தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 15 November 2016

சுயமரியாதை - 40

கூடுதல் தண்டனை கோரிய பெரியார்!

பொதுவுடைமைக் கட்சியினரின்  'அறிவுரையை' மீறித் தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி எதிர்ப்பு என்னும் "விஷ வலையை" விரும்பி ஏற்றனர் என்பதே வரலாறு. தெருக்களில், மேடைகளில் மட்டுமின்றி, சட்டமன்றத்திலும் 1938ஆம்  ஆண்டு முழுவதும் அதே பேச்சாகத்தான் இருந்தது. குறிப்பாக, 1938 ஆகஸ்ட் 18ஆம் நாள் சட்டமன்றத்தில் பெரும் புயலே வீசியது. சர் ஏ.டி. பன்னீர்செல்வம், அப்துல் அமீத்கான், அப்பாதுரை (பிள்ளை), கான்பகதூர் கலிபுல்லா ஆகிய நால்வரும் ஆட்சியாளர்களின் மீது கடும் குற்றச்சாற்றுகளை முன்வைத்தனர்.


எந்தக் குற்றவியல் திருத்தச் சட்டத்தைக் காங்கிரஸ் கட்சி 1935ஆம் ஆண்டு எதிர்த்ததோ, அதே சட்டத் திருத்தத்தை இப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்குவதற்காக ராஜாஜி தலைமையிலான அரசு  கொண்டுவர முயன்றது. அதனால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய அளவிலேயே அது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் எதிர் கொண்டது. ரவீந்திரநாத் தாகூரும்ஜனாப் ஜின்னாவும் கூட அதனை எதிர்த்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் மீறி,இந்தி எதிர்ப்புப் போரை ஒடுக்குவதில் அரசு முனைப்புக் காட்டியது. பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டது. நாடெங்கும் பலர் கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையில் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எல்லோருக்கும் மூன்றாம் ('சி' கிளாஸ்) வகுப்புச் சிறைதான் என்றானது.  

ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல், தமிழர் பெரும்படை ஒன்று, தளபதி அழகிரிசாமி தலைமையில், 1938 ஆகஸ்ட் முதல் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, 42 நாள்கள் நடைப்பயணத்தின் பின்செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையை வந்தடைந்தது. அந்தப் பேரணி தமிழகத்தில் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியது. அந்தப் பேரணி சென்னை வந்தடைந்த நாளில், கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில்தான் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கம், மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் முன்னிலையில்பெரியாரால் எழுப்பப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போரில் இளைஞர்கள், பெண்கள், அவர்களுடன் சில கைக்குழந்தைகள் என எல்லோரும் சிறை சென்றனர். இறுதியில் 1938 டிசம்பரில் பெரியாரும் சிறை புகுந்தார். அவர் சிறை சென்ற நாளில், தமிழ்நாடே ஆர்ப்பரித்து நின்றது. அப்போது அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் வரலாற்றுப் புகழ் பெற்றது. நீதிபதியின் முன்னால் நின்று, தன்னுடைய கூற்றை எழுதிப் படித்தார் பெரியார்.

"இந்த நீதிமன்றம் காங்கிரஸ் மந்திரிசபைக்குக் கட்டுப்பட்டதாக உள்ளது. நீங்களும் ஒரு பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர். எனவே இந்த நீதிமன்றத்தில் நான் நியாயத்தை எதிர்பார்க்கவில்லை" என்று வெளிப்படையாகக் கூறினார்.  இப்படி ஒருவர் எங்கேனும் நீதிமன்றத்தில் கூறியிருப்பாரா என்று தெரியவில்லை. இறுதியில் அவர் கூறியுள்ள வரிகள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன.  அந்த வரிகளை அப்படியே பார்க்கலாம்:

"எனவே கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை இத்துடன் முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்."

இந்தத் துணிச்சலுக்குப் பெயர்தான் பெரியார்!
                                                                                    
 (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்

5 comments:

  1. இரத்தினவேல்15 November 2016 at 14:22

    பெரியாரைப் போன்ற துணிவான, சிறிதும் தன்னலமற்ற தலைவர்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள் என்பதே இன்றைய இளைய தலைமுறையினருக்கு வியப்பான செய்தி.

    ReplyDelete
  2. periyar and ambedkar are the greatest reformer ever in india

    ReplyDelete
  3. பெரியாரே தமிழ்த் தேசியத்தின் வித்து என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்? அருமையாக எழுதி வருகிறார் தோழர் சுபவீ.

    ReplyDelete
  4. சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுவிட்டு பிறகு எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் கொடுங்கள் என்று புலம்புவது அடிக்கு பயந்து ஊளறுவது போல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பிரம்படிக்கு பயந்தவன் சாட்டையடி கேட்கமாட்டான். பெண்கள் மாராப்பு போடக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. அதை நியாயம் என்று ஏற்க முடியுமா? அநியாய சட்டங்களை எதிர்த்துதான் தலைவர்கள் பிறந்தார்கள்.

      Delete