தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 16 September 2016

சுயமரியாதை - 20

பெரியார் என்னும் புரோகிதர் 


                                  
"இந்தப் பெண்ணானவள் முதலில் ஸோமனிடம் இருந்தாள். பிறகு அவன் இவளைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். அவனோ அக்கினியிடம் சேர்த்து வைத்தான். அவனிடமிருந்து நான் பெற்று இப்போது இந்த மனுஷனுக்குக் கொடுக்கிறேன்" என்பதுதான் அந்த மந்திரத்தின் பொருள். அதனால்தான் நாளைக்கு அக்கினி இவளைத் தன்னுடையவள் என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக , 'அக்கினி சாட்சியாக' நெருப்பு வளர்த்துத் திருமணம் செய்து கொடுக்கின்றனர்.


இந்த அவமானத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடாதென்றே மந்திரங்கள் நமக்குத் புரியாத சமற்கிருதத்தில் சொல்லப்படுகின்றன.  பொருள் விளங்காமல் நாமும் அந்த மந்திரங்களை மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பல மந்திரங்கள் நம்மை "ஏக மாதா"விற்கும், "பகு பிதா"விற்கும் பிறந்தவர்கள் என்றுதானே சொல்கிறது. மாதா, பிதா என்னும் சொற்களுக்கு நாம் பொருள் அறிவோம். ஏக என்றால் ஒன்று, பகு என்றால் பல என்று பொருள்! இதற்கு மேல் நாம் விளக்க வேண்டியதில்லை.

இந்த அவமானங்களையெல்லாம் துடைத்து, தமிழ்ச் சமூகத்தை  மானமும் அறிவும்   உள்ள சமூகமாக ஆக்க வேண்டும் என்றுதான் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. அதன் ஒரு பகுதியாகவே, திருமணங்களில் சுயமரியாதையை முதலில் கொண்டு வந்தது அவ்வியக்கம்.  அந்த வகைத் திருமணத்திற்கு அன்று கடும் எதிர்ப்பு நிலவியது. சில பகுதிகளில் அப்படித் திருமணம் செய்துகொண்டவர்கள் சாதி விலக்கிற்கும், சமுதாய விலக்கிற்கும் ஆளாகியுள்ளனர். ஒருமுறை திருச்சியில் சுயமரியாதைத் திருமணத்தைக் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெரியார் செய்துவைத்தார். அதனை எதிர்த்துப் பாதிரியார்கள் காவல் நிலையத்தில் மனு கொடுக்க, பெரியார் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

ஆனால் ஒரு பத்து ஆண்டுகளிலேயே அந்த எதிர்ப்பின் வேகம் குறைந்துவிட்டது.  அதற்கு எடுத்துக்காட்டு ஒன்று கூற வேண்டுமானால், வைதீகக் கொள்கைகளில் ஊறித்  திளைத்த ராஜாஜி அவர்களே அப்படிப்பட்ட ஒரு சுயமரியாதைத் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய நிகழ்வைக் கூறலாம்.  பெரியார்,  ராஜாஜி இருவரும் இணைந்து பங்கேற்ற திருமணம் அது என்பது இன்னொரு சிறப்பு! 



1936ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள், குற்றாலத்தில் அந்தச் சிறப்புமிகு திருமணம் நடைபெற்றது. பட்டணம் பொடி  உரிமையாளர் தங்கவேலுவுக்கும், மதுரையைச் சேர்ந்த பெரிய வணிகர் ஒருவரின் மகளுக்கும் நடந்த திருமணம் அது. பெரியார் தலைமை தாங்க, ராஜாஜியும், டி.கே.சி.யும் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். அந்தத் திருமண மேடையிலும் சில விவாதங்கள் அரங்கேறியுள்ளன.

ராஜாஜி அவர்கள் பேசும்போது, 'இந்தத் திருமணத்திற்குப் பெரியார்தான் புரோகிதர்' என்று கூறியிருக்கிறார். அதற்கு விடை சொல்லும் முறையில் , பெரியார் பேசும்போது, "புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும், அப்படி இருந்தும்  அதற்குச் செல்வாக்கு இருப்பதாலும்தான் நான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறேன். ஆனால் என் பணிவிற்குரிய ஆச்சாரியார் என்னையே புரோகிதன் என்று கூறுகிறார். இதுதான் புரோகித முறையாகவும், புரோகிதத்துக்கு இவ்வளவுதான் வேலை என்றும் இருந்தால் , நான் அந்தப் புரோகிதப்  பட்டத்தை ஏற்கத்  தயாராய் இருப்பதோடு, புரோகிதத் தன்மையை எதிர்க்கவும் மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

"எனினும் என் மதிப்பிற்குரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும், தோழர் முதலியார் அவர்களும் (டி.கே.சி) இத்திருமணத்தைப் பாராட்டியிருப்பது என் பெருமைக்குரியதாகும்" என்றும் பெரியார் தன் உரையில்  குறிப்பிடுகின்றார். இவ்வாறு ராஜாஜியே ஏற்றுக்கொண்ட முறையாகச் சுயமரியாதைத் திருமணம் ஆனபோதும், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.  இத்திருமண முறையைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறி, 1953இல் கடுமையான நீதிமன்றத்  தீர்ப்பு ஒன்று வெளியானது. அந்த வழக்கும், தீர்ப்பும் பல செய்திகளை  இன்றும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன. 


 (தொடரும்)
                                                                                  


நன்றி: நக்கீரன்

5 comments:

  1. பார்ப்பனருக்குத் திருமணம் என்றாலும் இதே மந்திரமா , இல்லை வேறு மந்திரமா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

    ReplyDelete
  2. தந்தை பெரியார் அவர்கள் தலைசிறந்த சமூக விஞ்ஞானி என்பதில் அய்யமில்லை.

    தோழமை என்னும் சொல் மிக உயரிய பதமாகும். அந்த உயர்ந்த நிலைக்கு தன் நண்பர் ராஜாஜி அவர்களை வைத்து, அழைத்திருப்பது, தந்தை பெரியார் அவர்களின் நாகரிகப் பண்பை காண்பிக்கிறது.

    ReplyDelete
  3. இந்த மந்திரங்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளபடியே பொருள்-literal meaning - எடுத்துக்கொள்ள முடியுமா என்பது விவாததிற்கு உரியது.

    விவித என்ற சொல் இருப்பிடத்தை குறிக்கிறது ஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தையிடம் இருந்தாள் என்று தமிழில் சொல்னால், தந்தையின் பாதுகாப்பில் இருந்தால் என்று பொருள் கொள்வதா அல்லது வேறு அர்த்தத்திலா?

    மேலும் இதற்கு முந்தைய பதிவு ஒன்றுக்கு வந்த மறுவினைகளில் ஒன்றில், இந்த மத்திரங்கள் பார்ப்பனர் திருமணங்களிலும் சொல்லப்படுகின்றனவா - அதாவது மந்திரங்கள் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் பொதுவாக சொல்லப் படுபவையா என்று ஒருவர் வினா எழுப்பியிருந்தாரே?

    அதற்க்கு சுபவீ அய்யாவின் பதில் ஏன்ன?

    ReplyDelete
  4. எங்களுக்கும் இதே மந்திரங்கள் தான். நீங்கள் சொல்லும் பொருள் (interpretation) தவறானது.

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,please give us the true interpretation

      Delete