தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 24 April 2016

அரசியல் மேடை - 25

 நல்லவருக்கு வாக்களிக்கலாமா?


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில், கல்வியாளர் வசந்தி தேவி, விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான வசந்தி தேவி, இடதுசாரிச் சிந்தனையாளர் என்பதும்  சமூக அக்கறை மிக்கவர் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவே அவருக்காக அறிவாளர்கள் சிலர் தங்கள் முகநூல் பக்கங்களில் ஆதரவுக் கருத்தினைப் பதிவிட்டுள்ளனர். நல்லவருக்கு, வல்லவருக்கு வாக்களியுங்கள் என்னும் கோரிக்கையும் ஆங்காங்கு கேட்கிறது.


நல்லவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை யார்தான் மறுப்பார்கள்? ஆனாலும் நல்லவர் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது, தனி ஒரு நல்லவர் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்று என்ன செய்ய முடியும் என்று இரண்டு வினாக்கள் நம் முன் உள்ளன.

நல்லவர் என்றால் யார்  என்று எளிதில் வரையறை செய்து விட முடியாது.அது ஒரு பொத்தாம் பொதுவான சொல். ஒருவருக்கு நல்லவராக இருப்பவர், இன்னொருவருக்குக் கெட்டவராக இருப்பார். நாம் வாழும் காலமோ அவதூறுகள் நிறைந்த காலம். சொல்லப்படும் குற்றச்சாற்றுகளில் உண்மைகளும், பொய்களும் கலந்தே கிடக்கின்றன. உண்மை அறியும் குழுவை நியமித்து, நல்லவரைக் கண்டறிவதற்குள் தேர்தல் முடிந்துபோய் விடவும் வாய்ப்பு உள்ளது.

இதனை விட முதன்மையானது எதுவெனில், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில் 'ஒரு நல்லவர்' என்ன செய்து விட முடியும் என்பதுதான். உள்ளாட்சித் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. உள்ளாட்சித் தேர்தலில், கட்சி பேதம் பார்க்காமல், ஊருக்கு உழைப்பவரை நாம் தேர்ந்தெடுக்கலாம். அங்கு கட்சிகளுக்கு வேலையில்லை.

ஆனால் சட்ட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவை சட்டங்களை உருவாக்கும் அமைப்புகள் (Constitution making bodies). அங்கே கட்சிகள்தாம் எதனையும் தீர்மானிக்கும் உரிமை உடையவை. தனி மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குச் செயல்பட முடியாது. கட்சி கட்டளைகளை (Whip) மட்டும்தான் அவர்கள் நிறைவேற்ற முடியும். அப்படிச் செய்கின்றனரா என்று கவனிப்பதற்குத்தான் கொரடா என்று ஒருவரை ஒவ்வொரு கட்சியும் நியமிக்கிறது. கட்சிக் கட்டளையை மீறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு தீர்மானத்தையும், கட்சி கட்டளையிட்டால் அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும். தாங்கள் விரும்பும் தீர்மானத்திற்கு எதிராகவும், கட்சியின் ஆணைப்படி வாக்களிக்கவும் நேரும். எனவே, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்களைப் பார்த்து வாக்களிக்கக் கூடாது. கட்சியைப் பார்த்தே வாக்களிக்க வேண்டும்.

இந்த அடிப்படையை நாம் உள்வாங்கிக் கொள்ளும்போது இன்னொரு உண்மை நமக்குப் புரியும். ஆர்.கே. நகரில் வசந்தி தேவிக்கு ஆதரவாக விழும் ஒவ்வொரு வாக்கும் விஜயகாந்த்க்கு விழும் வாக்காவே அமையும். சிம்லா முத்துச் சோழனுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் கலைஞரைச் சென்றடையும். ஜெயலலிதாவிற்கு அளிக்கும் வாக்குகள் மட்டுமே அவருக்குப் போகும்.

ஆதலால் ஆர்.கே. நகர் தொகுதியில் வசந்தி தேவியும், சிம்லாவும் போட்டியிடவில்லை.அவர்களை மறந்து விடுங்கள். அவர்கள் வெறும் குறியீடுகள் மட்டுமே.  விஜயகாந்தும், கலைஞரும் போட்டியிடுகிறார்கள் என்று புரிந்து கொண்டு, தமிழகத்திற்குக் கலைஞர் முதல்வராக வருவது நல்லதா, விஜயகாந்த் முதல்வராக வருவது நல்லதா என்பதை முடிவு செய்யுங்கள்.



இடையிடையே அன்புமணி வேறு குறுக்கிடுகின்றார். முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவரால் நிற்க முடியாது, ஒருவரால் நடக்க முடியாது, ஒருவரால் சரியாகப் பேச முடியாது, விரைந்து ஓடும் ஆற்றல் மிக்க எனக்கே ஓட்டுப் போடுங்கள் என்கிறார்.

மே 16 அன்று தமிழ்நாட்டில் நடக்க இருப்பது தேர்தல்தானே தவிர, ஓட்டப்பந்தயம் இல்லை என்பதை அவருக்குச் சொல்லுங்கள்!



10 comments:

  1. இரத்தினவேல்24 April 2016 at 20:22

    செயல்படாத, சர்வாதிகார அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வலிமை தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகள் அல்லது தனிநபர்களுக்கு அளிக்கும் வாக்குகள் விரையமாகிவிடும் என்பதை வாக்காளப் பெருமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Assembly is not constitution making body. It can be called law making body. Only Parliament can amend Constitution.

    ReplyDelete
  3. கண்ணதாசன் ஜெயகாந்தன் போன்றோர் கட்டுத்தொகை இழந்ததை நானறிவேன்

    ReplyDelete
  4. இந்த அம்மையார் கண்டிப்பாக தோல்வி அடைவார்! இதுதான் எதார்த்தம் இதனை மறுத்து பேசுவார்கள் என்றால் அவர்களின் நம்பிக்கை என்பதே தவிர வேறு ஒன்றும் இல்லை! இது திமுகழகத்துக்கும் போருந்தும்!! ஒடுபவர்தான் முதல்வர் என்றால் பிடி உஷா தான் முதல்வர் ஆகலாம்!!

    ReplyDelete
  5. பேராசிரியர் சுபவீ அய்யாவின் இந்த கட்டுரையை படித்தவுடன் திருமதி சிம்லாவின் தொ.கா நேர்க்காணல்களும் கல்வியாளர் வசந்திதேவி அவர்களின் ஆளுமைகளும் நினைவுக்கு வருவதைத்தடுக்கும் ஆற்றல் கட்டுரைக்கு இல்லை.

    ReplyDelete
  6. இவர்களை போல பள்ளி தாளலர்கல்தான் மோசமான கொள்ளையர்கள். இவர்களை எப்படியாவது அரசு கட்டுபடுத்த வேண்டும. தனி சட்டம் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கொண்டு வர வேண்டும்.
    நீயா நானாவில் விவாதிகபட்டது Neeya Naana episode 505 Parents Vs School Management

    ReplyDelete
  7. நல்லவரை தேர்ந்துஎடுக்க வேண்டுமானால் 1967 இல் பெருந்தலைவர் வெற்றி பெற்றுஇருப்பார்,, தனி மனிதன் நல்லவர் ஆய் இருப்பதை விட கொள்கை உடைய அரசு வேண்டும் என்று தான், அன்று நம் பேரறிஞர் அவர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்,, இம்முறை உம் அது போலவே தி மு கழகம் ஆட்சி அமைக்கும்

    ReplyDelete
  8. Dear Sp.V. Sir,

    I understand what you mean in this article. But many may misunderstand it.

    You may have to write a detailed article about why you support DMK and how they can help Tamil Nadu better than other parties. Once you write that, it may clarify the misunderstanding arising out of this article written by you.

    If I remember correctly, once you were supporting VCK, PMK, MDMK and Communist parties. You also had good respect for Thiru Thirumavalavan, Thiru Ramadoss and Thiru Vaiko. You must also explain why you are no longer supporting them.

    Also I do believe that Thiru Seeman and you have good respect for each other. How Thiru Seeman is deviating from your ideas must be explained - which may clarify your stand in supporting DMK with respect to Sri Lankan Tamils issue.

    anbudan,
    Viru

    ReplyDelete
  9. கட்சியை பார்த்துதான் வாக்களிக்க வேண்டும் வேட்பாளர்களை பார்க்க தேவையில்லை, அப்படியானால் கட்சிகள் நடத்தும் விருப்ப மனு , நேர்கானல் எல்லாம் ஏமாற்று வேலையா? ஒவ்வொரு கட்சிகளும் எங்கள் வேட்பாளர்
    படித்தவர், பண்பாளர் என்று ஏன் கூவி வாக்கு கேட்கிறார்கள், கட்சி சொல்வதை செய்வதற்க்கு காதும் வாயும் செயல்படுபவர் போதுமே.கழுதையின் முகத்தில் கலைஞர் அல்லது
    அம்மா வின் படத்தை ஒட்டி வேட்பாளராக நிறுத்த வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. சிறுதுளி பெருவெள்ளம் என்பதாக ஓரு துளி கூட நல் துளியாக இருப்பதை தாங்களும் தங்கள் ஆதரவாளர்களும் விரும்பவில்லை என்பதை இப்பதிவின்மூலம் உணர்கிறேன்.

    ReplyDelete