தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 12 November 2017

தெருவுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது!


சென்ற ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இப்போது ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இன்றுவரையில் எந்தப்  பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, ஒரு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. இந்நிலையைக் கண்டித்து, கடந்த 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், அதனைக் கறுப்புநாள் என்று அறிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட,  மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் திமுக செயல்தலைவர், தளபதி ஸ்டாலின் தமைமை தாங்கினார். மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சில இடங்களைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


சிவகங்கை மாவட்டத் தலைநகரம் சிவகங்கையில், மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் தலைமையிலும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்  கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக  இலக்கிய அணித் தலைவர் தென்னவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு  உரையாற்றினர்

அப்போது தோழர் சுப. வீரபாண்டியன் ஆற்றிய உரையின் விவரம்:

பண மதிப்பிழப்பை எதிர்த்து இன்று நாம் தெருவுக்கு வந்துள்ளோம். ஆனால் ஏழை, எளிய மக்கள் தெருவுக்கு வந்து ஓர் ஆண்டு ஆகிவிட்டது. மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் தெருவுக்கு வந்துவிட்டது

1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது 10 பவுண்ட் தாள் செல்லாது என்றனர். அடுத்து, 1978இல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, 1000, 5000, 10000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அறிவித்தனர். இப்போது நரேந்திர மோடி ஆட்சியில் மூன்றாவது முறை அறிவிப்பு வந்துள்ளது.

முதல் இரு அறிவிப்புகளும் இப்போது வந்துள்ள அறிவிப்புக்கும்  இடையே ஒரு பெரும் வேறுபாடு உள்ளது. 10 பவுண்டு தாளும்,  78 இல், ஆயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய்த்  தாள்களும்  பெரும் செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. சாதாரண மக்கள் அவற்றைப் பார்த்தது கூட இல்லை. அதனால் ஏழை மக்கள் மட்டுமில்லை, நடுத்தட்டு மக்கள் கூட அன்று  பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றோ, பணக்காரர்கள் யாரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. நடுத்தட்டு, அடித்தட்டு மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். முதலைகளை அழிப்பதற்காகக் குளத்தைச் சுத்தம் செய்கிறோம் என்றனர். ஆனால் இறுதியில், முதலைகள் எல்லாம் தப்பி விட்டனமீன்கள் எல்லாம் இறந்துபோய் விட்டன

சென்றாண்டு பண மதிப்பிழப்பை அறிவிக்கும்போது அதற்கான காரணங்களாக மூன்று செய்திகளைப்  பிரதமர் கூறினார். 1. கறுப்புப்பண ஒழிப்பு 2. கள்ளப்பண ஒழிப்பு 3. தீவிரவாதிகளின் செல்வ வழி அடைப்பு. இந்த மூன்றில் எந்த ஒன்றேனும் இன்றுவரையில் நிறைவேறியுள்ளதா?

1000, 500 ரூபாய்த் தாள்கள் முடக்கப்பட்டபோது, மொத்தப் பணப் புழக்கத்தில் 86% முடக்கப்பட்டது. அப்படி முடங்கிய பணத்தின் அளவு 15.44 இலட்சம் கோடி என்று அரசு அறிவித்தது. இதில் குறைந்தது 3 இலட்சம் கோடி ரூபாயாவது வங்கிக்கு வராமல் தங்கிவிடும். அவை அனைத்தும் கறுப்புப்பணம் என்பது அரசின் கணக்கு.

ஆனால் என்ன நடந்தது? ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, 15.28 இலட்சம் கோடிரூபாய் வங்கிகளுக்கே திரும்பி வந்து விட்டது. அதாவது 99% பணம் மீண்டும் வந்துவிட்டது. அப்படியானால் எங்கே போனது கறுப்புப் பணம்? கறுப்புப்பணம் எங்கும் போகவிக்கல்லை. அவை அனைத்தும் வெள்ளைப் பணமாகி விட்டன. அவ்வளவுதான்! ரோஸ் வண்ணத்தில் 2000 ரூபாய்த் தாள் வந்தது. பச்சை வண்ணத்தில் 500 ரூபாய்  வந்தது. காவி நிறத்தில் 200 ரூபாய் வந்தது. ரோஸ் பணம், பச்சைப் பணம், காவிப்  பணம் எல்லாம் வெளிவந்து விட்டன. கறுப்புப்பணம் மட்டும் வெளிவரவே இல்லை.

கள்ளப் பணமாவது ஒழிந்ததா? புதிய 2000 ரூபாய்த் தாள் வெளிவந்த சில வாரங்களிலேயே அதே மாதிரி கள்ள நோட்டு வந்துவிட்டது. இப்போது அவை மேலும் எவ்வளவு பெருகியுள்ளன என்று தெரியவில்லை.

தீவிரவாதம் முடிந்துவிட்டதா? கடந்த ஓராண்டில்தான் காஷ்மீரில் கூடுதலாகப் போராட்டங்கள் நடந்துள்ளன. ஆக எல்லாவிதத்திலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மை அரசுக்கும் தெரியும். ஆனால் அதனை மூடி மறைக்கின்றனர்.  

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், நாட்டில் நில விற்பனைத் தொழில் (ரியல் எஸ்டேட்), கட்டிடத்  தொழில் எல்லாம் பெரும் சரிவைக் கண்டுள்ளன. நடைபாதை வணிகர்கள், அன்றாடங் காய்ச்சிகள், சிறுதொழில் செய்தோர் அனைவரும் தள்ளாடித் தத்தளிக்கின்றனர். பாபா ராம்தேவின் பதஞ்சலி வணிகம் மட்டுமே கொடிகட்டிப் பறக்கிறது.


இவ்வாறு தோழர் சுபவீ பேசினார். திமுக வின் மாவட்டத் துணைச்  செயலர் சேங்கை மாறன் கண்டன முழக்கங்களை முழங்கினார்.

8 comments:

  1. அனைவரும் மதிக்கும் சிதம்பரம் அவர்கள் கூட தான் இருக்கும் கட்சியின் காரணத்தால் இப்படி பேச வேண்டி இருப்பது காலத்தின் கோலம். சிறிய பணத்திற்கு சிறிய இடங்களை வாங்கி அதில் பல அடுக்கு மாடி வீடுகளை கட்டி மிக மிக பெரிய லாபம் பார்த்து வந்த ரியல் எஸ்டேட் என்ற கட்டுமானம் செய்பவர்கள் குறித்து காங்கிரஸ் ஏன் கவலை கொள்ள வேண்டும். அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால் பண மதிப்பிழப்பு எளிய மக்களுக்கு பயன்களைத்தான் எதிர்காலத்தில் தரப்போகிறது. ஆனால் சற்று காலம் தாழ்ந்து வரும் என்பது உண்மை. சிங்கப்பூர் போல அரசே ரியல் எஸ்டேட் செய்து அதில் வரும் பணத்தில் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்ய முடியும். 28% வரியானது பணம் உள்ளவர்களிடம் வாங்கினால் காங்கிரசுக்கு என்ன கவலை. இதுதானே கம்யூனிசம். வேலை வாய்ப்பு குறைந்து விட்டது என்று காங்கிரஸ் சொல்லுவது ஆடு நனையுதே என்று ஓனான் அழுவதை போல இருக்கிறது. பணக்கார ஏழை இடைவெளியை அதிகப்படுத்தியது பார்ப்பண டாடா ஐடிசி நிறுவனங்களை எல்லா பிஸினசிலும் ஈடுபட வைத்தது போன்ற கார்ப்பரேட் ஆதரவு கட்சியாக இருந்தது தவிர ஏழைகளுக்கு என்ன நன்மை காங்கிரஸ் செய்து இருக்கிறது. உலகமே கம்யூனிசத்தை நோக்கி செல்லும்போது இம்மாதிரி நடவடிக்கைகள்தான் ஏழைகளை தன் பக்கம் வரவைக்கும். நாம் பிஜேபியை எதிர்ப்பதாக இருந்தால் அது விளைநிலங்களை பாழ்படுத்தும் நாசகார கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும், இந்துத்துவத்திற்கும் பார்ப்பணியத்திற்கு எதிராகவும்தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆட்டுக்காக ஓணான் அழுததா?
      இது என்ன புதுக்கதை சிவ சுப்பிரமணியன் அய்யா?

      Delete
    2. தான் காங்கிரஸில் இருப்பதால் சிதம்பரம் அவ்வாறு பேசுவதாக சொன்னால், அது பிஜேபியில் இருப்பவர்களுக்கும் பொருந்துமல்லவா.

      சிறிய இடங்களை சிறிய பணத்துக்கு எந்த பில்டர் வாங்கி அடுக்குமாடி கட்டி பலமடங்கு லாபத்தை எந்த அறிவீன பில்டர் பார்த்தார்? பெரும்பாலும் Joint Venture Agreement மூலமாகத்தானே நடந்து வருது.

      28% வரியை பணமிருப்பவரிடமிருந்துதானே வாங்குகிறார்கள். அப்படியிருக்க தற்போது பலப்பல பொருட்களுக்கு ஏன் 28% லிருந்து வரியை குறைத்தார்கள்?

      இந்திய நாடு பல நாட்டின மக்களின் கூட்டுமுயற்சியானதாகவே இருக்கிறது அதை அவ்வாறே கருதவேண்டும். அதையே போற்றிட வேண்டும். ஆனால் அதை அவ்வாறு எண்ணிடாமல் சென்னையைவிட பரப்பு அளவில் குறைந்த சிங்கப்பூரை இந்திய நாட்டுடன் ஒப்பிட்டது உள்ளபடியே குறுகிய எண்ணம். இந்த இந்திய நாட்டை குறுக்கும் எண்ணம். முன்னர் இருந்த சோவியத் யூனியன் நாட்டுடன் இந்தியாவை ஒப்பிட்டிருக்கலாம். இங்கு உபி மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஆயினும் இந்த நாட்டு மக்களென்று எண்ண வைத்திருப்பது இந்த நாட்டின் பன்முக தன்மை மீதான அக்கரையே. அதை மோடி மிதிக்கிறார்.

      மத்திய ஆட்சியாளர்கள் தங்களுக்குள் ஹிட்லரை இதயம் கனிந்த ஹீரோவாக வைத்துக்கொண்டு பன்னாட்டு முதலாளித்துவ முதலாளிகளுக்கு சாமரம் வீசிக்கொண்டு ஆள்வது உங்களுக்கு கம்யூனிசமாக தெரிகிறதா? அய்யோ என் பாவப்பட்ட கம்யூனிசமே...நீ என்று மலருவாய்? நீ மலர்ந்து மனம்வீசுவது என்றோ அன்றுதான் ஓ இதுதான் கம்யூனிசமா? என்று எங்கள் இளவு காத்த கிளிகளுக்கு புரியட்டும்.

      ஆடு நனைகிறதே என்று கவலை படுவது ஓநாய். அந்த ஓநாய்தான் மத்திய ஆட்சி. காலம் தாழ்ந்து பலன் வருமாமே. எத்தனை காலம் தாழ்ந்து? தெளிவான நீர்நிலையில் தொடர்ந்து கல்லெறிந்துகொண்டே இருக்கிறது மத்திய பிஜேபி. எப்போது தெளியும்? ஒன்று இவர்கள் கல்லெறிவதை நிறுத்தவேண்டும் இல்லையென்றால் எறியும் இந்த ஆட்சி ஒழியவேண்டும்.

      முன்னது நடக்காது. பின்னதுதான் நடந்தாகவேண்டும்.

      Delete
  2. இப்படியே போனால் தெருவல்ல தெருக்கோடிதான்.

    ReplyDelete
    Replies
    1. பிஜேபி யினர் குறிப்பாக திரு. எஸ் ஆர் சேகர், திருமதி. வானதி சீனிவாசன், திருமதி. தமிழிசை, திரு. திருப்பதி நாராயணன் மற்றும் திரு.கே டி ராகவன் போன்றோர் பணமதிப்பிழக்கத்தை எதிர்ப்போர் ஊழல் அரசியல்வாதிகளும் பணத்தை முறையின்றி சம்பாதித்தோரும் மட்டுமேவென்றும் அதனால், பணமதிப்பிழக்கத்தினால் ஏற்பட்ட துன்பங்களை மறைப்பதற்காக உண்மைக்கு மாறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் இதை எதிர்ப்பதில்லை என்றும் மாறாக ஆதரிப்பதாகவும் கூறிவருகின்றனர். அடித்தட்டு மக்களை தோளோடு தோள் நின்றும், தினந்தோறும் மக்களை சந்திக்கும் அய்யா சுப வீ போன்றோருக்கு மட்டுமே தெரியும் தமிழக மக்கள் ஆழம் பார்ப்பதற்கு கயிற்றின் முனையை பிஜேபி போன்ற கத்துக்குட்டிகளிடம் கொடுத்திருக்கின்றனர். உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அதை உங்களுக்கு சாதகமாக எண்ணிக்கொண்டு ஆழ்கடலை நோக்கி போய்க்கொண்டிருக்கிறீர்கள் கயிற்றின் மறுமுனை சாமானியர்களான மக்களிடமே இருக்கிறது. உங்களின் மக்கள் விரோத போக்கு தொடருமேயானால் எம்மக்கள் கயிற்றை விட்டுவிடுவார்கள் நடுக்கடலில் நீங்கள் தத்தளிக்க வேண்டியது தான் பிஜேபி யினரே நன்றாய் தெரிந்து கொள்ளுங்கள்...
      ""தீதும் நன்றும் பிறர் தர வாரா"" ஆழ்கடல் உங்களை கபளீகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை...

      Delete
  3. https://www.ndtv.com/business/once-asias-top-market-indias-real-estate-is-in-deep-trouble-1774681?amp=1&akamai-rum=off

    ரியல் எஸ்டேட் விலை குறையும் என்று என்டிடிவி கடைசி வரியில் எழுதி உள்ளது. இது மக்களுக்கு லாபம்தானே. 90 லட்சத்தில் ஆரம்பித்து 40 லட்சத்தில் தனது உயர்ந்த அடுக்கு அபார்ட்மென்ட் வீடுகளை ஓஎம்ஆர் ரோடில் விற்ற (லாபத்திற்கு விற்றார்கள். இதுவே 90 லட்சத்திற்கு விற்று இருந்தால் எவ்வளவு லாபம்)
    ஹிரானந்தனி குழுமம் சேர்மன் சொல்கிறார் எங்களுக்கு 5 மாதமாக எங்கள் வியாபாரம் சரியில்லை என்று. சம்பாதிக்கும் காசு முழுமையும் இவர்களிடம் போய் விடுவதாலும் வேலை நிரந்தரம் இல்லாத சூழ்நிலை நிலவுவதாலும் இன்றைய இளைஞர்கள் வீடு வாங்காமல் கார் வாங்கி வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார்கள். இது ஒரு முக்கிய காரணம்.

    ReplyDelete
  4. “ எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்” என்று ஒரு சினிமா நகைச்சுவைக்கு பொருத்தமானவர்கள் நம் மக்கள். ஆட்சிக்கு வந்ததும் வராததுமாய் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதிக்கு ஆளுநர் பதிவி கொடுத்து மற்ற நீதிமான்களுக்கு ஒரு செய்தி சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அம்பானியின் சகலை நியமிக்கப்படுகிறார். குஜராத்தில் தமக்கு தலைமைச் செயலாளராக இருந்தவர் தேசிய தலைமை தெர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். கார்போராட்டுகளும் கருப்புப்பன முதலைகளும் தமது கட்சியினருக்கும் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டு ஐநூறு ஆயிரம் செல்லாது என்று சொல்லிவிட்டு புதிய நோட்டுகள் வெளியீடு. அதில் ஆயிரம் குளறுபடிகள். பாதுகாப்பு அம்சம் இருக்கிறதாம், புதிய நோட்டுகளில். கருப்புப்பன முதலைகள் பதுக்க பாதுகாப்பானது என்பதைதவிர என்ன பாதுகாப்பு. முந்தைய நோட்டை அச்சடிக்க அச்சகம் தேவை. புதிய நோட்டை செராக்ஸ் எடுத்தாலே போதுமானது போல் இருக்கிறது. சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியின் பேக்கிங்குடன் உள்ளன. ஆனால் எந்த வங்கியிலிருந்து வந்தது என்று ரிசர்வ் வங்கிக்கே தெரியாது. பழைய நோட்டுக்கள் எவ்வளவு வந்தது என்று ஒரு வருடமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், முடியவில்லை. திருப்பதி உண்டியலை எண்ணுபவர்களை கொண்டு விட்டிருந்தால் இந்நேரம் எண்ணி முடித்திருப்பார்கள். எந்த ஒரு வழக்கையும் ஐந்தாண்டுக்குமுன் முடிக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலும், வாய்தாமேல் வாய்தா. மிக மோசமான சாலைகள். சென்னியாயைத்தவிர மற்ற ஊர்களில் ஒழுங்காக உள்ள சாலையை காட்டினார் ஆயிரம் பொற்காசுகள் வழங்கலாம். ஆனாலும் எதிர்கட்சிகள் தூக்கம் கலையவில்லை. ராகுல் காந்தி ஒரு பார்ட் டைம் அரசியல்வாதிபோல் செயல்படுகிறார். இன்னும் வேகம் தேவை. ஆற்றல்மிக்க கம்யுனிஸ்ட்டுகள் சூட்கேசுகளுக்குள் அடங்கிவிடாமல் எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய தருணம். காங்கிரஸ் தலைமை வேகமேடுக்கவேண்டும். மம்தா, லல்லு போன்றவர்களை ஒர்ங்கினத்து செயல்படவேண்டும். புரியாத மக்களுக்கு புரியவைக்கவேண்டும். புரிந்த மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவேண்டும். தி.மு.க.வில் களைஎடுக்கவேண்டும். முக்கியமாக முறைசாரா இளவரசி அண்ட் கோ அப்புறப்படுத்தப்படவேண்டும். செயல் தலைவர் மட்டுமே செயல்பட்டால் போதாது. மற்றவர்களும் செயல்படவேண்டும். தமிழ்நாடு அசிங்கமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறது. நாநூற்றிதொன்னூறு ஒரு குடிகாரன் அண்டா குண்டான்களை அடகு வைத்து குடிப்பதுபோல் அரசு பஸ்களையும் கட்டிடங்களையும் தமிழக அரசு அடகுவைத்து எம்.ஜி.யார். நூற்றாண்டுவிழா கொண்டாடுகிறது. நல்லவேளை பேருந்து பயணிகளை அடகு வைக்கவில்லை என்று பெருமைப்படுவோம். அப்படியே வைத்தாலும் பெருமைப்படக்கூடிய மக்கள்தாம் மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளம். வாழ்க நாமம்.

    ReplyDelete
  5. Mr SubaVee you are unleashing bunch of lies in the last TV discussion program(saying DMK didn't align with BJP in election!,but only supported it when it fell!!).Unfortunately Banu Goms is not aware of the truths to refute your lies.Not once but twice DMK align with BJP in elections.During 1999 parliament election DMK align with BJP and not only that during 2001 Assembly polls also DMK aligned with BJP and which helped BJP to get 4 MLAs including your 'bete noire' H.Raja to became MLA in TN assembly!.If you spoke unintentionally correct yourself...

    Further you have stated DMK didn't align with national party in 1989 and 1996 election!.In 1996 DMK aligned with Janatadal in election and got whitewashed by Jayalalitha in TN [yet got a cabinet minister post for Murasoli Maran as he was Rajya sabha MP then!] and in 1996 also DMK aligned with Janatadal and it fell in 1997 [since DMK refuse to resign from cabinet due to Jain commission report as asked by congress{but now DMK is its ally}].

    ReplyDelete