தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 23 August 2016

சுயமரியாதை - 12

சமூக ஆவணம்


தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் உலகம் முழுவதும் குறிக்கத்தக்க பல மாற்றங்கள் நடைபெற்றன. இருண்ட  உலகத்தின் மீது ஒளி படர்ந்த காலம் என்று அதனைக் கூறலாம். 

1855-60 கால கட்டத்தில்தான், மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்ட பொதுவுடமைக் கட்சி அறிக்கை, டார்வினின் பரிணாமத் தத்துவம் ஆகிய இரண்டும் வெளியாயின.  19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின் விளக்குகள் நடைமுறைக்கு வந்தன என்றாலும், மின்சாரம் பற்றிய தேடலும், ஆராய்ச்சிகளும் 1850களில்  தொடங்கி விட்டன.  அறிஞர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் 1856இல் வெளிவந்தது. அது வெறும் நூல் அன்று. 'நூல்களின்' ஆதிக்கத்தைப் புரட்டிப்போட்ட சமூக வரலாற்று ஆவணம்.


கால்டுவெல்லின் நூல் இரு பெரும் செய்திகளை உலகறியத்  தந்தது. இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமற்கிருதமே  தாய் என்னும் இமாலயப்  புரட்டை முற்றிலுமாக மறுத்தது.  இரண்டாவதாக, திராவிட மொழிக் குடும்பம் என்பது, இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மை உடையது என்னும் உண்மையை நிறுவியது. அத்தகைய திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழே மூத்த மொழியும் முதன்மையான மொழியும் ஆகும் என்றும் உரத்துச் சொன்னது.   

அதனால்தான், தமிழர் தவிர்த்த தென் இந்தியர்கள் எவரும் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளி என்றே கூறிக் கொள்கின்றனர். திராவிடர் என்று ஒப்புக் கொண்டால், அவர்கள் மொழியை விடத் தமிழே மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடும் இல்லையா?  திராவிடர் என்னும் சொல், தமிழருக்கே பெருமை சேர்க்கின்றது என்பதால் அவர்கள் அச்சொல்லைத் தவிர்க்கின்றனர். 

இந்தச் செய்திகள் ஒருபுறமிருக்க, இதற்குள் இன்னொரு முதன்மையான வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. 1856இல் முதல் பதிப்பை வெளியிட்ட கால்டுவெல் அத்துடன் நிறைவடையவில்லை. தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்த அவர் தொடர்ந்து அது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். மொழி ஆய்வோடு நின்றுவிடாமல், சமூக ஆய்வையும் அதனுடன் இணைத்துக் கொண்டார். அதன் விளைவாக, 1875 ஆம் ஆண்டு அந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். 

இரண்டாம் பதிப்பின் முகப்பிலேயே, "திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட பதிப்பு" (Revised and enlarged edition)  என்று குறித்திருந்தார்.  ஆனால் அவர் மறைவுக்குப் பின் 1913 ஆண்டு வெளிவந்த மூன்றாம் பதிப்பு, சுருக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. உண்மையான, கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பு மீண்டும் அச்சிடப்படவே இல்லை. மூன்றாம் பதிப்பே மீண்டும் மீண்டும் அச்சாகி வெளியாகிக் கொண்டிருந்தது.

இரண்டாம் பதிப்பு மறைக்கப்பட்டது அல்லது சுருக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்பதிப்பில் அவர் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களைப்  பற்றிப்  பேசியிருந்தார். ஏழாவது இயலின் நான்காவது பகுதி ஆதி திராவிடர்களைப்  பற்றியும், ஐந்தாவது பகுதி நீலகிரித் தோடர்களைப்  பற்றியும் பேசுகின்றது. அவர்களை இந்து மதம் ஒதுக்கி வைத்துள்ளது. அவர்களும் திராவிடர்களே என்கிறார் கால்டுவெல். இங்கே இந்து மதம் என்பதே பார்ப்பனிய அல்லது வைதீகப் புராணிக  மதமாக உள்ளது என்பதையும் அவர் குறிப்பிடுகின்றார்.  மேலை நாடுகளில் பணக்காரர், ஏழை என்னும் இரு பிரிவுகள் உண்டு. ஆனால் இங்கே ஆண்டான் , அடிமை என்னும் பிரிவுகளும் உள்ளன என்கிறார்.

இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் உள்ளடக்கி இருப்பதால்தான் அந்தப் பதிப்பு மக்கள் மன்றத்திற்கு வரவிடாமல் தடுக்கப்பட்டு விட்டது. 133 ஆண்டுகளுக்குப் பின், மறைந்த நாமக்கல் நா.ப. ராமசாமி அவர்களின் இல்ல நூலகத்திலிருந்து இரண்டாம் பதிப்பைக் கண்டெடுத்து, பொ.வேல்சாமி, பெருமாள் முருகன், வீ.அரசு ஆகியோர் கவிதாசரணிடம் தர, அவர் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச்  சமாளித்து 2008இல் வெளியிட்டுள்ளார். 

திராவிடம் என்பது வெறும் மொழிப் பெருமையன்று. சமூக  நீதிச்  சிந்தனையும்  அதனுள் அடக்கம். கால்டுவெல் இரண்டையும் இணைக்க முயன்றார். சமற்கிருத ஆதிக்க மறுப்பு, சாதி ஆதிக்க மறுப்பு என்னும் இரண்டும் கால்டுவெல், வள்ளலார் ஆகிய இரு பெரு மக்களிடமும் இருந்தது. இவற்றோடு தந்தை பெரியார், 20ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சேர்த்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கம் இம்மண்ணில் பிறந்தது.

(தொடரும்)
                                                                                  
நன்றி: நக்கீரன்


11 comments:

  1. கவிதாசரண்அவர்களால் வெளியிடப் பெற்ற நூல் தற்பொழுது கிடைக்குமா ஐயா
    எந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது என்பதையும் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. ஆனால் சுயமரியாதை,சமூக நீதி பேசுபவர்களில் பெரும்பாலனவர் இன்றும்தலித்துகளை கேவலமாக பேசுபவர்களாக,ஒடுக்குபவர்களாக இருக்கிறார்களே,ஏன்?

    ReplyDelete
  3. மொழி என்ற அளவில் சமஸ்கிருதம் வளமானது என்பதில் ஐயமில்லை. தமிழின் இறையாண்மையை மதிக்கும் எனில், அதைத் தமிழின் அரிய நட்பு மொழியாக ஏற்பது தமிழுக்கு உகந்ததுதான். ஆனால் பாம்புக்கு ஒழுக்கம் கடிவாயில் நஞ்சை உமிழ்வதுதானே? சமஸ்கிருதம் தொடுவாயிலும் நஞ்சுமிழும் நற்கருணைப் பாம்பு.
    -kEETRU.COM

    ReplyDelete
  4. SubaVee, I admire the reason behind the naming convention but the question that the Tamil Nationalist like me raises is, you are bringing a thesis from 18th century and using it wisely which is nothing but a mere word-play.

    Why on earth do I have to live with a naming convention that a foreign researcher gave ? I understand even the word "India" is coined by foreign forces but cant we just say, we are Tamilians and it still means that we are the genesis of the language / culture / civilisation ? Why live with a pseudo name ?

    "Paavendar is a pseudonym, Bharadhidasan (or even Subburathinam) is THE NAME". Clarity !!!

    Can you please show "ONE" proof, just one proof, that the word "Dravidian" exist in tamil literature (just one in sanga / needhi / bhakthi / kappiya ilakkiyam) ?

    ReplyDelete
    Replies
    1. Following stanza by shankaracharya has the word "dravida sisu", to my knowledge this is the first place the word dravida was coined.. but it is a proof that the word existed already and shankaracharya used it,

      tava stanyam manyE tuhinagirikanyE hrdayata:

      paya:pArAvAra: parivahati sAraswatamiva I

      dayAvatyA dattAm dravidasisurAsvAdya tava yat

      kavInAm praud’AnAm ajani kamanIya: kava yithA II

      Delete
    2. தமிழ் தேசியத்துக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் (Anonymous) சாதி அபிமானிகள் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பது பெரிய சேதியை சொல்கிறது. சாதி வெறியர்களின் காதுக்கு திராவிடர் என்ற சொல் ஒரு இடி போல் கேட்கிறது போலும். இந்த ஒரு காரணத்துக்காகவேனும் நாம் திராவிடர் என்று உரக்க கூறவேண்டும். திராவிடத்தின் வரலாற்று தேவை முன்னைவிட இப்போதுதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திராவிடபுயல் மையம் கொண்டு விட்டது.அதன் பயணத்தை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

      Delete
    3. பிழைப்புவாத திராவிட அற்ப பிறவிகளே ஆண்ட பரம்பரைகளை சீண்டாதீர்கள்!.

      Delete
  5. சுய மரியாதை என்ற தலைப்பை தூய தமிழில் அக மதிப்பு என மாற்றலாமே.

    ReplyDelete
  6. கால்டுவெல் அவர்களின் இரண்டாம் பதிப்பை எங்கு வாங்கலாம் ?

    ReplyDelete
  7. பெண்கள் சமூகத்தின் வரங்கள்,வைரங்கள்.ஆனால், சமூகத்தின் சில சாபங்களால் அந்த வரங்கள்,வைரங்கள் பொசுக்கப் படுகின்றன.பெண்களை படிக்க வைக்க வேண்டும்;வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும்.ஆனால்,நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை.மாறாக,பெண்கள் எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு,இல்லாத காரணங்களைக் கூறி சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகிவிடும் ஆபத்திருக்கிறது.விழுப்புரம் நவீனாவை ஒரு மிருகம் தீயிட்டு கொளுத்தியுள்ளது!. இதுபோன்ற ஆபத்துக்கு எதிராகவும்,மிருகங்களை ஆதரிக்கும் போலிப் புரட்சியாளர்களாக நடிக்கும் மிருகங்களை எதிர்த்தும் பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்.அத்தகைய தீயசக்திகளை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்கவேண்டும்!.இது தான் பெண்ணினத்திற்கு தமிழினம் செய்யும் உண்மையான சுயமரியாதை!

    ReplyDelete
  8. மிஸ்டர் பாலு ஆண்ட பரம்பரை,பேண்ட பரம்பரை என்று இங்கு எந்த குறிப்பிட்ட சமூகமும் இல்லை எங்கள் தமிழர்களை ஒடுக்கி வைத்திருந்த பரம்பரையெல்லாம் இனி ஒடுங்கிதான் ஆகவேண்டும். உங்கள் உருட்டல் மிரட்டெலெல்லாம் இனி பலிக்காது.இளம்பெரியார் ஐயா சுபவீ யின் வழிகாட்டுதல் இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்துவிட்டது.உங்கள் ஆதிக்க சாதி வெறியை தூக்கியெரிந்துவிட்டு மனித நேயத்தோடு மக்களோடு மக்களாக வருவதுதான் ஆ(பே)ண்ட பரம்பரைக்கு ஒரேவழி!

    ReplyDelete