தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 15 September 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (3)


எம்.ஜி.ஆரும் புலிகளும்

      1970-80 கால கட்டத்தில்,சிறு சிறு குழுக்களாக இருந்த நிலை மாறி, ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகத் தொடங்கின. முதலில் தோன்றிய மூன்று பெரும் அமைப்புகள் என ஈராஸ், விடுதலைப் புலிகள், டெலோ ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். 


ஆனால் அதே சமயத்தில் உருப்பெற்றிருந்த புதிய தமிழ்ப் புலிகள் என்னும் அமைப்பைப் பற்றிய சரியான செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. தலைவர் பிரபாகரனால் முதலில் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே அது என்று சிலர் கூறுகின்றனர். எனினும் அதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. தனபால் சிங்கம் (எ) செட்டி என்பவர்தான் அதனைத் தொடக்கினார் என்றும், அது மிகக் குறைந்த காலம் மட்டுமே இருந்தது என்றும் கூறுகின்றனர். 

தனபால் சிங்கம் குறித்துப் போராளிகள் பலருக்கே தெரியவில்லை. ஆனால் அவருடைய தம்பி ஈழப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர்களில் ஒருவராக உள்ளார். புலிகள் இயக்கத்தின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவரும், 83 ஆம் ஆண்டு ராணுவத்தின் மீது நடைபெற்ற தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவருமான தளபதி செல்லக்கிளியே அவருடைய தம்பி. அவர் வீட்டில் இருந்த எருமை மாடு ஒன்றினை விற்றே, புலிகள் தங்களின் முதல் துப்பாக்கியை வாங்கினர் என்பது, புலிகள் ஆதரவாளர்கள் அனைவரும்  அறிந்த செய்தி. 


அவருடைய அண்ணன்தான் TNT என்று சுருக்கமாக அறியப்பட்ட புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கியவர் என்று தெரிகிறது. டி.என்.டி என்பது ஒரு வெடி மருந்துப் பொருளின் பெயராகவும் இருப்பதை நாம் அறிய முடிகிறது. அதற்காகவே அப் பெயர் சூட்டப்பட்டும் இருக்கலாம். ஆனால் அது சில ஆண்டுகள் மட்டுமே இருந்த காரணத்தினாலும், பெரிய சாதனைகள் எதனையும் செய்துவிடாத காரணத்தினாலும் வரலாற்றில் பெரிதாய் இடம்பெறவில்லை. புலிகள் என்னும் பெயரை முதலில் தாங்கிய இயக்கம் என்ற ஒன்றைத் தவிர.
                     
கூடுதல் உரிமை,சுயாட்சி ஆகியனவற்றைத் தாண்டி, தமிழ் ஈழ விடுதலை என்பதையே ஆயுதப் போராளிக் குழுக்கள் முன்வைத்தன.
                     
சுந்தரலிங்கம்
ஐம்பதுகளிலேயே தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்த பெருமை அன்றைய அரசியல் தலைவர்களில் ஒருவரான சுந்தரலிங்கத்தைச் சாரும். அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் என்றே அவர் அழைக்கப்பட்டார். ஜி. ஜி. பொன்னம்பலம் காலத்து அரசியல்வாதி அவர். ஆனால் பிற்காலத்தில் அவரும், பொன்னம்பலமும் சமரசம் செய்து கொண்டு, சிலோன் அமைச்சரவையில் அமைச்சர்களாகி விட்டனர் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.
                     
அறப் போராட்டத்தை முன்வைத்த தலைவர்கள் கூட, 1977 ஆம் ஆண்டு தமிழ் ஈழம்தான் தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பதை நாம் அறிவோம். அத் தீர்மானத்தை முன் நிறுத்தியே அன்று அனைத்துத் தமிழ்க் கட்சிக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. தனி ஈழத்தை ஏற்போர் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றுதான் தேர்தல் கூட்டங்களில் பேசினர். மக்களும் தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தனர். 19 இடங்களில் போட்டியிட்ட தமிழர் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
                       
இதனை நினைவில் கொண்டே, மாவீரர்கள் நாள் உரை ஒன்றில், "மக்கள் அளித்த தீர்ப்பை நெஞ்சில் ஏந்தியே இத்தனை ஆண்டு காலம் நாங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர்க்களத்தில்   நிற்கின்றோம்" என்று பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.
                       
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பாகவே ஈழக் குறிக்கோளை நெஞ்சில் ஏந்திப் போராளிக் குழுக்கள் களத்திற்கு வந்துவிட்டன. அதற்கான செயல் திட்டங்களிலும் இறங்கிவிட்டன. 
                       
போராடுவதற்கு ஆயுதம் வேண்டும். ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும். அதற்கான நிதி நடவடிக்கைகள் வேண்டும். அந்த நடவடிக்கைகள் அரசு வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதில் தொடங்கின. 
                       
ஈராஸ் தலைவர் பாலகுமார் அப்போது ஒரு வங்கி அதிகாரியாக இருந்தார். அவர் வேலை செய்த வங்கியில் ஒரு பணப் பறிப்பு நடைபெற்றது. பாலகுமாரைக் கட்டிப்போட்டுவிட்டுப் பணத்தைச் சிலர் எடுத்துச்  சென்றனர். பிறகு வழக்கு நடைபெற்றபோது, பாலகுமாரும் அதற்கு உடந்தை என்று சொல்லி அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
                       
அடுத்ததாக இன்னொரு பெரிய வங்கிக் கொள்ளை வழக்கு நடைபெற்றது. அதற்கு நீர்வேலி வங்கிக் கொள்ளை வழக்கு என்று பெயர். ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அவ் வழக்கு தொடர்பாகத் தேடப்படுபவர்கள் என்று சிலரது படங்களைச் சிங்கள அரசு வெளியிட்டிருந்தது. அந்தப் படத்தில் பிரபாகரன், முகுந்தன் உள்ளிட்ட போராளிகள் சிலர் இருந்தனர். ஆனால் அப்படம் அங்கு வெளியிடப்பட்டபோது பிரபாகரன், முகுந்தன், ராகவன், சிவனடி, விசுவேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்தனர்.  
  
தொடக்க காலத்தில் தமிழகம் வந்த போராளிகளுக்கு, குறிப்பாகப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தவர்களில் முதன்மையானவர் சி. பா. ஆதித்தனார். இச் செய்தியைப்  பம்பாய் தமிழ்மன்னன் கூற நான் அறிந்தேன். அப்போது பம்பாய் தமிழ் மன்னனைப் பல கூட்டங்களில் சந்தித்திருக்கின்றேன். கட்டையான உருவம். கனத்த குரல். அன்று இளைஞர்களாக இருந்த எங்களைப் போன்றவர்களிடம் அன்பாகப் பழகுவார். பாரதிதாசனின், "பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை" பாடலை  அவர் சொல்லித்தான் நான் முதலில் கேட்டேன். ஆதித்தனாரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இளைஞர்கள் நீங்களெல்லாம் வீரமாக இருக்க வேண்டும் என்பார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. இப்போதும் அவர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.
                               
அதே தமிழ் மன்னன்தான்,  போராளிகள் பலரை செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தவர் என்பதை அண்மையில் அறிந்தேன். அப்போது செஞ்சியார் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். அவருடைய சட்டமன்ற விடுதி அறையில்தான் (அறை எண் 531) போராளிகள் பலர் தங்கி இருந்தனர் என்று எங்களுக்குச் சொல்வார்கள். அது உண்மையா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் ஒரு கூட்டத்தில் அய்யா ஈழவேந்தன் அறை எண் 531 தான் எங்கள் அலுவலக அறை என்று வெளிப்படையாகவே கூறினார். அதற்காக அவரைப் பிறகு நண்பர்கள் கடிந்து கொண்டனராம். 
                         
இவ்வாறு தமிழ் மண்ணில் காலூன்றிய போராளிகள், தனி மனிதர்களைத் தாண்டி, அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெறத் தொடங்கினர். 
                         
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க.,ஆசிரியர் வீரமணி தலைமையிலான  திராவிடர் கழகம், நெடுமாறன் தலைமையிலான தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சி ஆகியன ஆதரவு கொடுத்தன. கலைஞர் தலைமையிலான தி.மு.க. டெலோவை ஆதரித்தது. ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், தனிப்பட்ட பலரின் ஆதரவு இருந்தது. நான் அறிந்தவரையில் பேராசிரியர் இளவரசு, பேராசிரியர் பெரியார்தாசன், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன், அரணமுறுவல், கோவேந்தன், எழில் இளங்கோவன், வைகறைவாணன், பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியன், அறிவுறுவோன், எழிற்கோ முதலான பலரும் ஈரோஸ் ஆதரவாளர்களாக இருந்தனர்.
                           
1980 க்குப் பிறகு, ஈரோஸ் அமைப்பிலிருந்து பத்மநாபா பிரிந்துபோய் ஈ.பி.ஆர்.எல்.எப். என்னும் அமைப்பைத் தொடங்கினார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து முகுந்தன் (எ) உமா மகேஸ்வரன் பிளாட்  என்ற  அமைப்பை உருவாக்கினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவு ஈ.பி.ஆர்.எல்.எப்.பிற்குக் கிடைத்தது. பாவலேறு பெருஞ்சித்திரனார், தமிழ்மண் இளவழகன் போன்றோர் பிளாட் அமைப்புக்கு ஆதரவாக இருந்தனர். தொடக்கத்தில் புதுக்கோட்டைப் பாவாணன் கூட பிளாட் அமைப்பின் ஆதரவாளராக இருந்தார் என்றே நினைக்கிறேன்.
                           
எந்தக் குறிப்பிட்ட அமைப்பையும் ஆதரிக்காமல், பொதுவாக எல்லா ஈழப் போராளிகளுக்கும் ஆதரவு என்னும் நிலையில் மிகப் பலர் இருந்தனர். 87 ஆம் ஆண்டு வரையில் நான் அந்தப் பட்டியலில்தான் இருந்தேன். திலீபன் மரணம் என்னைத் திசை மாற்றியது. திரைப்பட இயக்குனர் வி.சி. குகநாதன், கவிஞர் மு.மேத்தா ஆகியோரின் நட்பும், பெரியார் திடல் கூட்டங்களும், அய்யா நெடுமாறன் அவர்களின் வழிகாட்டலும் என்னை முழுமையான புலிகள் ஆதரவாளன் ஆக்கின.   

தொடக்க நிலை ஆதரவுகளில் மாற்றங்களும் பின்பு நிகழ்ந்துள்ளன. அய்யா பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் பிற்காலத்தில் தீவிரமான புலிகள் ஆதரவாளர்கள் ஆயினர். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகும், மிக நெருக்கடியான கட்டங்களில் கூடப் பெருஞ்சித்திரனார் புலிகளுக்கு ஆதரவாகக் கவிதைகள் எழுதினார். அதற்காக அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. பொதுவுடமைக் கட்சியினர் பத்மநாபா தலைமயிலான .பி.ஆர்.எல்.எப் இயக்கத்துடன் நெருங்கிய நட்பினைக் கொண்டிருந்தனர். அதே வேளையில் அக் கட்சியுடன் தொடர்புடைய புகழ் பெற்ற வழக்கறிஞர் என்.டி. வானமாமலைதான், பாண்டி பசார் துப்பாக்கிச் சூடு வழக்கில், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்காக வழக்கை நடத்தினார். ஒருவேளை, அப்போது எம்.ஜி.ஆரும், பொதுவுடமைக் கட்சியினரும் நெருக்கமாக இருந்தததால் அவ்வாறு நடந்திருக்கலாம்.  
                       
தி.மு.கழகம் டெலோவை ஆதரித்தபோதும், தி.மு..வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ முழுக்க முழுக்கப் புலிகளின் ஆதரவாளராக இருந்தார். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்ன்னவென்றால், அவருடைய அப்போக்கைக் கட்சித் தலைமை மறுக்கவில்லை என்பதுதான். நாடாளுமன்றத்தில் ஈழத்திற்கும், புலிகளுக்கும் ஆதரவாக வைகோ முழங்கியது உண்மைதான்.  ஆனால் அது வைகோவின் குரல் மட்டுமன்று, அது தி.மு.. வின் குரலும் என்பதை மறந்துவிடக் கூடாது. தி.மு.. வின் கொரடா (whip) அனுமதியின்றி அவரால் அப்படி எல்லாம் பேசியிருக்க முடியாது.       
               
அது மட்டுமின்றி, டெலோவைத் தாண்டிப் பிற இயக்கங்களுக்கும் தி.மு.. தன் ஆதரவைப் பல நேரங்களில் கொடுத்துள்ளது. அது குறித்து விரிவான செய்திகளை நாம் பின்னால் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, ஒரு வியப்பான செய்தியை இங்கு நாம் பகிர்ந்து கொள்ளலாம்.  
                     
எம்.ஜி.ஆர். முழுமையான புலிகள் ஆதரவாளர் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. ஆனால் அவருடைய நிலைப்பாட்டிலும் ஒரு கட்டத்தில் சில மாற்றங்கள் வந்துள்ளன என்று தெரிகிறது. இச் செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். முதன் முதலில் படிக்கும்போது, என்னாலும் நம்ப முடியவில்லைதான். ஆனால் உரிய ஆதாரம் கிட்டியபோது நம்பாமல் இருக்க முடியவில்லை. 

1987 ஆம் ஆண்டில்,புலிகள் குறித்த  எம்.ஜி.ஆர். நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது பற்றி, இந்தியாவின் மேனாள் வெளிநாட்டுத் தூதுவர்  ஜி. பார்த்தசாரதி தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.     
                 
இந்திரா காந்தி காலத்தில் , ஈழச் சிக்கலைக் கையாண்டு கொண்டிருந்தவர்கள் மூவர். பி.வி.நரசிம்ம ராவ், அலெக்சாண்டர், ஜி. பார்த்தசாரதி ஆகிய அம்மூவரும் தென்னாட்டவர்களாக இருந்த காரணத்தால், சரியாக அதனைக் கொண்டு சென்றனர் என்றும், ரமேஷ் பண்டாரி, தீட்சித் போன்றவர்கள் வந்த பிறகு பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டதென்றும் நெடுமாறன் அவர்கள் அடிக்கடி கூறுவார். அம்மூவருள்ளும் கூட, ஜி. பார்த்தசாரதி தனி இடம் பெற்றவர் என்பது பொதுவான கருத்து. அந்தப் பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரைதான் எம்.ஜி.ஆர் குறித்த வியப்பான செய்தியை நமக்குத் தந்துள்ளது.    
                     
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்களைத் தன் தூதுவராகச் சென்று பார்த்து வரும்படி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, ஜி. பார்த்தசாரதியை அனுப்பியிருந்தார். பால்டிமோர் மருத்துவமனையில் அவரைச் சந்தித்து உரையாடியது பற்றிய கட்டுரையே அது. அக் கட்டுரையில் உள்ள முதன்மையான பகுதியையும், அதற்கான சான்றையும் அப்படியே கீழே தந்துள்ளேன்:                         
"பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில், 1987 அக்டோபரில், ஓர் இதமான, வெயிலாக இருந்த காலைப் பொழுதில் அவரைச் சந்தித்தபோது, உடல் நலம் பெற்று, அவர் சென்னைக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ஒரு வெளியுறவு அதிகாரிக்கு, அது ஒரு சங்கடமான தூதுப் பயணமாக இருந்தது. வான்கூவரில் (கனடா) நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், ராஜீவ் காந்தி என்னைப் பால்டிமோர் சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் குறித்து, எம்.ஜி.ஆரிடம் விளக்கி வருமாறு பணித்திருந்தார். இந்திய அமைதிப் படை குறித்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) குறிப்பிடத்தக்க மௌனம் காட்டி வந்ததால், இந்திய அமைதிப் படைக்குத் தமிழ் நாட்டில் அரசியல் எதிர்ப்பு எழுச்சிக்கான அறிகுறிகள் தெரிந்தன.                   
என் விளக்கங்கள எம்.ஜி.ஆர் பொறுமையுடன் கேட்டார். பிறகு, இரு முக்கியமான குறிப்புகளைக் கூறினார். முதலில், உருவாகவிருக்கும் இடைக்கால நிர்வாகக் குழுவில், இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு மிகத் தாராளமாக இடமளித்து விட்டதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப். இன்னும் கூடுதல் பிரதிநிதித்துவம் பெறும் தகுதி உள்ளது என்றும் தான் உணர்வதை வெளிப்படுத்தினார். இரண்டாவதாக, நம் நாட்டு நலன் அடிப்படையில், ஸ்ரீ லங்காவில் பிரதம மந்திரி (ராஜீவ் காந்தி), தேவை எனக் கருதி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் தான் ஆதரிப்பதாக நான் பிரதமரிடம் கூற வேண்டும் என்றார்.”(சான்று: http://www.rediff.com/news/2000/jul/17gp.htm)
  இந்த செய்தியோடு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியையும் சேர்த்து வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு. அதனையும் அடுத்துக் காண்போம்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)



பின்குறிப்புகள்:
-----------------------
() சென்ற பகுதியில் 'தமிழ் மாணவர் பேரவை' அமைப்பை நிறுவியவர் பொன் சத்தியநாதன் என்று தவறாக எழுதப்பட்டுவிட்டது. அதனைப் பொன் சத்தியசீலன் என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம்.

() இத்தொடரில் செய்திப் பிழைகளோ, விடுபட்ட முதன்மைச் செய்திகளோ இருப்பதாகக் கருதினால் உடனே தெரிவிக்க வேண்டுகின்றோம். அவற்றைச் சரிபார்த்துத் திருத்தங்களை அறிவிக்கின்றோம்.



5 comments:

  1. இதை இதை இதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.. வரலாறுகள்.. உண்மைகள்.. மிக்க நன்றி... வரலாற்று ஆதாரங்கள் அருமை.. எம்ஜியார் பதிலும் இன்றே சொல்லி இருந்தால், மிக நன்றாய் இருந்திருக்கும்... தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete
  2. வரலாறு தெரியாத, இளைய வாக்காளர் பலர் தவறான வழிகாட்டுதலின்பால் ஈர்க்கப்பட்டு அவர்கள்(நெடுமாறன், சீமான்) சொல்வதையே உண்மையென நம்பி உணர்ச்சிவயப்பட்டு பேசியும், இணையத்தில் எழுதியும் வருகின்றனர்.

    அய்யாவின் கட்டுரைகள் அனைவரின் பார்வைக்கும் பரப்பப்பட வேண்டும்.அப்போதுதான் வரலாற்றின் உண்மை விளங்கும்.

    ReplyDelete
  3. எம்.ஜி.ஆர் ஈழத்திற்காக உண்மையில் செய்தது என்ன என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது உங்களின் இந்தப் பதிவு...

    ReplyDelete
  4. எம்.ஜி.ஆர் மேல் குருட்டு பக்தியில் உழல்கிற கிராமத்து ரசிகனையும் அவர்மேல் பற்றுதலிலுள்ள பெரும்பாண்மை வாக்காளனையும் கவரவே இன்று வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர் அவர் புகழை பாடித் திரிகின்றனர்.

    அன்றைய காலகட்டத்தில் இவர்கள் அனைவரும் எம்ஜிஆருடன் கைகோர்த்து திரிந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனர்.

    ஜெயலலிதாவிற்கு பின் என்ன? என்ற கேள்விக்கான பதிலில் இவர்களது செயல் உள்ளது. பெரிய கட்சியின் தொண்டர்களை வளைப்பதில் காட்டுகிற முனைப்புதான் இவர்களின் எம்ஜிஆர் புகழ் பாடும் காலட்சேபம். கலைஞரை திட்டுவதுதான் அன்றுமுதல் இன்றுவரை அதிமுக-வின் கொள்கை.அதை கவனமாக இவர்களும் பின்பற்றுகின்றனர்.

    இந்த பதிவு அர்த்தமுள்ளதாக உள்ளது. அம்மூவரையும் நேரடியாக சந்திக்க இந்த பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete
  5. எம்.ஜி.ஆருக்கென்று தனிப்பட்ட கருத்தோ, கொள்கையோ என்றுமே இருந்தது கிடையாது. இந்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு இணங்கி செயலாற்றுவதை மட்டுமே தன் கொள்கையாக கொண்டிருந்தவர் அவர். அதற்கு மற்றுமொரு சான்றுதான் இக்கட்டுரை.

    ReplyDelete