப்படித்தான் என்று, தி.மு.க.வையும் சேர்த்தே தாக்குகின்றனர். அதன்மூலம், அ.தி.மு.க.வின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர். 


தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஒன்றுதான் என்று திரும்பத் திரும்பப் பல கட்சிகளும், சில தமிழ்த் தேசியக் குழுக்களும்  கூறுகின்றன. அவை இரண்டும் ஒன்றல்ல என்பதை இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். அரசியல் அறிந்த அனைவரும் அறிவார்கள். ஏன், இந்தக் குற்றச்சாற்றைக் கூறும் பலரே அறிவார்கள். எனினும் இந்தப் பல்லவியைத் தொடர்ந்து அவர்கள் பாடுவதற்கு என்ன காரணம்?

அவர்களின் நோக்கம், தி.மு.க.வை எதிர்ப்பது மட்டும்தான். ஆனால் அப்படிச் செய்தால் அது ஒரு பக்கச் சார்பு ஆகிவிடும். நடுநிலை வேடத்துக்கு அது பொருந்தி வராது. எனவே இரண்டையும் தாக்குவது போல ஒரு தோற்றத்தைக் காட்டிக்கொண்டு, தி.மு.க.வைத் தாக்கி அழிப்பதே அவர்களின் முழுமையான நோக்கம். அவர்கள் அனைவரும் ஒப்புக்கு அ.தி.மு.க.வைத் தாக்குகின்றனர். உண்மையில் தி.மு.க.வை மட்டுமே அழிக்க நினைக்கின்றனர். 

பார்ப்பனர்கள். பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பன அடிவருடிகள் ஆகியோர் இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தி.மு.க.வின் மீது அப்படி என்ன கோபம்? தி.மு.க. என்பது கடவுள் மறுப்புக் கட்சியோ, பார்ப்பன எதிர்ப்புக் கட்சியோ இல்லை. தி.மு.க.வில், தலைவர் கலைஞர்,  இனமானப் பேராசிரியர் உள்படப் பகுத்தறிவாளர்கள் பலர் உள்ளனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் பெரும் அளவில் இன்று உள்ளனர். அதே போல, பார்ப்பன எதிர்ப்புச்  செய்திகள் தி.மு.க. மேடைகளில் பெரிதாக இடம்பெறுவதுமில்லை. எனினும் பார்ப்பனர்கள் தி.மு.க.வைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். 

தி.மு.க. பார்ப்பனர் எதிர்ப்புக் கட்சியில்லை. ஆனால், பார்ப்பனர்களால் எதிர்க்கப்படும் கட்சியாக உள்ளது. என்ன காரணம்?

பார்ப்பனர்களைக் கடுமையாக எதிர்க்கும் திராவிடர் கழகம், பெரியாரிய அமைப்புகளைக் கூட அவர்கள் இந்த அளவிற்கு எதிர்ப்பதில்லை. தி.மு.க.வைத்தான் குறிவைத்துத் தாக்குகின்றனர். எண்ணிப்பார்த்தால், அதற்கான  இரண்டு காரணங்களை நம்மால் கண்டறிய முடியும்.

தி.க. உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. போட்டியிட்டாலும், அவை வெகு மக்கள் கட்சிகள் இல்லை என்பதால், வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆட்சிக்கு வரக்கூடிய அளவிற்கு மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ஒரே திராவிட இயக்கக் கட்சி, தி.மு.க.தான் என்பதால் அதனை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஆட்சியை இழக்கப் போவது, அவர்களின் தலைவியாகிய ஜெயலலிதாதான் என்பதாலும் தி.மு.க.வை எதிர்க்கின்றனர். ராஜாஜிக்குப் பிறகு, பல ஆண்டுகள் காத்திருந்தபின், அவர்கள் சாதியிலிருந்து ஒரு முதல்வரை அவர்கள் பெற்றுள்ளனர். இவரை விட்டால், அந்தச் சாதியிலிருந்து இன்னொருவர் யாரும் முதல்வர் பதவிக்கு வர இப்போது வாய்ப்பில்லை. எனவே அவர்களின் 'இனப்பாசம்', தி.மு.க.விற்கு எதிராக மக்களைத் திரட்டுகிறது. 

தங்கள் இனத்திலிருந்து ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயற்கை. அதே மாதிரி, தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று ஏன் தமிழர்கள் நினைக்கவில்லை. அப்படி எவரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், இரண்டும் ஒன்று என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம், மூன்றாவது அணியைத் தேர்ந்தெடுங்கள் என்று நமக்குப் பரிந்துரை செய்கின்றனர். 

அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். மூன்றாவது அணி. நான்காவது அணி, நாற்பதாவது அணி என்பது எல்லாம் ஒரு பேச்சுக்குத்தான். இறுதியில் மோதப்போவது இரண்டு அணிகள் மட்டுமே என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள்! இரண்டு அணிகளையும் ஒரே இடத்தில் நிறுத்தினாலும், அந்த அணிக்கு விழப்போகிற ஒரு வாக்கு கூடச் சிதறாது. 'இரண்டையும் ஒழிக்க வேண்டும்' என்று உரத்துப் பேசுகின்றவர்கள் கூட, தேர்தல் நாளில், காலையில் வாக்குச் சாவடிக்குச் சென்று  வரிசையில் நின்று, அ.தி..மு.க.விற்கு வாக்களித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.

அவர்களின் பேச்சை நடுநிலை என்று நம்பி ஏமாறும் நம்மவர்கள்தாம் வேறு ஏதேனும் ஓர் அணிக்கு வாக்களித்துவிட்டு வருவார்கள். அப்படி வேறு அணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஏறத்தாழ செல்லாத வாக்குகளே என்பதை நாம் உணர வேண்டும்.  அதனால் அ.தி.மு.க. விற்கு மறைமுகமான பலன் ஏற்படும். இந்தக் குழப்பங்கள் இல்லையென்றால், தி.மு.க.வின் மீது விமர்சனம், அதிருப்தி ஆகியன இருந்தாலும், இருப்பதில் மேலானது என்று கருதித் தி.மு.க.விற்கு வாக்களிக்கின்றவர்களே அவர்கள்! அவர்களைத் திசை திருப்புவதே, இரண்டும் ஒன்று என்று சொல்வதின் நோக்கம். இரண்டையும் ஒன்றாகக் காட்டி, தி.மு.க.விற்கு வரக்கூடிய வாக்குகளைப் பிரிப்பதே அவர்களின் உத்தி.

யாருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று கூறும் சில குறுங்குழுக்களின் நோக்கமும் அதுதான். யாருக்கும் வாக்களிக்காமல் வேறு என்ன செய்வது? தமிழ்த் தேசியப் புரட்சியில் ஈடுபடலாம் என்கின்றனர் சிலர். தமிழ்த் தேசத்தை உருவாக்கத் தேவையான திட்டமோ, பெரும் படையோ அவர்களிடம் உள்ளதா? நாம் இந்தத் தெரு முனையில் நின்று பேசினால், அவர்கள் அந்தத் தெரு முனையில் நின்று பேசுகின்றனர். அவ்வளவுதான். வேறு எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை. திராவிட இயக்கத்திற்கு எதிரான, பார்ப்பன ஆதரவுக்கு குழுக்களின் முகமூடிகளே,  தேர்தல் எதிர்ப்பு, நடுநிலை என்பதெல்லாம்! 

தி.மு.க.வை விமர்சனமே செய்யக்கூடாது என்று நாம் கூறவில்லை. எல்லாக் கட்சிகளும் விமர்சனகளுக்கு உட்பட்டவையே. தி.மு.க.வின் குறைகளை எடுத்துக் காட்டுவதில் நமக்கு வருத்தம் ஏதுமில்லை. ஆனால், தி.மு.க.வைத் தனியாக விமர்சனம் செய்யுங்கள். அ.தி.மு.க.வுடன் சமப்படுத்தி விமர்சனம் செய்வதில் உள்ள ஏமாற்று வேலையைப் புரிந்து கொள்ளுங்கள்  என்பதே நம் வேண்டுகோள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்றில்லை, ஒன்றில்லை, ஒன்று இல்லவே இல்லை.

இரண்டும் ஒன்றில்லை என்பதற்கு என்ன சான்று என்று கேட்கலாம். ஒரு கட்சியின் ஆட்சி இரண்டு வகைகளில் செயல்படும். ஒன்று மக்கள் நலம் சார்ந்ததாகவும்,இன்னொன்று கொள்கை உரம் சார்ந்ததாகவும் இருக்கும். இரு வகைகளிலும், இரண்டு கட்சிகளின் ஆட்சிகளுக்கும் இடையில் பார தூரமான வேறுபாடுகள் உள்ளன. அவற்றை அடுத்த இதழில் ஒரு பெரும் பட்டியலாகவே மக்கள் முன் வைக்கிறோம்.

இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராசர் சொன்ன போதே நாடு ஏற்கவில்லை. இவர்கள் சொல்லியா ஏற்கப் போகிறது? இருப்பினும் நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. சிந்தாமல், சிதறாமல் ஒவ்வொரு வாக்கையும் தி.மு.க. கூட்டணிக்குக் கொண்டு வந்து சேர்த்தாக வேண்டும்!  துருப்பிடித்துப் போன ஜெயலலிதாவின் ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்றியாக வேண்டும்!!


7 comments:

  1. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே
    திமுக வை எதிர்த்தால் பார்ப்பனிய ஏடுகளின் ஆதரவு அவர்களுக்கு தாராளமாக கிடைக்கிறது ஆனால் அந்த வெளிச்சத்தில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படுகிறது
    மீண்டும் ஆரிய ஆட்சி வராமல் இருக்க திமு கழகத்தை ஆதரிப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்

    ReplyDelete
  2. திமுகவையும் கலைஞரையும் எவ்வளவுதான் தாக்கி பேசினாலும் அவர்கள் ஒருபோதும் பழிவாங்க மாட்டார்கள். எனவே சுகமாக தாக்கலாம். மாறாக அதிமுகவினரையோ அல்லது அம்மாவையோ தாக்கி பேசினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். அது ஒரு மாபியா கூடாரம் போலல்லவா இயங்குகிறது. எனவே அரசியல் சீனில் இருந்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ள சிலருக்கு வேறு மார்க்கமே தெரிவதில்லை. ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடிக்கும் போராட்டத்தில் இது ஒரு சுலபமான வழி. அவருக்கும் சதா தனது கட்சிக்காரர்கள் பாடும் அம்மா புராணம் கேட்டு சலிப்பு வராதா? கலைஞரை தாக்கினால் அம்மாவுக்கு ஒரு திரில் கிடைக்கும் அவ்வளவுதான். அந்த திரில்லை அவர்களுக்கு வழங்கும் இந்த நடுநிலையாளர்கள் உண்மையில் அதிமுகவின் கள்ள காதலர்கள்தான்

    ReplyDelete
  3. திமுக அதிமுக சில நுணுக்கமான வித்யாசங்கள்

    1) அதிமுக : எந்த புதிய ரோடும், பாலங்கள், நான்கு வழி சாலைகள் போட மாட்டார். அகலமான ரோடு போட சொன்னால் மினி பஸ் விடுவார். அப்படியே ரோடு போட்டால் அங்கு நிலங்களை அதிமுகவினர் வளைத்து போட்டு இருக்க வேண்டும்.
    திமுக : புதிய புதிய ரோடுகள் நான்கு வழி சாலைகள், பாலங்கள் உருவாகும். தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பு (infrastructure ) அடியோடு மாறும்.


    2) அதிமுக :இயற்கை வளங்களை அழிக்கிறார். ஏரியில் திருமழிசை நகரம் அமைக்கிறார். நன்மங்கலம் காடு காணாமல் போக போகிறது என்று சொல்கிறார்கள். பையனூரில் நிறைய கெமிகல் கம்பனிகள் அமைய இருக்கின்றன. திருவள்ளூர், செய்யூர் ஊருக்கு நடுவே அனல் மின் நிலையம் புகை கக்க போகிறது.
    திமுக: மீத்தேன் வாயு எடுக்க அனுமதி கொடுத்து விட்டு பின்வாங்கி விட்டனர். கூடங்குளம் மற்ற ஒன்று. மற்ற படி இயற்கை வளம் காப்பது புதிய பூங்காக்கள் அமைப்பது என்று திமுகவினருக்கு குறிப்பாக தளபதிக்கு ஈடு இணை கிடையாது.

    3) அதிமுக: முன்னேற்றம் என்பது குறிக்கோள் அல்ல. ஜாதி ஆளுமைதான் குறிக்கோள்
    திமுக: முன்னேற்றம் நிச்சய குறிக்கோள். ஆனால் சில பேர் உள்ளே விட்டால் செயல் புரியாமல் கெடுத்து விடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு உள்ளவர்கள்.

    4) அதிமுக : அவருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும் இடங்களை நோக்கி குப்பை கொட்டும் இடங்கள் அமைப்பர். இது போல அவர்களுக்கு பிடிக்காதவர்கள், சூத்திரர் அல்லாதவர்கள் கண்ணுக்கு தெரியாத நிறைய சோதனைகளை ஐந்து ஆண்டு எதிர் கொள்ள வேண்டும்.
    திமுக : எதாவது மாற்று வழி முறைகள் சொன்னால் காது கொடுத்து கேட்பார்கள்.

    5) அதிமுக : தேவர், நாயுடு, கவுண்டர் ஜாதி சொல்வதுதான் அவர்கள் நினைபதுதான் ஐந்து ஆண்டு கால ஆட்சி. எல்லா தகவல் தொடர்புகளும் இவர்கள் மூலமாகத்தான். கள்ளர்கள் பயன் பெறுவது போல தோன்றினாலும் கடைசியில் அவர்களுக்கு நஷ்டம்தான் .
    திமுக : போட்டியாக சில வேலைகள் செய்தாலும், எல்லாரும் வளம் பெரும் அடித்தட்டு மக்கள் பயன் பெரும் செயல்கள் அதிகம்.

    6) அதிமுக : பாஹுபலி போன்ற ஆதி தமிழர்களை அசிங்க படுத்தும் படங்களை விரும்பி காண்பிக்க படும். அதனை எடுக்கும் நாயுடு சாதியினருக்கு அணைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும்.
    திமுக: எல்லாரையும் அனுசரித்து போவது போல தெரிந்தாலும் திராவிடர்கள் நினைப்பது நடக்கும். ஆனால் எல்லாரும் பயன் பெறுவார்கள்.


    7) அதிமுக : அம்மா பிராண்டில் ஏற்கெனவே தோற்றுப்போன கம்யூனிச சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறார். மிகபெரும் பணக்காரர்கள் ஒரு பாதிப்பும் இல்லை. பிரமணர்கள் இருக்கும் தொழில்கள் எந்த பதிப்பும் இல்லாமல் மற்ற தொழில் புரிவோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் போடுகிறார்.
    திமுக: தொழில் புரிவோர் அனைவருக்கும் உதவி கிடைகிறது. அவர் விரும்பும் மனிதர்கள் அதிகம் உதவி கிடைகிறது.

    ReplyDelete
  4. திமுகவை அனைவரும் ஆதரித்தால் அதிமுக காணமல் பொய் விடும். மக்கள் விழிப்புற வேண்டும்.எது சிறந்த ஆட்சி என்று ஒப்பிட்டு ஒட்டு போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கண்டுபுடிப்பு.. திமுகவை அனைவரும் ஆதரித்தால் அதிமுக காணமல் பொய் விடும்.
      அதிமுகவை அனைவரும் ஆதரித்தால் திமுக காணமல் பொய் விடும்.
      காங்ரசை அனைவரும் ஆதரித்தால் பாஜாக காணமல் பொய் விடும்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

      Delete
  5. திமுக, அதிமுக – இரண்டும் ஒன்றில்லை. ஏனெனில், ஒன்று – கொள்கைகளால் கட்டப்பட்டது. மற்றொன்று – கவர்ச்சியால் உருவானது.

    இருப்பினும், இருந்த / இருக்கின்ற/ இருக்கப்போகிற சூழ்நிலை இதுதான்.

    மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற எந்த ஒரு அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் ( அஞ்சலக துறை தவிர), கருப்பு பண தொழிற்சாலை இல்லாமல் இயங்காது என்பது அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை.

    கருப்பு பண தொழிற்சாலை - என்ற கொடிய நச்சினை எந்த கட்சி சார்ந்த அரசு முறியடிக்கிறதோ, அந்த கட்சிக்கு மக்கள் என்றென்றும் நன்றி கடன்பட்டவர்களாவார்கள்.

    அந்த வகையில், தற்போது எந்த கட்சியையும் இனம் காண முடியாமல் துவண்டு விட்டனர்.

    நாடு முன்னேற, பொருளாதாரமும் முன்னேற வேண்டும், சமூகமும் சமனிலை அடையவேண்டும். அதுதான் உண்மையான முன்னேற்றம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியதுபோல், “ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அதுதானே வளர்த்தி”.

    ReplyDelete
  6. இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று ஏன் தமிழர்கள் நினைக்வில்லை என்பது உள்நோக்கம் கொண்டது.ஏன் கலைஞர் மட்டும் தான் தமிழரா?(பலர் அவர் தெலுங்கர் என்று சந்தேகத்தை கிளப்பவது வேறு விஷயம்).திருமா தமிழன் இல்லையா?வைகோ தமிழன் இல்லையா?மு்த்தரசன் தமிழன் இல்லையா?ஜிரா தமிழன் இல்லையா?.ஒரே ஜாதி அதிலும் ஒரே குடும்பம் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைச் சுவைப்பது சமூகநீதி கோட்பாட்டுக்கு விரோதமானது என்பது உங்களைப்போன்ற[?போலி] சமூகநீதியாளர்களி்ன் மாலைக் பார்வைக்குத் தெரியாமல் போனது எப்படி?.அர்ச்சகராக தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று நியாயமான போர்க்குரல் எழுப்பிய சுபவீ அவர்கள் ஏன் திமுக தலைமைப் பதவிகளுக்கு,திமுகவின் சார்பாக தமிழகத்தின் முதலமைச்சர்,துணை முதலமைச்சர் பதவிக்கு வர ஒரு தாழ்த்தப்பட்டவர் அறிவிக்கப்படவேண்டுமென்றால் மட்டும் பின் வாங்குகிறார்? அதன் உள்நோக்கம்.....

    ReplyDelete