தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 31 May 2016

தமிழகத் தேர்தலும், மூன்று வினாக்களும்!


அவர்களுக்குப் பெரிய வெற்றியும் இல்லாமல், நமக்குப் பெரிய தோல்வியும் இல்லாமல் தீர்ப்பளித்துள்ளார்கள் தமிழக மக்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்! அவர்கள் அணிக்கு 1.76 கோடி வாக்குகளும், நமக்கு 1.71 கோடி வாக்குகளும் கிடைத்துள்ளன.  வெறும் 4.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்!

ம.ந.கூ., பா.ம.க., பா.ஜ.க., தொடங்கிப் பல்வேறு கட்சிகளும், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிக்காதீர்கள் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். மக்களோ, அந்த இரண்டு கட்சிகளை மட்டும்தான் தங்கள் வாக்குகளால் தேர்ந்தெடுத்துள்ளனர். வேறு எந்த ஒரு கட்சியையும் சேர்ந்த எவர் ஒருவரையும் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பவில்லை.


இரண்டு கட்சிகளும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இம்முறை நாங்கள்தான் வென்று ஆட்சி அமைப்போம் என்றார் வைகோ. பண அலையைப் பா.ம.க. வெல்லும் என்றார் அன்புமணி. ஆனால் இன்று, பணபலம் வென்றுவிட்டது எனக் கூறுகின்றனர்.
அவர்கள் சொல்வதை உண்மை என்று ஏற்றுகொண்டால், மூன்று வினாக்களுக்கு அவர்கள் விடை சொல்ல வேண்டும்!

1. இரண்டு கட்சிகளுக்கும் வாக்களித்த 80.5 விழுக்காடு (40.8+39.7) மக்களும் வெறும் பணத்திற்காக மட்டுமே வாக்களித்தவர்களா?  பணத்திற்கு ஒரு பங்கு (role) இருக்கலாம். ஆனால் அதுவே அனைத்தையும் முடிவு செய்கிறது என்று கூறுவது, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது ஆகாதா?

 2.  இனி எந்தத் தேர்தலிலும், எந்தக் கட்சியும் வாக்குகளுக்குப் பணம் கொடுக்காது என்பது உறுதியாகி விட்டதா? இல்லையெனில், இனி உங்களுக்கு எந்தத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு இல்லையா? பண அலையைத் தாண்டி வெற்றி பெறுவோம் என்பது வெறும் வாய் வீரமா?

3.  புதிய வாக்காளர்கள் 1.12 கோடிப் பேர் உள்ளனர். அவர்கள் தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறினீர்களே, அவர்கள் என்ன ஆனார்கள்? ஏன், அவர்களும் உங்களுக்கு வாக்களிக்கவில்லை? அந்த இளைஞர்களும் பணபலத்திற்குப்  பலியாகி விட்டார்களா?

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையமோ, சில கட்சிகளோ முன்னின்று மக்களுக்குப் பணம் கொடுப்பதை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. மக்களே திரண்டெழுந்து பணம் கொடுக்க வருகின்றவர்களை எதிர்த்தால், அந்தக் கொடிய பழக்கம் தானாகவே நின்றுவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுப்  பணமே கொடுக்கப்படவில்லை என்றாலும்,  இன்றைய சூழலில் இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெறும்  என்பது வெளிப்படையான உண்மை. 


இருதுருவ அரசியல் மட்டுமே இங்கு நிலைக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. அப்படிக் கூறவும் முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது என மட்டுமே நாம் குறிக்கின்றோம். இரண்டு கட்சிகளுக்கும் உள்ள அமைப்பு வலிமையைப் புறக்கணித்துவிட்டு, பணத்தால்தான் அவர்கள் வெற்றி பெற்றனர் என்று நம்புகின்றவர்கள், பாவம்,  வருங்காலத்திலும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. 

5 comments:

  1. மதிப்பிற்குரிய சுபவீ ஐயா,, கடந்த பதிவிற்கு பதில் அளித்த போல் இந்த பதிவிற்கு இடையில் இரண்டு சொற்பொழிவுகளை கேட்டேன்,, நுகர்வு×துறவு,, கருப்பு மற்றும் வெள்ளை,, அருமையான சொற்பொழிவு, பெரியார் வழியில் இருக்கும் திராவிட பேரறிஞர்களை ,,,துரோணர் இடம் ஏகாலயவன் கற்றதை போல் காண்ஒளிகள் இல் கற்பது வேடிக்கை ஏ,,,,

    ReplyDelete
  2. இரத்தினவேல்1 June 2016 at 15:26

    தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கட்சிகள் தங்கள் படுதோல்விக்கு என்ன காரணம் என்று தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். இரண்டு கட்சிகளையும் குறைகூறி ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று நினைத்தால் அது வெறும் கனவாகத்தான் முடியும்.

    ReplyDelete
  3. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராகியிருக்கிறார்! ஏன் ஆ.ராசா தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தாரே என்பதைத் தாண்டி புள்ளி விபரங்களை அடுக்க முடியவில்லை.நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவிகிதத்துக்கும் குறையாமல் இருந்தும் தலித்துகளுக்கு அரசியலிலும் குடிமைப் பணிகளிலும் போதிய வாய்ப்புகள் தரப்படுவதில்லை. அரசாங்கத்தில்/மந்திரிசபையில் அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டே வருகிறது. நிதித்துறைச்செயலாளர்,உள்துறைச் செயலாளர் போன்ற பதவிகள் இன்னமும் தலித் அதிகாரிகளுக்குக் கிடைத்தப் பாடில்லை.சரி மந்திரிசபைக்கு வருவோம்,அங்கே நிலைமை மேம்பட்டிருக்கிறதா என்றால் அங்கே இன்னும் மோசம்.மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்குள் அடங்கி விடக் கூடிய சாதிகளுக்கெல்லாம் ஒன்பது அமைச்சர்,ஆறு அமைச்சர்,ஐந்து அமைச்சர் என வாரி வழங்கப்படும் போது தலித்துகளுக்கு எப்போதும் ஓரிரு அமைச்சர் பதவி மட்டும்தான் சாத்தியமாகும், அதில் ஆதிதிராவிடர் நலத்துறை ஒன்று நிச்சயம்.சரி தலித் கிறித்துவர் ஒருவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட ஒரு காரணத்தினாலேயே சமூகநீதியில், வன்கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படுவதில் அதிமுக திமுகவை விட மேலானதா என்றால் ஆம் என்று ஆணித்தனமாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விஷயத்தை முன் வைக்க வேண்டியிருக்கிறது.
    ஹேய்ய்ய்ய்ய் அமைச்சர் நம்ம ஆளாம்ல நம்ம ஆளுக ஒன்பது பேர் அமைச்சராம்ல என்கிற மனப்பாங்கு நிறைந்த மக்கள் வாழும் சமூகத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இரண்டாவது முறையாக சபாநாயகர் ஆவதையும் அதே சமூகத்தில் இருந்து ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதையும் பள்ளிக்கல்வித்துறையை ஒரு தலித் அலங்கரிப்பதை அந்தச் சமூக மக்கள் ரசிப்பதை புறந்தள்ள முடியவில்லை(இதுவரை திமுகவில் இது போல நிகழ்ந்ததில்லை).தலித்துகள் முதலமைச்சராவதும் பல துறைகளின் அமைச்சராவதும் ஏன் நாட்டிற்கே ஜனாதிபதியாவதும் மற்ற மாநிலங்களில் இருந்து சாத்தியமாகும் போது பெரியார் பூமி என்று உதார்விடும் திராவிட பிழைப்புவாத அரசியல் கட்சிகளால் ஏன் அப்படிப்பட்ட நிலைமை உருவாகவில்லை என்ற கேள்வியைத் தவிர்க்கவும் முடியாது,புறக்கணித்திடவும் முடியாது. தலித் என்றால் அவன் சரணாகதி அடைந்து வாழ்பவன்,அவன் ஆதிக்கச் சாதியினரை நக்கிப் பிழைத்து வாழ்பவன் என்ற சிந்தனை ஆதிக்கச் சாதியினருக்கான திராவிட அரசியல் கட்சிகளில் பிற அரசியல் கட்சிகளை விட கூடுதலாக இருக்கிறதோ என்ற பலத்த ஐயம் தமிழக தலித்துகள் மனதில் ஆழமாகவுள்ளது!.

    ReplyDelete
  4. I.இந்தியாவில் எத்தனையோ ஞானிகள், அறிவு ஜீவிகள் தோன்றியிருகிறார்கள். ஒருவருடைய சிந்தனையிலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு புரட்சியாளர் அம்பேத்கர் மூளையில் இருந்து மட்டும்தான் உதித்திருக்கிறது.
    காந்தி பெரிய ஞானிதான். ஆனால் அவர் அதை சிந்திக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பெரிய சிந்தனையாளர்தான். ஆனால் அவருக்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்க முடியவில்லை.சாதி ஒழிப்பு என்கிற அந்த சொல்லாடல், அந்த சிந்தனை, இந்த ஒரு தலைவருக்கு மட்டும் ஏன் வந்தது ? சாதியின் கொடுமை, சாதி இந்துக்களுக்குத் தெரியாது. வலியை உணர்ந்த தலித்துக்களுக்கு மட்டும்தான் வலியின் கொடுமை தெரியும்.இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற சாதி இந்து தலைவர்கள் யாரும் சாதி ஒழிப்பை பற்றி ஒருநாளும் சிந்தித்துமில்லை, எழுதியதுமில்லை,பேசியதுமில்லை.இந்தியா முழுக்கவும் இருக்கிற தலித் இந்து காலனி எல்லாமே ஏன் சிறு சிறு கிராமமாக இருக்கிறது ? .உலகம் முழுவதும் இப்படிதான். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குகிறார்கள். தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள துடிக்கிறார்கள். உதாரணத்திற்கு மக்கள் நல கூட்டணி – அதிமுகவின் பி டீம் என்று கூறினார்கள். இது கருத்துருவாக்கத் தளத்தில் இருந்துதான் வெடித்து கிளம்பியது.அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க கூடிய வேலையை விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்க கூடிய மக்கள் நல கூட்டணி மட்டும்தான் செய்ததா ? அதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி செய்ய வில்லையா ?“திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்று நாங்கள்தான் ; நாங்கள்தான் தமிழ்நாட்டை மீட்க போகிறோம் ; தமிழை மீட்க போகிறோம்; நாங்கள்தான் அடுத்த முதல்வர்; நாங்கள் தான் முதல் கையெழுத்தை போட போகிறோம்” என்றெல்லாம் கூறி கோடிக்கணக்கான பணத்தை இறைத்து இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வேலையை யார் செய்தார்கள்.யாராவது ஒருவர் ஒரு இடத்தில் “பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கிறது. அது பி டீம் என்று கூறினார்களா ? பாட்டாளி மக்கள் கட்சியை யாராவது பினாமி டீம் என்று எழுதினார்களா ?.சட்டமன்றத் தேர்தலின்போது திருவாரூர், கொளத்தூர், ஆர்கே நகரில் மட்டும் நூறு கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த நூறு கோடியை பற்றி, கருத்துருவாக்கத் தளமான சோஷியல் மீடியாவில் ஏன் பேசப்படவில்லை ?.கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் செலவழித்த இந்த இரு திராவிட கட்சிகளுக்கு இணையாக, கடந்த இரு ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அந்த ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று எங்கேயாவது கேள்வி எழுப்பப்பட்டதா ??? யார் எழுப்புவது ? ஏன் பேசப்படவில்லை ?.ஆனால், கருத்துருவாக்கத் தளத்தில் நடந்தது என்ன ? மாறுபட்ட அரசியலை முன்வைத்த மக்கள் நல கூட்டணி மீது அத்தனை தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் – வைகோ என்ற இரண்டு ஐகான்களையும் காமடியாக சித்தரித்து தாக்குதல் நடத்தினார்கள்.மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சியில் விடுதலை சிறுத்தைகள் அணியும் இடம்பெறும் என்ற முக்கிய Criteria-வும், இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம்.சாதி எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. “நீ எந்த திசை வேண்டுமானாலும் திரும்பு அங்கு சாதீய பூதம் குறுக்கிடும், அச்சுறுத்தும்” என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.திருமா போட்டியிட்ட காட்டுமன்னார்கோவிலில் அவரை எதிர்த்து, அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தலித்துகள்தான். ஆனால், ஊரில் இருக்கிற சாதி இந்துக்கள், இந்த இரண்டு வேட்பாளர்களையும் வரவேற்று, தங்கள் இல்லங்களில் அமர வைத்து குளிர்பானமும் அளித்தார்கள். ஆனால், திருமாவுடைய வாகனம் அந்த பகுதிக்கும் சென்றாலே, அடிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள்.அவர்கள் இருவரையும் வரவேற்கும் சாதி இந்துக்கள், திருமாவளவன் மீது கல் எறிவது ஏன் ? ஒடுக்கப்பட்டவர்கள், காலங்காலமாக நசுக்கப்பட்டவர்கள், ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவதை இந்த சமூகம் ஏற்கவில்லை. இதையே ஏற்று கொள்ளாதவர்கள் திருமாவளவனின் கட்சியினர் அமைச்சர்களாக அமருவதை எப்படி ஏற்று கொள்வார்கள் ?.தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும் ? .

    ReplyDelete
  5. II.அவன் அதிகாரத்தை கையில் எடுக்க கூடாது. அவ்வளவு இறுக்கமாக, அவ்வளவு இறுக்கமான சாதி கட்டமைப்பு கொண்ட சமூகமாக இது இருக்கிறது.எல்லா திட்டங்களும் அதிகாரத்தை மையமாக வைத்துதான். கணவன் – மனைவி சண்டையில் இருந்து போர் வரை அனைத்து சிக்கல்களும் அதிகாரத்தோடு தொடர்புடையவை.அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தை தழுவினாலும் கூட, “ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் உனக்கு விடுதலையை தரும்” என்று குறிப்பிடுகிறார்.அனைத்து பூட்டுகளுக்கும் ஒரே சாவி. அரசியல் அதிகாரம்.சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் சாதி ஒழிய மதமாற்றத்தை ஒரு தீர்வாக வைக்கிறார். பிறமண முறையை ஒரு தீர்வாக வைக்கிறார்.சமூகநீதியையும் ஒரு தீர்வாக வைக்கிறார்.கல்வி, வேலை வாய்ப்பினால் மட்டுமே சமூக நீதியை முழுமையாக பெற முடியாது.இவை எல்லாவற்றையும் தாண்டி, மைய நீரோட்ட பாலிடிக்ஸ் பிரதிநிதித்துவம் வேண்டும். தலித் அல்லாத ஜனநாயக சக்திகளோட உறவாடுவது. அவர்களை அடையாளம் காணுவது என்ற நிலையில்தான், ஒரு மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடுவது என்ற அளவில்தான் கூட்டணிக்கு செல்கிறோம். வெறும் பதவிக்காக அல்ல.காட்டுமன்னார்கோவிலில் திருமா 48 ஆயிரத்து 363 வாக்குகள் வாங்கி இருக்கிறார். இதில் ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் தலித் அல்லாதோர் வாக்குகளாக இருக்கும், மீதி அனைத்தும் தலித் மக்களின் வாக்குகள் மட்டுமே.நூற்றுக்கு நூறு சதவிகிதம் முழுக்க தலித் வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட தலித் வேட்பாளரான திருமா வெளியில் நிற்கிறார். ஆனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாதி இந்துக்களால் ஆதரிக்கப்பட்ட தலித் உள்ளே இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எலக்ட்டோரல் சிஸ்டம் எப்படி இருக்கிறது பாருங்கள் ?. ஒரு தலித் பிரதிநிதியை யார் தேர்ந்தெடுக்க முடிகிறது என்று பாருங்கள். காட்டுமன்னார்கோவிலில் தலித் அல்லாதோர் தெருவில் விசிகவினர் வாக்கு கேட்டு போகிறார்கள் 15, 16 வயது சிறுவர்கள் கல் எடுத்து அடிக்கிறார்கள். அந்த சிறுவர்களுக்கு சாதி நஞ்சை ஊட்டியது யார் ? ஒன்லி ஃபார் பவர். ஏற்கனவே சமூகத்தில் இருக்கிற வெறுப்பை, திருமாவளவனை வைத்து பயன்படுத்துகிறார்கள்.அதே காரணத்திற்காகத்தான் பட்டுகோட்டையில் திருமாவை இளைஞர்கள் கொல்ல முயன்றார்கள். பதினாறு இடங்களில் திருமாவை கல்லால் அடித்திருக்கிறார்கள். ஆனால், அவர் அதை பெரிது படுத்தியதில்லை. ஏனென்றால், அந்த இளைஞர்களுக்கு wrong feeding. அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “டாக்டர்.கலைஞர் வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “புரட்சி தலைவி அம்மா வாழ்க” என்று அதை ரசிக்கிறார்கள். இப்போது அதே அடித்தொண்டையால் “திருமாவளவன் ” என்று அவன் கத்துகிறபோது அவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை.
    அன்று பலகாலம் திமுக கொடி பிடித்து தெருவில் நின்று கோஷமிட்டபோது ரசிக்க முடிந்தது.அன்று சிறியகாலம் அதிமுக கொடி பிடித்து கோஷமிட்டபோது அதை ரசிக்க முடிந்தது.ஆனால் அதே அவன் இன்று “எனக்கொரு கொடி, எனக்கொரு தலைமை, எனக்கொரு இயக்கம்” என்று அதே ஆவேசத்தோடு முழங்கும்போது “கட்டுப்பாடில்லாத சாதிங்க… இது இது ஒரு கும்பல்ங்க,ரவுடி கும்பல்ங்க,திருமாவளவன் பின்னாடி இருக்கிறது கும்பல்” என்கிறார்கள்.அவர்களின் கட்சிகளை வாழ்க என்று சொல்லியபோது , அவன் ஒரு இயக்கம் அரசியல்படுத்தப்பட்டவன். ஆனால், திருமாவளவனின் தலைமையை ஏற்று கொண்டபின், அவனுக்கு பெயர் கும்பல்.
    ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஞ்சாயத்து பேசுகிறவர்கள்தான், அனைத்து கட்சி தலைவர்களும். ஆனால், ஒரு பாதிக்கப்பட்டவன் வந்து பிரச்னையை சொல்லும்போது, இவன் அதற்காக பேசினால், உடனே “இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். திருமாவளவன் பின்னாலிருப்பது கும்பல். எங்க பாத்தாலும் கட்டப்பஞ்சாயத்து” என்கிறார்கள். இதை Opinion Makersசும் அப்படியே எழுதுகிறார்கள்.இவர்கள் எந்த சக்தியை எக்ஸ்போஸ் செய்கிறார்கள் ? என்ன நோக்கத்தில் செய்கிறார்கள்.திவ்யா இளவரசன் கொல்லப்பட்டான்.கோகுல்ராஜை மிரட்டி பேச வைத்து , ஐ.எஸ் தீவிரவாதிகளை போல, வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிடுகிறார்கள். அடுத்து அவன் தலையை துண்டித்து கொண்டு போய் தண்டவாளத்தில் போடுகிறார்கள்.
    கோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தில் நின்று திருமா பேசுகிறார். இவர்களை போல “கையை வெட்டு காலை வெட்டு , நீயும் நாலு பேரை போட்டு தள்ளிட்டு வாடா” என்று பேசவில்லை. எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. என்ன பேசினார் என்றால்…“தமிழ்நாட்டில் சிலர் என்ன அரசியல் பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பொம்பள சமாச்சாரம்தான். அங்க இடிச்சுட்டான். இங்க இடிச்சுட்டான். காதலிச்சுட்டான்” இதைதான் பேசுறான்.

    ReplyDelete