தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 14 December 2013

நதியோடும் பாதையில்...(25)

ஓரினச் சேர்க்கை 


பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டனில் ஒரு நண்பர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். நண்பரும் அவரின் துணைவியாரும் முகங்களில் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டனர். அதற்கான காரணத்தை அவர்களே சற்று நேரத்தில் தெரிவித்தனர்.அவர்களின் ஒரே மகள், பெற்றோரை மீறி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டே போய்விட்டாராம். 

நான் அறிந்த வரையில்,  அந்த ஈழத்துப் பெற்றோர் முற்போக்குச் சிந்தனையாளர்கள். பிறகு ஏன் இதற்குப் போய்க் கவலைப்படுகின்றார்கள் என எண்ணினேன். பிறகுதான் தெரிந்தது, அவர்களின் கவலை வேறு மாதிரியானது என்று. அவர்களின் பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளாராம்! அது எப்படி பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நமக்குத் தோன்றும். ஆனால் மேலை நாடுகளில் அந்தப் பழக்கம், அங்குமிங்குமாக இருக்கவே செய்கிறது. அதற்குச் சட்ட ஏற்பிசைவும் அங்கு உள்ளது. ஆணும் ஆணும் - பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதைத்தான் ஓரினச் சேர்க்கை என்கின்றனர்.


இப்போது அந்தச் சிக்கல் இந்தியாவிற்கும் வந்து விட்டது! ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றமற்றது என்று 2009 ஜூலை 2 ஆம் நாள், தில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது  ஒரு  பரபரப்பு ஏற்பட்டது. நம் தேசத்தின் பண்பாடே கெட்டுச் சீரழிந்து விடும் என்று பெருங்குரல் எழுந்தது. அத்தீர்ப்பை எதிர்த்துப் பலரும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பி.பி. சிங்கால், அபோஸ்தல கிறிஸ்தவ அமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தனிமனிதர்களும், சமூக,மத அமைப்புகளும் மேல் முறையீடு செய்தனர். 'நாஸ் ' அறக்கட்டளை, தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரியானதுதான் என்று வாதாடியது. 



இந்திய உச்ச நீதி மன்றம் அதிரடியாகத் தன் தீர்ப்பை 11.12.13 அன்று வழங்கியுள்ளது. ' ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்' என்பதே அத்தீர்ப்பு!    
  
இப்போது மீண்டும் பரபரப்பான விவாதங்கள் தொடங்கியுள்ளன  ஒரே நாட்டில் உள்ள இரு நீதி மன்றங்கள், ஒரே சட்டத்தின் அடிப்படையில்  இரு வேறு தீர்ப்புகளைக் கொடுத்துள்ளன. எனினும் இனி உச்ச நீதி மன்றத் தீர்ப்பே செல்லுபடியாகும். ஒருவேளை, இரண்டிற்கும்  மேற்பட்ட  நீதிபதிகள் அமரும் உச்சநீதி மன்றத்தில் மீண்டும் இவ்வழக்கு வருமானால் தீர்ப்பு மாறலாம். 

பண்பாட்டுத் தளங்களில் எப்போதும் நிலையான, இறுக்கமான முடிவுகள் இருக்க முடியாது. காலந்தோறும் மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அவற்றுள் சில வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவனவாக அமையும். வேறு சிலவோ, சிறுமைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். இந்த ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்டது என்பது ஆய்விற்குரியது.

இதனைக் கடுமையாக எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களில் முதலில் இருப்பவை மதங்களாகவே உள்ளன என்பது தெரிய வருகிறது. எல்லாவற்றிலும் சண்டையிட்டு மோதிக்கொள்ளும்  மதங்கள் இதில் ஒற்றுமையாக  நின்று ஒரே கோரிக்கையை  முன்வைத்துள்ளன என்பதே வியப்பான செய்திதான். இயல்பாகவே மதங்கள் இறுக்கமானவை. புதுமைகளை அல்லது மரபு மீறல்களை அவை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.

14 வயது நிறைந்த பின்பே ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறிய சாரதா சட்டத்திற்கு அன்று மதவாதிகள் எவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பதை அனைவரும் அறிவோம். அப்படித்தான் உடன்கட்டை ஏறல், விதவைக் கொடுமைகள் என்று பலவற்றை ஒழிப்பதற்கும் மதத்தோடு பலகாலம்  போராட வேண்டியிருந்தது. 

அதே வேளையில் நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மற்ற மதங்களில் எப்படியோ, இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் இடம் உள்ளது - ஓரினச் சேர்க்கை உட்பட. இந்து மதத்தில்  தாந்த்ரீகம் என்று ஒரு பிரிவு உள்ளது. அப்பிரிவு இவை போன்ற பலவற்றிற்கும் இடமளிக்கின்றது. அதில் ஒன்றுதான், ஓரினச் சேர்க்கைக்கும் இடம் தரும், 'வாம தாந்தரா' என்பது!  அதனை ஒரு பிரிவாக ஏற்கும் இந்து மதம், இதனை ஏனோ எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை செல்கிறது. 
        
மதங்கள் ஒருபுறம் இருக்கட்டும். ஓரினச் சேர்க்கை பற்றிய 'பொதுப் புத்தி' எவ்வாறு உள்ளது என்றால், அது ஆபாசம், அருவெறுப்பு, குற்றம் என்பதாகத்தான் ள்ளது. இன்றும் நூற்றுக்குத் தொண்ணூற்றி ஒன்பது பேர் அந்தப் பழக்கம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே மிக மிகச் சிறுபான்மையினராக உள்ளவர்களின் குணங்களை மற்றவர்கள் ஏற்பதில்லை. 


சிலர் அதனை மனநோய் என்கின்றனர். அவ்வாறாயின், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமே அல்லாது, அவர்களை ஏன் தண்டிக்க வேண்டும்? தேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஹார்மோன்களின் பிறழ்வுதான் காரணம் என்கின்றனர். அந்தக் கோணத்தில் பார்த்தாலும் அது குற்றமாகாது. நீதி மன்றமும் கூட இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவின்படி குற்றம் என்று கூறிவிட்டு, அதனை நாடாளுமன்றம் தேவை என்று கருதினால் திருத்திக்  கொள்ளட்டும் என்றே கூறியுள்ளது. 

சில ஆண்டுப்களுக்கு முன்பு வரையிலும், மாற்றுப் பாலினத்தரை நாம் மிகவும் இழிவாகவே கருதினோம் என்பதுதானே உண்மை. அவர்களை அலிகள் என்றும், 9 என்றும் எல்லாம் கூறி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தோம். அதில் அவர்களின் பிழை என்ன உள்ளது என்பதை நாம் எண்ணிப்பார்க்கத் தவறி விட்டோம். இப்போதுதானே ஓரளவு விழிப்புணர்ச்சி நம்மிடையே வந்துள்ளது. மாற்றுப்  பாலினத்தர், திருநங்கைகள் என்றெல்லாம் அழைக்கத் தொடங்கியிருப்பது மிக அண்மைக் காலமாகத்தானே? விலை மகளிர், பரத்தையர் என்னும் இழி சொற்களுக்குப் பதிலாக 'பாலியல் தொழிலாளர்கள்' என்று ஒரு குறிப்பிட்ட பெண்களை அழைக்க வேண்டும் என்ற சிந்தனையும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதுதானே! 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் நான் பாலியல் தொழிலாளர்கள் என்னும் சொல்லைப் பயன்படுத்தினேன். அன்று மேடையில் இருந்த ஒரு ' தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்' என் மீது கடும் சினம் கொண்டார். இப்படியெல்லாம் பேசித் தமிழ்ப் பண்பாட்டைச் சீரழிக்காதீர்கள் என்று எனக்கு அறிவுரை கூறினார். அவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்றால் அவர்களுக்குப் போனஸ் எல்லாம் கொடுக்கச் சொல்வீர்களா என்று கேலியாகக் கேட்டார். ஆனால் அந்தப் பழமை வாதிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுக் காலம் இன்று விரைந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்

இப்படித்தான் ஒவ்வொரு முறையும்,  புதிய சிக்கல்களும் அவை குறித்த புதிய பார்வைகளும்  வந்துகொண்டே உள்ளன. அந்த வரிசையில் இன்று புதிதாய் எழுந்திருக்கும் சிக்கல்தான் ஓரினச் சேர்க்கை.  எந்த ஒன்றிற்கும் பழமை வாதம் தீர்வாகாது. அறிவியல் கண்ணோட்டத்துடனும், மனித நேயச் சிந்தனையுடனும் அணுகுவதே சரியான பாதையில் நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஓரினச் சேர்க்கை  குறித்தும் அத்தகைய அணுகுமுறையே  இன்றையத் தேவையாக உள்ளது.



 (சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

19 comments:

  1. இளசெ(இ.ஜெயக்குமார்)14 December 2013 at 12:50

    அப்பா-மகள் , அம்மா-மகன் , அண்ணன்-தங்கை , அக்கா-தம்பி உறவு வெச்சுகிட்டா இதப்பத்தி மருத்துவர்களின் கருத்து கேட்டு பதிவு பண்ணுவீங்களா.

    // தேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஹார்மோன்களின் பிறழ்வுதான் காரணம் என்கின்றனர் // பிறகும் ஏன் அய்யா நடுநிலை.

    ஊடகங்களின் 24 மணிநேரத்தை/அச்சுகளில் நிரப்புவேண்டியதற்கான உளறல்களி லொன்று
    சான்றாக ’90 களின் தொடகத்தில் பல ஊடகங்களிலும் குடும்ப பெண்கள் தடம் புரள்கிறார்கள் என்ற தவறான கருத்து தொடர்ந்து வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்டது.


    ஆக்கப்பூர்வமான செயல்களில் , ஆக்கப்பூர்வமான போராட்டங்களில் மனிதன் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரியான நோய்கள் ஊக்குவிக்கப்ப ( விளம்பரபடுத்தப் ) படுகிறது .

    -இளசெ(இ.ஜெயக்குமார்)

    ReplyDelete
    Replies
    1. திரு இ. ஜெயகுமார் அவர்களுக்கு,                         அப்பன்-மகள், அம்மா-மகன் ஆகியோர் உறவு கொண்டால் அது குறித்து மருத்துவரிடம் விளக்கம் கேட்பீர்களா என்றும், விலங்குகளுடன் உறவு கொள்வது குறித்து என் கருத்து என்ன என்றும் கேட்டுள்ளீர்கள்!  இனிமேல் புதிதாக விளக்கம் கேட்கத் தேவை  இல்லை. ஏற்கனவே, சிக்மண்ட் பிராயிட் தொடங்கி உளவியல் வல்லுனர்கள் இவை குறித்தெல்லாம் விளக்கியுள்ளனர். பிணத்தோடு கூட உறவு கொள்ளும் பிறழ் மனநிலை உடையவர்கள் குறித்தும் மருத்துவப் பார்வைகள் உள்ளன. ஒன்றை ஏற்பதும், மறுப்பதும் வேறு.ஆனால் அவை குறித்தெல்லாம் பேசவே கூடாது என்று தடை விதிப்பது வேறு!

      Delete
    2. நுனி புல் மேய்பவரகளுக்கு, Sigmund Freud பற்றி எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. ஏதோ தனக்கு மட்டும் தெரிந்ததுதான் உண்மை என்று ஆணவ போக்கு, இதுவும் ஒரு மூட நம்பிக்கைதான். பிரச்சனைகளை பற்றி பேச பயப்படுகிறவர்கள் மீது எனக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு

      Delete
    3. இளசெ(இ.ஜெயக்குமார்)19 December 2013 at 14:35

      அய்யா ,
      நான் மேற்குறிப்பட்ட எவற்றைம் தவறென்று மருத்துவம் கூறவில்லை . பண்பாடு , சமுக சூழல் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டுப்பார்த்தாலும் அய்யா உளமாற சொல்லுங்க mental balance என்னாகும் .

      karate kid படத்தில் learn balance, balance is life யென்று வரும் . balance is everything என்பதை முழுமையாக நம்புகிறேன்.

      மேற்குறிப்பிட்ட வரையறைக்குள் வருபவர்களை தண்டிக்க வேண்டுமென்றோ , இழிவாக கருத வேண்டுமென்றோ கூறவில்லை . அவர்கள் தடுமாறுகிறார்கள் .இதை ஊக்கப்படுத்த கூடாது.

      '90 களில் ஊடகங்களின் நாடகங்களாக நான் குறிப்பிட்டுள்ளதை இவற்றோடு ஒப்பிடுங்க, மது , ஜோடியாக உலா செல்வது ,பார்டி,...... போன்றவற்றை பெரு நிறுவனங்கள், ஊடக புதுமை விரும்பிகள்... போன்றவங்க வஞ்சகமாக ஊக்குவிக்கிறாங்க.

      மற்றபடி மருத்துவமோ , மருத்தவர் counselling-கோ இதுதான் சரி.

      அய்யா உண்மைய சொல்லுங்க ஆண்-பெண் காதல்,திருமணம், குடும்பம்.... இதெல்லாம் இவங்களுக்கு வேண்டாமா.

      நான் மருத்துவரல்ல , மேலொட்டமாகவே sigmund freud-ஐ பார்த்திருக்கிறேன்(படிக்கவில்லை).

      இளசெ(இ.ஜெயக்குமார்).

      Delete
    4. இளசெ(இ.ஜெயக்குமார்)19 December 2013 at 15:33

      என்னுடைய மறுமொழிகளணைத்தும் அய்யா சுபவீ அவர்களுக்கானது.

      இளசெ(இ.ஜெயக்குமார்)

      Delete
    5. இளசெ(இ.ஜெயக்குமார்)20 December 2013 at 15:01

      சுபவீ அய்யா ,
      என்னுடைய அணைத்து மறுமொழிகளின் சாரம் இது தான் ' இப்பழகத்திற்குள்ளானவர்கள் எதிர் பாலிணத்தை எதிர் கொள்ள நம்பிக்கை யற்றவர்களாக உள்ளனர் ' என்பது தான் உண்மை .

      Delete
  2. இளசெ(இ.ஜெயக்குமார்)14 December 2013 at 12:55

    மிருகங்களுடன் உறவு பற்றி அறிவியல் கண்ணோட்ட மென்ன அய்யா
    இளசெ(இ.ஜெயக்குமார்)

    ReplyDelete
  3. மணிகண்டன்.14 December 2013 at 17:32

    'சமூக சேவை' என்ற பெயரில் புதுப்புது பிச்சனையை எடுத்து வைத்தக்கொண்டு எதையாவது உளற வேண்டாம், ஏனென்றால் உளறுவது எளிதான காரியம் ஆனால் அதன் விளைவுகள் மிகமிக மோசமானது என்பதை உங்கள் வயதில் உணராமலிருப்பது அதிர்ச்சியாக உள்ளது!. (உ.ம். தாங்கள் மற்றும் வீரமணி தாத்தாவின் உளறலால்,அரசாங்க சட்டத்தால் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தால் {அதோடு வரப்போகும் குறைந்த விலை தானியத்திட்டத்தால், நினைத்தால் தலை சுற்றுகிறது} எங்கள் நகர மற்றும் கிராமங்களில் அள்ள ஆளில்லாமல் நாறிக்கொண்டுள்ளது {நீங்கள் மற்றும் வீரமணி தாத்தாவா அந்த வேலையைச்செய்யப்போகீறீர்கள்?}. வாடா என்றால் ஓடி வந்து [மின்,கறுவாட்டுக்ககுழம்புக்காக.......] அள்ளியவர்கள் இப்போது கெஞ்சினாலும்,கொஞ்சினாலும் வருவதில்லை, நாய் மற்றும் பன்னியை நம்பி நாட்கள் நகர்கிறது, அதனால் கொங்கு நாட்டு நகரங்கள் மற்றும் கிராமங்களில் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் தொற்று நோய்களும் இப்போது இங்கு அதிகரித்தள்ளது, இந்த விளைகளை முன்பு எண்ணிப்பார்த்திர்களா?).
    அதனால் இந்தப் புதுப்பிரச்சனையில் தாங்கள் +/- வீரமணி தாத்தாவும் தலையை நுழைத்து இந்தப் புதிய நாத்தக் குட்டையைக்கிளறி சுகம் காணவேண்டாம், (மேலை நாட்டு இறக்குமதியான காதல் கத்திரிக்காயை நீங்கள் ஆதரிப்பபது போல் இதை ஆதரிக்க வேண்டாம்!), நம் நாகரீக்தைப் பாதுகாப்போம்!

    ReplyDelete
    Replies
    1. திரு மணிகண்டன் அவர்களுக்கு,                           யார் ஒருவருக்கும் அடக்கமாகவே விடை சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றவன் நான். ஆனாலும் உங்கள் விமர்சனத்தில் காணப்படும் உங்களின் 'சாதித் திமிர்' என்னைப் பொறுமை இழக்கச் செய்கிறது. மீனுக்கும், கருவாட்டுக் குழம்புக்கும் ஓடி வருகின்ற ஏழை மக்கள் இன்று 100 நாள் வேலைத் திட்டம் நோக்கி ஓடி விட்டதால், ஊரே நாறுகின்றது என்று எழுதும் மணிகண்டனே, ஊர் நாறாமல் இருக்க ஒரு வழி இருக்கிறது.  நாளை முதல் அவர்களின் கழிவுகளையும் சேர்த்து நீங்கள் சுத்தம் செய்து விடுங்கள்!..... 

      Delete
    2. I replied to Manikandan but that did not publish,I mentioned that 'PAPAN' attitude, Suba Vee mentioned that in tamil.

      Delete
    3. OMG (this is just an expression and nothing to do with religious belief)

      i was shocked to see mr.manikandan's castiest comment. only after seeing ayya's reply i got pacified. good going ayya. we are here to join hands with u.

      Delete
  4. மணிகண்டன்.14 December 2013 at 17:37

    'சமூக சேவை' என்ற பெயரில் புதுப்புது பிச்சனையை எடுத்து வைத்தக்கொண்டு எதையாவது உளற வேண்டாம் ஏனென்றால் உளறுவது எளிதான காரியம் ஆனால் அதன் விளைவு மிகமிக மோசமானது என்பதை உங்கள் வயதில் உணராமலிருப்பது அதிர்ச்சியாக உள்ளது!.
    இந்தப் புதுப்பிரச்சனையில் தாங்கள் +/- வீரமணி தாத்தாவும் தலையை நுழைத்து இந்தப் புதிய நாத்தக் குட்டையைக்கிளறி சுகம் காணவேண்டாம் (மேலை நாட்டு இறக்குமதியான காதல் கத்திரிக்காயை நீங்கள் ஆதரிப்பபது போல் இதை ஆதரிக்க வேண்டாம்!), நம் நாகரீக்தைப் பாதுகாப்போம்!

    ReplyDelete
  5. மனித சமுதாயம் பல்வேறு மாற்றங்களை அடைந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு மாற்றத்தையும் அடையும் போதும், அந்த\ மாற்றத்தின் விளிம்பில் உள்ள சமுகம் அதனை விமர்சிப்பதும் ஆதரிப்பதும் இயல்பானது. மேலும் values and customs எப்போதுமே சமுக அங்கீகாரத்தை பொறுத்தே இது சரி அல்லது தவறு என்று கொள்ளப்படும். ஓரின சேர்கை சரியா அல்லது தவறா என்பது என் வாதமல்ல. அய்யா அவர்கள் குறிபிட்டது போல், அது ஒரு குறை பாடு என்ற அளவில் அவை சிகிச்சை அளிக்க படவேண்டிய ஒரு நிலையாக நாம் கொள்ளல்லாம்.
    ஆனால் நம் புராணத்தில், அரியும் அரனும் பெற்ற பிள்ளையாக ஹரிஹரனை ஏற்றுகொண்ட முற்போக்கு சிந்தனையை வசதியாக மறந்து போய் ஓரின சேர்கையால்கலாச்சாரம் கேட்டு விட்டதாக கூப்பாடு போடும் கலாச்சார காவலர்கள் என்று காட்டிகொள்ளும் மதவாதிகளை என்ன சொல்ல.
    பெரியாரிய வாதிகளால் தான் இது போன்ற அறிவியல், மனித நேய கண்ணோட்டத்துடன் சிந்திக்க முடியும்.
    Hats off to you Sir, for registering your comments on such a delicate subject.

    ReplyDelete
  6. ஓரின சேர்க்கையை எதிர்பதானாலும் கூட அதனை மத வாதிகள் செய்ய முடியாது. காரணம் உலகெங்கும் கிருத்துவ சங்கங்களில், இது போன்ற செயல்கள் நடைபெறுவதாகவும்,நம் புராணத்தில் வருவதும் (ஹரிஹரன் for homosexuality, ராமன் பிறப்பு for beastiality ), புட்டபர்த்தி மடத்தில் இது போன்ற குற்றசாட்டுகள் எழுந்ததும் நமக்கு தெரியும். அதனை கண்டிக்காத எந்த மத வாதிக்கும் ஓரின சேர்க்கையை கண்டிக்கும் தார்மீக உரிமை இல்லை. அது ஒழுக்க கேடாக இருக்கும் பட்சத்தில், அதனை மத சார்பற்றவர்கள் தான் கண்டிக்கும் உரிமைபெற்றவர்கள்.

    ReplyDelete
  7. உலக சுகாதார நிறுவனம் தனது நாளிட்ட அறிக்கையில் ஓரின சேர்க்கையை மனப்பிரறழ்வு , மன நோய் பட்டியலிலிருந்து நீக்கியே விட்டது! சட்டமியற்றுபவர்கள் விவாதித்து இந்திய தண்டணை சட்டப் பிரிவு 337 குறித்து முடிவு செய்ய இந்திய அரசை வலியுறுத்தி போராடுவதும், மக்கள் திரள் ஆதரவைப் பெறுவதும் தான் அச் சமூகத்தின் இன்றைய தேவை. "குற்றமில்லை" என்பதற்காகவே, அது, இளைய தலை முறையினருக்கு பரிந்துரைக்கப்படவேண்டிய ஒன்றாக அச்சமூகத்தை நினைக்கவைத்துவிடக் கூடாது! 'உலகத்தோடு ஒட்ட ஒழுகலை' குறைத்து மதிப்பிடும் எந்த போக்கையும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு.ஆதிக்க நாய்கள் ஊழையிடும்.ஒதுக்கி வைத்து விட்டு தொடருங்கள் உங்கள் பணியை.'அள்ளப் பிறந்தவர்கள்' அல்ல மனிதர்கள்.அப்படிச் சொல்லத் துணிந்தவன் மனிதனும் அல்ல.

    ReplyDelete
  9. முத்துசாமி்.23 December 2013 at 19:46

    அய்யா நீங்கள் செட்டி இனத்தைச் சார்ந்தவர் என கேள்விப் பட்டேன்.எனக்கொரு சந்தேகம், நிங்கள் சூத்திரத் செட்டியா? அல்லது வைசியச் செட்டியா?.எழுத்தும் நடையும்,பேச்சும் முதலாம் வகையறா போலுள்ளதே.

    ReplyDelete
  10. இரத்தினவேல்8 January 2014 at 11:27

    இது போன்ற சமூக பிரச்சினைகளில், நீதி மன்றங்கள் தகுந்த உளவியலாளர்களின் கருத்துகளை ஆய்வு செய்து தீர்ப்பளிக்கலாம்.

    ReplyDelete