தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 27 July 2016

சுயமரியாதை - 3

கடவுள் மறுப்பு  - அங்கும் இங்கும்

உலகிலேயே கடவுள் மறுப்பை முதலில் சொன்னவர் பெரியார்தான் என்று எவரும் சொல்லமாட்டார்கள். கடவுள் நம்பிக்கை எவ்வளவு பழையதோ அதே அளவு கடவுள் மறுப்பும் பழையது. எத்தனையோ சிந்தனையாளர்கள் பெரியாருக்கு முன்பே அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் மேலை நாட்டுக் கடவுள் மறுப்புக்கும் , பெரியார் முன்வைத்த கடவுள் மறுப்புக்குமிடையே ஒரு பெரிய வேறுபாடு உண்டு. 


தத்துவ உலகில் கருத்து முதல் வாதமும், பொருள் முதல் வாதமும் மிக மிகப் பழையன. ஆதி கிரேக்கர்களின் காலத்த்திலேயே அந்த விவாதம் நடந்துள்ளது. எனினும் ஐரோப்பிய தத்துவ உலகத்தில் 16ஆம் நூற்றாண்டு தொடங்கி அது பற்றிய எழுத்துகளும், பதிவுகளும் காணக்கிடக்கின்றன. 

16ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த தத்துவாசிரியர் டெஸ்கார்ட்ஸ், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹாலந்தின் ஸ்பீனோசா, அதே நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்த லீப்னிஸ் ஆகியோர் சில முற்போக்கான கருத்தட்டுகளை முன்வைத்தனர். ஆனால்  அவர்களில் எவர் ஒருவரும் கடவுள் மறுப்பாளர் இல்லை. கடவுளை மறுக்கவில்லை என்றாலும், சில மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் திறம் பெற்றிருந்தனர்.

18ஆம் நூற்றாண்டு இறுதியில் பிரான்சில் நடைபெற்ற புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்த எழுத்துகளின் சொந்தக்காரர்கள் வால்டேரும், ரூசோவும். ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த கத்தோலிக்க மத சபைக்கு எதிரான, துணிவான எண்ணங்களை அவர்கள் வெளியிட்டார்கள்.கடவுள் ஒருபுறம் இருக்கட்டும், மதத்திற்கு  எதிராகப் பேசுவதே அன்று தெய்வத் குற்றம்தான். அந்தக் குற்றத்தை இருவரும் துணிந்து செய்தனர். வால்டேரின் எழுத்துகள் இன்றும் 90 தொகுதிகளாக நமக்குக்  கிடைக்கின்றன. 

பிரான்ஸ் நாட்டின் தெரு அமைப்புகள் சதுரம் சதுரமாக இருக்கும். ஒவ்வொரு சதுரத்தின் முனையிலும் தேநீர்க் கடைகள் இருக்கும். அங்குதான் வால்டேர், ரூசோவின் கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இங்கு ஓர் ஒற்றுமையை நாம்  பார்க்கலாம்.பிரான்ஸைப் போலவே   தமிழ் நாட்டிலும்  தேநீர்க் கடைகளிலும், முடி திருத்தும் நிலையங்களிலும்தான் திராவிட இயக்கம்   வளர்ந்தது.

தத்துவத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை இம்மானுவேல் காண்ட், ஹெகல் ஆகியோர் கொண்டு வந்தனர். ஹைடல் பார்க் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறைப் பேராசிரியராக இருந்த ஹெகல் எழுதிய தர்க்கத்தின் அறிவியல் (Science of logic) என்னும் நூல் சிந்தனை உலகில் மிகப் பெரும் புரட்சியை உருவாக்கியது. ஆனால் அப்போதும் கடவுள் இல்லை என்ற கூற்று அங்கிருந்து எழவில்லை. 

தன்னை ஒரு பொருள்முதல் வாதி என்றும், நாத்திகன் என்றும் முதலில் அழைத்துக் கொண்டவர் பாயர்பாக்தான்! ஹெகலின் மாணவர் அவர். ஹெகலைத்  தன்னுடைய இரண்டாவது தந்தை என்று கூறியவர். ஆனாலும் தன்  குருவாகவும், தந்தையாகவும் அவர் கருதிய ஹெகலின் கருத்துக்களிலிருந்து அவர் மாறுபட்டார். பொருள்முதல் வாதியாக அவர் வெளிப்பட்டார். மதவாத எதிர்ப்பில் அவர் முன் வரிசையில் நின்றார். இன்னமும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்தான் மார்க்ஸியத் தோற்றுவாயாகத் திகழ்ந்தார். 

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மார்க்ஸியத் தத்துவம் உலகிற்குக்  கிடைத்தது.அரசியல், தத்துவம், பொருளாதாரம் என மூன்று தளங்களின் அது இயங்கியது. தத்துவத் தளத்தில் அது பொருள் முதல் வாதத்தை அதாவது கடவுள் மறுப்பை  முன்வைத்தது. ஏறத்தாழ அதே ஆண்டுகளில் டார்வின் தத்துவம் வெளியாயிற்று. படைப்புக் கொள்கையை மறுத்து, பரிணாமக் கொள்கையை அந்த ஆய்வு முன்மொழிந்தது.

மார்க்சியம், டார்வீனியம் ஆகிய இரு பெரும் தத்துவங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்து, உலகின் பார்வையையும் போக்கையும் மாற்றின.

ஆனால் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறியபோது அவர் பொருள்முதல் வாதம் போன்றவைகளின் அடிப்படையில் விவாதிக்கவில்லை. அன்றைய மணிப்பிரவாள அடிப்படையில், பொருள்முதல் வாதத்தைப் பெரியார் பிரகிருதிவாதம் என்று சொன்னாலும், அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையின் அடித்தளமே வேறாக இருந்தது.

ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில், கடவுள் உண்டு, இல்லை என்னும் வாதம் அறிவுத் தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, பெரியாரோ அதனை சமூக நீதித் தளத்தில் நிகழ்த்தினார். அதுதான் நாம் மனம் கொள்ள வேண்டிய ஆகப் பெரிய வேறுபாடு!

                                                                                                              (தொடரும்)
                                                                                  
நன்றி: நக்கீரன்


6 comments:

  1. இரத்தினவேல்27 July 2016 at 12:13

    பண்டைய இந்தியாவில், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உருவான பௌத்தமும் கடவுள் மறுப்பு கொண்ட தத்துவம்தான்.

    ReplyDelete
  2. தொடர்ச்சியை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  3. அகில பாரத பிராமணர் சங்கத்தின் சார்பில் புதிய தலைமுறையில் தாங்கள் சொன்ன கருத்திற்குக் கடும் கண்டனம் இங்கு பதிவு செய்கிறோம்.

    ReplyDelete
  4. தங்களை பிராமனர் என்று கூறிக்கொண்டு எம் மக்களை சூத்திர்ர்களாக்கி சுகம் காணும் பார்பனர்களை திராவிட இயக்கங்களின் சார்பாக கடும் கண்டனம் இங்கே பதிவு செய்கிறோம்.

    ReplyDelete
  5. எங்கே எப்பொழுது எந்த பிராமணர் யாரைஅவ்வாறு அழைத்தார்கள் என்று நிரூபியுங்கள்.

    ReplyDelete