தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 22 September 2012

ஈழம் - தமிழகம் - நான் சில பதிவுகள்! (4 )


நெடுமாறனின் அறிக்கைகள் - அன்றும் ,இன்றும் 


ஜி. பார்த்தசாரதி, நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில், கீழ்வரும் இன்னொரு செய்தியையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.


"தெளிவாகப் பேச இயலாத நிலையிலும், விடுதலைப் புலிகள், இந்தியாவின் பொறுமைக்கான எல்லையைத் தாண்டி விட்டனர் என்று எம்.ஜி.ஆர். உறுதி செய்தார். தமிழ்நாட்டில் மீதமுள்ள  புலிகள் உறுப்பினர்களை ஓடுக்குமாறும் தன் அரசுக்கு அவர் உத்தரவிட்டார்."

(" Despite impairment in his speech, MGR acknowledged that LTTE had crossed the threshold of India's forbearance. He instructed his Government to crack down on its remaining cadres in Tamilnadu")


மேற்காணும் செய்திகள் சில உண்மைகளை  நமக்கு உறுதிப்படுத்துகின்றன. இந்திய அமைதிப் படை ஈழம் சென்ற பிறகு, எம்.ஜி.ஆர் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்லது, முதலமைச்சராக இருக்கும் ஒருவர் அவ்வாறுதான் பேச முடியும் என்பதாகவும் இருக்கலாம். ஆனால் இது குறித்துத் தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படவில்லை. இதனால் எம்.ஜி.ஆர். புலிகளுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும் எவரும் கூறவில்லை. இதனைக் கலைஞர் முதலமைச்சராக இருந்து கூறியிருந்தால் , தமிழகத்தில் உள்ள நம் ஈழ ஆதரவுத் தலைவர்கள், எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.


எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்துவதற்காக இவற்றை இங்கு குறிப்பிடவில்லை. அவர் புலிகளுக்குச் செய்திருக்கும் உதவிகளை நாம் என்றும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். அதே வேளையில், நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் மறைக்கத் தேவையில்லை என்பதற்காகவும், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது சில கட்டுப்பாடுகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டுத்தான் யார் ஒருவரும் பேச முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவுமே இவற்றை இங்கு எடுத்துக்காட்ட நேர்ந்தது.

இன்னொன்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஈழ ஆதரவு என்பது எல்லாக் காலங்களிலும் ஒரே நிலையில் இருந்ததில்லை. அதனை நாம் கீழ்வருமாறு பிரித்துப் பார்க்கலாம்.
                             1956-82        -            முதல் காலகட்டம் 
                             1983-87        -            இரண்டாம் காலகட்டம் 
                             1987-91        -            மூன்றாம் காலகட்டம்
                             1991-95        -            நான்காம் காலகட்டம் 
                             1996-01        -            ஐந்தாம் காலகட்டம் 
                             2001-06        -            ஆறாம் காலகட்டம் 
                             2006-09        -            ஏழாம் காலகட்டம் 
                2009-இன்று வரை -         எட்டாம் காலகட்ட்டம்

முதல் காலகட்டத்தில் ஈழப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் பரவலான ஆதரவு இருந்தது. இரண்டாம் காலகட்டத்தில் மிகப் பெரிய ஆதரவு அலை வீசியது. அக் கட்டத்தில், மத்திய ரசு, மாநில அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஓர் அணியில் நின்றனர். 

1987 ஜூலையில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, சிறு மாற்றங்கள் இங்கு ஏற்பட்டன. அந்தக் கால கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். நிலையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மேலே கண்டோம். பொதுமக்கள், ஊடகங்கள்  ஆதரவும் சற்று அடங்கியே இருந்தது. எனினும், ஈழ ஆதரவும், புலிகள் ஆதரவாளர்களும் இன்னொரு புறத்தில் கூடியதும் இக்கால கட்டத்தில்தான்.

ஆனால் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, நிலைமை பெரும் அளவிற்கு மாற்றம் பெற்றது. அப்போது மத்தியில் நரசிம்ம ராவும், தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தனர். இருவரும் ஈழ ஆதரவை ஒடுக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.  தடா சட்டம் படாத பாடு படுத்தியது. அய்யா நெடுமாறன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட பலர் அச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டனர். ஈழம், புலி என்று பேசினாலே சிறைதான். அப்போது சிறை செல்லாத ஈழ ஆதரவாளர்களே இல்லை என்று சொல்லலாம். புலிகளை ஆதரித்துப் பொதுக்கூட்டங்களில் பேசினேன் என்னும் ஒரே காரணத்திற்காக, அந்த ஐந்து ஆண்டுகளில் நானும் நான்கு முறை சிறைப் படுத்தப்பட்டேன். 

அடுத்தடுத்த கட்டங்களைப் பார்ப்பதற்கு முன், முதலிரு கால கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இப்போது வெளி வந்து கொண்டிருக்கும் சில முக்கியமான விமர்சனங்கள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
                            

சில வாரங்களுக்கு முந்திய ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் திரு நெடுமாறன் பல செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார். போராளிகளுக்குள்  சகோதரச் சண்டையைத் தொடக்கி வைத்தவரே கருணாநிதிதான் என்பது அவரது குற்றச்சாட்டு. அவருடைய பேட்டியிலிருந்து சில பகுதிகளை முதலில் காண்போம்:

                "1984 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்  ஈழ விடுதலைப்  போராளிகள் அனைவரும்  ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை  அடிக்கடி  வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு  ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில்  தன்னை  வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும்  தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை  முறியடிக்கும் வகையில் தி.மு.. தலைவர் கருணாநிதி செயல்பட்டார்எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி  போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

      உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர்  அழைப்பு  விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய  செய்தி வெளியானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே  தவிர, உண்மையில் போராளிகளை  ஒன்றுபடுத்தும் நோக்கம்  இவருக்கு  இல்லைபோராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும்  வேலையைத் தொடங்கி  வைத்தவரே கருணாநிதிதான்."

மேற்காணும் கூற்று குறித்து முதலில் சில செய்திகளைப் பார்த்துவிடலாம்.  1984 ஆம் ஆண்டே, ஈரோஸ், ஈ.பி .ஆர்.எல்.எப்., டெலோ ஆகிய மூன்று அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டணியை அமைத்தன. 1985 ஏப்ரல் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதில் இணைய, ஈ.என்.எல்.எப் (ENLF - Eelam National Liberation Front) என்னும் புதிய கூட்டணி உருவாயிற்று. நான்கு அணிகளின் தலைவர்களும் கை கோத்து நிற்கும் புகைப்படம் எல்லா நாளேடுகளிலும் வெளியாயிற்று.  அதனை வரவேற்று, 'புதிய திருப்பம்' என்று தலைப்பிட்டு முரசொலி முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. 


இன்று கலைஞரைத் தாக்கிப் பேட்டி அளித்துள்ள நெடுமாறன்,  நான்கு அணிகளும் ஒருங்கிணைந்து கூட்டணி உருவான நேரத்தில் தி.மு..வுடன் நெருக்கமாக இருந்தார் என்பதோடு மட்டுமின்றித் தி.மு..வின் செயல்பாடுகளை ஆதரித்தும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசைக் கண்டித்தும் பேட்டி அளித்திருந்தார் என்பதே உண்மை. அவர் அளித்த பத்திரிகைப் பேட்டிகளைக் கீழே காணலாம்: 

                                
                அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும்,  ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் சகோதரச் சண்டையைத் தொடக்கி வைத்தார் என்றும் முற்றிலும் நேர் மாறாக  இன்று பேட்டி தருகின்றார். சகோதரச் சண்டையைத் தொடக்கி வைத்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?

         அ.தி.மு.. அரசு துரோகம் இழைக்கிறது என்னும் தலைப்பின் கீழ் உள்ள பேட்டியின்  கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.. போராட்டம் நடத்த உள்ளதே?

நெடுமாறன் விடை : அதை வரவேற்கிறேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.

 எந்த 1984-85 ஆம் ஆண்டுகளில், போராளிகளிடம் தி.மு.. சகோதரச் சண்டையை ஆரம்பித்தது என்று இப்போது நெடுமாறன் பேட்டி அளிக்கிறாரோ, அதே ஆண்டில் அவர் கொடுத்த பேட்டியில், தி.மு.. தன் பணியைச் செய்வதாகவும், அதனைத் தான் வரவேற்பதாகவும் கூறுகின்றார். அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு..வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். எல்லாவற்றையும் தாண்டித் தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.

இன்று தி.மு..வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதாகவும், தி.மு.. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.. கூட்டணியில் இருந்தார். 1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு..வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.   

அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.  அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. ஆனால் பழனித் தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன  என்பது தெளிவாகின்றது.
                         
1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்ட குட்டி மணியைப்  பிடித்து இலங்கைக்கு அனுப்பியது கருணாநிதிதான் என்றும் அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார். அது எவ்வளவு தூரம் உண்மைக்கு மாறானது என்பதையும் ஆதாரங்களுடன் தொடர்ந்து பார்க்கலாம்.

                                                     (சனிக்கிழமைதோறும் சந்திப்போம்

21 comments:

  1. அய்யா , இங்கு இந்த கருத்து எவ்வளவு பொருத்தமானதாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை , ஆனால் சொல்ல வேண்டிய நிர்பந்தம் . இங்கு இரண்டு கருத்துகளை சொல்ல முற்படுகிறேன் . ஒன்று , தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் அன்றைக்கும் , இன்றைக்கும் விடுதலை புலிகளுக்கு எதிரானவர்கள் தான் .ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலை புலிகளையும் எப்பொழுதும் பிரித்தே பார்த்து வருகிறார் .அதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார் .ஆனால் முன்னாள் முதல்வர் கலைஞர் , விடுலை புலிகளுக்கு ஆதரவானவரா என்று இதுவரைக்கும் தெளிவாக புரியவில்லை.இன்னொன்று என்னவென்றால் சு ப வீ அய்யா அவர்கள் அம்மா அவர்களை பற்றியும் , நெடுமாறன் அய்யா அவர்களை பற்றியும் வைகோ அவர்களை பற்றியும் , தற்பொழுது எம் ஜி ஆர் அவர்களை பற்றியும் வமர்சனம் செய்யும் தாங்கள் , கலைஞர் அவர்களை பற்றி இதுவரைக்கும் ஒரு விமர்சனம் கூட செய்யாதிருப்பது ஏன் என்று புரிய வில்லை.ஈழத்தில் இறுதி யுத்தத்தின் போது உண்ணாவிரதம் இருந்து விட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது (பிரணாப் முகர்ஜி யின் பேச்சை கேட்டு , அவர் பொய் சொன்னாரா என்று தெரியவில்லை ) என்று கூறி விட்டு அடுத்த நாளே மழை விட்டும் துவானம் விடவில்லை என்று கூறினார் . மத்திய அரசு சொன்னதை நம்பி நான் ஏமாந்து பொய் விட்டேன் என்று இப்பொழுது சொல்லும் கலைஞர், ஏன் அப்பொழுது மத்திய அரசை ," ஏன் அவ்வாறு பொய் சொன்னிர்கள்" என்று கேட்க வில்லை ?. அல்லது எப்பொழுதும் தனக்குத்தானே கேள்வியும் கேட்டுக்கொண்டு பதிலையும் சொல்லிக்கொண்டு இருப்பதை போல் ஒரு கேள்வியையாவது கேட்டு இருக்க வேண்டியது தானே ? சு ப வீ அய்யா அப்பொழுது கலைஞரை என் கேள்வி கேட்கவில்லை என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன்.

    நன்றி
    ரகு.தே

    ReplyDelete
    Replies
    1. யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என் நோக்கமன்று. அரசியல் செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்தொடர் எழுதப்பட்டு வருகின்றது. நீங்கள் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு இத்தொடரின் பிற்பகுதியில் விடை சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து வர வேண்டுகின்றேன். எதிர்க் கருத்தாக இருப்பினும் அதனை நீங்கள் வெளிப்படுத்தியுள்ள விதம் நாகரிகமாக உள்ளது. நன்றி. - சுபவீ

      Delete
    2. மிக்க நன்றி அய்யா. என் கேள்விகளுக்கான பதில்களையும் , இன்னும் கேட்கவிருக்கும் கேள்விகளுக்கான பதில்களையும் எதிர் நோக்கி உள்ளேன்.

      நன்றி
      ரகு.தே

      Delete
  2. ஏதோ பேச்சுவாக்கில் காற்றில் பொய்யை கலந்துவிடுகிற நெடுமாறன் போன்றோரும், அவர் சொல்வதுதான் உண்மை என்று பேசித்திறிகிற கூட்டத்திற்கும் இந்த கட்டுரை பதில் சொல்கிறது.

    சொல்கிற உண்மையை சான்றுகளோடு விளக்குகிறார் ஆசிரியர்.

    மூன்றாம் காலக்கட்டத்தின் இறுதியில் எம்ஜிஆர் மத்திய அரசின் போக்கிலேயேதான் சென்றார்.மத்தியில் புலிகளை ஆதரித்தபோது இவரும் ஆதரித்தார்.இந்திய-இலங்கை ஒப்பந்தம் சிறு மாற்றத்தை எம்ஜிஆர் மன.தில் ஏற்படுத்தியது உண்மை மேலும் அவர் மத்திய அரசை எதிர்த்து எந்த உதவியும் ஈழமக்களுக்கு செய்துவிடவில்லை.எம்ஜிஆர் யாரையும் பகைக்காது செல்கிற வழியில் சென்றார்.

    சுபவீ அய்யாவின் கட்டுரை அன்றைய உண்மையின் இன்றைய பிரதிபலிப்பு.

    ReplyDelete
  3. நெடுமாறன் தடுமாறிய நிகழ்வு இன்று பலருக்கும் தெரியாத ஒன்று... அழகாக படம் பிடித்து காண்பித்து இருகிறீர்கள்... அப்படியே குத்துவேன் வெட்டுவேன் என்று சொன்னவனின் வரலாறும் எழுதுங்கள்... காத்து இருக்கிறேன்.. அரசியல்வாதியாக ஈழத்தை ஆதரித்த நெடுமாறன் தடம்மாறி நிற்கிறார் இன்று.... கொடுமை...

    ReplyDelete
  4. வ.இரா. தமிழ் நேசன் , மும்பை.
    அண்டப்புளுகிலே பழுத்த நெடுமாறனுக்கு , கலைஞர் என்றாலே எட்டிக்கயோ ? வேப்பங்கயோ? அப்படிக் கசக்கும் போலும்.காழ்ப்புணர்ச்சியிலே புழுத்தப்பழம் என்றால் அது பழ.நெடுமாறன்தான்.
    தன்னால் தமிழினத் தலைவர் ஆகமுடியவில்லையே,தனக்குப்பின்னால் எண்ணிப் பார்க்க ஒரு
    கை விரல் அளவுகூட ஆட்கள் இல்லையே , என்ற வயிற்றெரிச்சல்தான் கலைஞரைப்பற்றி அவதுறாக கண்ணடபடி பேச சொல்கிறது.தன் வயிற்று பிழைப்பிற்காக "ஈழம்" பற்றிய அக்கறை உள்ளவன் தான் ஒருவன்தான் என அரிதாரம் பூசும் அரசியல் கோமாளி.
    கலைஞர் எதிர்ப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் நின்று விளையாடும் அரைவேக்காட்டு.
    பழ.நெடுமாறன் சொல்லுவதெல்லாம் உண்மை என நம்பிக்கொண்டு அவர் பின்னால் செல்லும்
    ஒன்றிரண்டு பேரிடமும், பழ.நெடுமாறன் அவர்களிடமும் ஒரு கேள்வியை முன்
    வைக்கவேண்டும்.ஈழத்தில் இருக்கின்ற மக்கள் இன்னல் களைய எந்த முயற்சியுமே
    எடுக்காமல் ,வெறுமனே பிரபாகரன் இருக்கிறார்,இருக்கிறார் என சொல்லி; எதிரியை மேலும் ,மேலும் வெறுப்பிற்கு ஆளாக்கி முகாமிலே அடைக்கப்பட்டுள்ள
    இன்னல் விளைவிக்கட்டும் என எதிர் பார்க்கின்றரா?அல்லது பிரபாகரன் எதோ ஒரு
    உள்நோக்கத்துடனே மறைவிடத்தில் இருக்கின்றார் என்றால், அவர் இருக்கிறார்,இருக்கிறார் எதிரி உசாராகி அவரை தேட ஆரம்பிக்கமாட்டனா?அல்லது புலம் பெயர்ந்த ஈழத்தமிழனையும்,
    இங்கு எடுப்பார் கைப்பிள்ளையாக உள்ள இந்திய தமிழனையும் ஏமாற்றி தான் எழுதிய பிரபாகரன் பற்றிய நூலை விற்கப் பார்க்கிறாரா? என்பதை தெளிவுப் படுத்த வேண்டும் .





















    ReplyDelete
    Replies
    1. தனி மனிதத் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கண்ணியமான அரசியல் விமர்சனங்களை மட்டுமே முன் வைப்பது நல்லது.

      Delete
    2. தங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி,தனி மனித விமர்சனங்களை நானும் விரும்புவதில்லைதான்.ஆனால் கலைஞரையும் ,திராவிடயியக்கங்களையும்
      குறிவைத்து தாக்குகின்றபொழுது என்ன செய்வதென்று தெரிவதில்லை.ஆயினும், இனி மேல்
      தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை என உறுதி அளிக்கிறேன்.

      Delete
  5. தனது சுயவிருப்பு வெறுப்பிற்காக ஈழப் போராட்டத்தை திசை திருப்பும் நெடுமாறன் அவர்களின் துரோகத்தை படம் பிடித்திருக்கிறது தங்களின் இந்தப் பதிவு...

    ReplyDelete
  6. இந்தத் தொடர் மறைக்கப் பட்ட பல உண்மைகளை வெளியே கொண்டு வரும் என்றும், உண்மையிலேயே 'கபட நாடகம்' ஆடுகிறவர்கள் யார் என்று உலகத்தமிழர்கள் விரைவில் உணர்வாளர்கள் என்றும் நாம் உறுதியாக நம்பலாம்

    ReplyDelete
  7. அய்யா சுபவீ அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் கண்ணியம் காப்பவர். மிகச் சரியான ஆதாரங்களை தெளிவாக எடுத்து வைப்பதில் வல்லவர். கலைஞரை எதிர்ப்பதால் பலருக்கு பல விதங்களில் பலன் கிடைத்து வரும் இந்தக் காலச் சூழலில், பல இழப்புகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து கலைஞரை ஆதரித்து வருகிறார். அதற்க்கு ஒரே காரணம் திராவிட இயக்கத்தின் மீதான உண்மையான பற்றும் அக்கறையும்தான். மறைந்த சில தமிழ் நாட்டுத்தலைவர்கள் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்றவாறு தமிழர் நலனுக்கு எதிராக இயங்கி இருக்கிறார்கள். தமிழர்களின் எதிரியாக கலைஞரை சித்தரிக்க வேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோள் கொண்ட எழுத்தாளர்களும் சில குறுந்தலைவர்களும் அந்த வரலாற்று நிகழ்வுகளை மறைக்கப் பார்க்கிறார்கள். அய்யா சுபவீ அவர்கள் மட்டுமே, தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் பெயர்களை தயங்காமல் குறிப்பிட்டு துணிந்து எழுதுகிறார். எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் இயக்கம் சார்ந்து இயங்கும் அய்யா சுபவீ அவர்களைப் பார்த்து 'கலைஞரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லையே!' என்று கேட்பவர்கள், நடுநிலையாக இருப்பதுபோல் நடிப்பவர்களிடம் 'ஜெயாவைப் பற்றி வாயே திறப்பதில்லையே, ஏன்?' என்று கேட்கட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. அய்யா . நீங்கள் என்னிடத்தில் இந்த கேள்வியை நேரடியாக கேட்கவில்லை என்றாலும் , நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதை சுட்டிக்காட்ட வேண்டும் . இது எனக்கும் பொருந்தும் உங்களுக்கும் பொருந்தும் 'அம்மா' அவர்களுக்கும் பொருந்தும் 'கலைஞர்' அய்யா அவர்களுக்கும் பொருந்தும்.அம்மையாரை பற்றி விமர்சனம் செய்ய கூடாது என்று சொல்லவில்லை. அனால் அதே கணம் , கலைஞர் செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று இருந்து விட கூடாது.தவறு செய்யும் போது அதையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தான் கூறினேன் . நீங்கள் அதை ஆக்கபூர்வமான விமர்சனமாக (Constructive Criticism ) எடுத்துக் கொள்ளவேண்டும்.நன்றி - ரகு

      Delete
  8. அய்யாவின் பேச்சிலும் எழுத்திலும் ஜிகினாத்தனங்கள் எப்பொழுதும் இருக்காது. ஈழ ஆதரவாளர் என்று தம்மை பறைசாற்றி உணர்வு மிகுதியில் பூசுவது, மெழுகுவதும், இல்லாத உண்மைக்கு உரமேற்றி ஜிகினா பூசி கர்ஜிக்கிற நெடுமாறன், வைகோ, சீமான் போன்றோருக்கு அய்யாவின் இந்த பதிவு நல்ல சாட்டையடி.
    வெருமனே தெரிந்தவற்றை மட்டும் கூறாது அவற்றின் உண்மைத்தன்மையையும், அதற்கான சான்றாவனங்களையும் வெளியிட்டுள்ள அய்யாவின் இக்கட்டுரை வெகுஜன பார்வைக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.

    ReplyDelete
  9. தோழர் குமரன்25 September 2012 at 06:36

    இந்த வாரம் தங்களின் படைப்பு ஐயர் நெடுமாற்னின்
    தற்கால பத்திரிக்கைகளின் அறிக்கைகளுககும் 80 து
    90 களில் பத்திரிக்கைகளில் வந்த அறிக்கைக்கும்
    உள்ள முரண்பட்டை ஆதாரபூர்வமாக சுட்டிகட்டிஉள்ளேர்கள் மனம அறிந்து தவறு செய்யும்
    மாமனிதர்கள் மக்கள்மற்ந்து விடுவார்கள்
    என்ற எண்ணம் தான் மற்க்கமல் பதிவு செய்தமைக்கு
    மனம் மார்ந்த நன்றி

    ReplyDelete
  10. இத்தனை ஆதாரம் இருந்தும் எவ்வளவு தெனாவட்டாக நெடுமாறன் மேடையில் பொய் பேசுகிறார். அதை கேட்கிற ஆட்டுக்கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.. அவர் வயதொத்த ஆட்களிடம் இவர்களின் ப்ருப்பு வேகாது. அதனால்தான் என்னவோ? சிறுபிள்ளைகளிடமும், இளைஞர்களிடமும் இவ்வாறு புழுகித் தவிக்கிறார்கள்.

    தங்கள் கட்டுரையால் மட்டுமே இவர்கள் தலையிலே குட்ட முடியும்.. இன்னும் அழுத்தமாக குட்டுங்கள்.குட்டு வெளிப்படட்டும்.

    9677124619
    997722

    ReplyDelete
  11. மிகச் சரியாக சான்றுகளுடன் கூறியுள்ளீர்கள் அய்யா.. இதனை மறுக்க நெடுமாறன் வேறொரு சாகச கதையை படித்துவிட்டுதான் வரவேண்டும்.

    ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைக்கு நான் காத்திருக்கிறேன்.
    உங்கள் பதிலடி மற்றும் நெத்தியடிகள் தொடரட்டும்.

    ReplyDelete
  12. ஈழத்தில் உச்சக்கட்ட போர் நடந்தபோது கலைஞர் எதுவும் செய்யாமல் நாடகம் ஆடினார் என்று நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவி மணியன் போன்றோர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். நாம் அறிய விரும்புவது என்னவென்றால், ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் சாகும்போது இவர்கள் என்ன
    செய்து கொண்டிருந்தார்கள் ? கலைஞரையும் எதிர்த்து போராடியிருக்க வேண்டியதுதானே! போராட்டத்தை கலைஞர் அடக்கினார், ஒடுக்கினார் என்று இவர்கள் பொய்யாக சொன்னவை உண்மையாகவே இருந்திருந்தாலும், இழப்புகளைப் பற்றி கவலை கொள்ளாமல் அரசின் அடக்குமுறையை எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? முடியாதபோது, தங்களை 'கையாலாகாதவர்கள்' என்று ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே!
    கலைஞர் மட்டும் எல்லாவற்றையும் இழக்க வேண்டும்; இவர்கள் ஒரு துரும்பைக்கூட இழக்க மாட்டார்கள்!. ஆனால் 'ஈழப் போராளி' என்ற பட்டம் மட்டும் வேண்டும். தமிழ் நாட்டுப் போலிப் போராளிகள் எல்லோரைப் பற்றியும் அய்யா சுபவீ அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

    ReplyDelete
  13. ஈழத்தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு முறை ஆட்சியை இழந்ததுன்னு நீங்களே பச்சை பொய் சொல்லலயா?

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்கள் பெயரை வெளிப்படுத்தும் துணிவு பெறுங்கள் நண்பரே! தி.மு.க தன் . ஆட்சியை இழந்ததற்கான காரணம் உலகறிந்த உண்மை. அதில் பச்சைப் பொய், சிவப்புப் பொய் எல்லாம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பொறுங்கள், இந்தத் தொடரிலேயே அதற்கான முழுச் சான்றுகளையும் தருகின்றேன்.

      Delete
    2. அய்யா, நல்லா எழுதுங்க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கான காரண காரியங்கள் - சென்னையில், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்மனாபா மற்றும் இதர போராளிகளின் மரணத்திலிருந்தே துவங்குது. அந்த படுகொலைகளே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட காரணம் என்று கூற வைத்தது. ஒரு வேளை பத்மனாபா கொலையாவது தடுக்கப்பட்டிருந்தா ஆட்சி கலைக்கப்படாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆட்சி கலைக்கப்பட்டதற்கான காரணம் புலிகள் தானே தவிர ஈழத்தமிழர்கள் அல்ல என்பதை நீங்க மறந்து வேற எதையும் எழுதிடக்கூடாது என்கிற நோக்கத்தில் - பத்மனாபா படுகொலையை ஞாபகப்படுத்தறேன்.

      Delete
  14. வரலாறை சான்றுகளோடு கூறுகின்றீர்கள் ,ஏனென்றால் ,நீங்கள் வரலற்றுப்பேராசிரியர் ஆயிற்றே .தங்களிடம் படிக்க முடியாத ,வாய்ப்பை ஒரு வருடத்தில் கோட்டை விட்ட பசும்பொன்கல்லூரி மாணவி நான் .வாய்ப்பை இழந்ததற்காக நான்.வேதனைப்படுகிறேன்.

    ReplyDelete